சனி, 7 நவம்பர், 2020

ஒரு சிங்கள மாணவிக்கு யாழ்ப்பாணத்தில் படிப்பதற்கு ஏன் பிடித்திருக்கிறது?

நம்ம Jaffna : யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற சிங்கள மாணவி ஒருவர் சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் யாழ்ப்பாணத்தைப்பற்றி கூறிய விடயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.சிங்கள மொழியில் இடம்பெற்ற இந்த உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பினை இங்கு இணைக்கின்றோம். 

யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயக பிரதேசங்கள் குறித்து தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் மத்தியில் இந்த மாணவியின் வெளிப்படையான கருத்துக்கள் இங்கு காண்பிக்கப்படவேண்டியதாகும்.

கேள்வி:- உங்களுக்கு கிட்ட உள்ள பல்கலைக்கழகம் எது?
மாணவி:- சபரகமூவா பல்கலைக்கழகம்
கேள்வி:- இரத்தினபுரி மாணவர்களுக்கு சபரகமூவா பல்கலைக்கழகம் கிட்ட, கொழும்பில் உள்ள மாணவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழகம் கிட்ட, பேராதெனியாவில் உள்ளவர்களுக்கு பேராதெனிய பல்கலைக்கழகம் கிட்ட, இரத்தினபுரி, பேராதெனியவில் உள்ளவர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழகம் மிகவும் தொலைவில் உள்ளது. கொழும்பில் உள்ளவர்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மிகவும் தூரத்தில் உள்ளது. அப்படி இருக்கும் போது உங்களுக்கு எப்படி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கிட்ட ஆகியது?
மாணவி:- எனக்கு மிகவும் ஆசை தமிழ்த்திரைப்படம் பார்ப்பதற்கு, அழகான உலகம் இருப்பது போல தெரிந்தது எனக்கு, அங்கு சென்றால் அப்படி வாழமுடியும் போல எனக்கும் தோன்றியது. நான் விரும்பியே அங்கு சென்றேன், முதலில் எனக்கு வவுனியா பல்கலைக்கழகத்திற்கு (applied science)தான் அனுமதி கிடைத்தது, நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு (Bio science ) விண்ணப்பம் செய்தேன், அதனால் தான் எனக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது. 
கேள்வி:- யாழ்ப்பாணத்திற்கே போகவேண்டும் என்று எண்ணியது எதற்காக?
மாணவி:- எனக்கு யாழ்ப்பாணம் மிகவும் பிடிக்கும், முன்னர் எனது வீட்டுக்கு முன்னால் எம்பிலிப்பிட்டிய-யாழ்ப்பாணம் பஸ் போகும். அதை பார்க்கும் போது எனக்கு ஆசை வந்தது யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் போல.
 
கேள்வி:- எம்பிலப்பிட்டிய-யாழ்ப்பாணம் பஸ் ஓடிய காலத்தில் நீங்கள் பாடசாலை போயிருப்பீர்கள் அந்த காலத்தில் நிலைமை எப்படி?
மாணவி:- அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தை பற்றி நல்ல விதமாக அறிந்திருக்கவில்லை, ஆனாலும் அங்கு சென்றவுடன் விளங்கியது நாங்கள் நினைத்தது போல கறுத்தப்பேய் அங்கு இல்லை என்று.
 
கேள்வி:- பல்கலைக்கழகம் என்பது?
மாணவி:- எங்களுக்கு தெரியாத பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.
 
கேள்வி:- கல்வி, யாழ்ப்பாணம் ஆகிய இரண்டும் இணையும் போது எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. (கேள்வி கேட்பவர் ஒரு சிங்கள  பாடலை ஒலிபரப்பு செய்கிறார்) உங்களுக்கும் ஞாபகம் வருதா என்று பாருங்கள்.
பாடல்:
“வடக்கு எல்லையிலிருந்து வரும் காற்றிலே ....!
கொழுந்துவிட்டு எரியும் மடு மாதாவே (தேவாலயம்)
கண் இமை ஓரத்தில் கண்ணீரை மறைக்கும்
சரோஜா என் மகளே...
வெடி ஓசையால் உனது சின்னஞ் சிறிய
எழுத்துக்கள் கோணிப்போக
என்ன நான் செய்வது மகளே
ஆசிரியை நான் மாணவி ஆவாய் நீ
ஆனபோதும் நாம் ஒரு வகுப்பிலே
கழுத்தின் மேல் கைகள் போட்டு சிரித்த
உனது சின்னஞ் சிறிய நண்பர்கள் எங்கே..
கருணை இல்லாத உலகைக் கண்டு
எல்லையை விட்டு அவர்களோ தொலைவிலே
முகாமில் இருக்கும் அப்பா
கனவில் வந்து கைகளை நீட்டும் வரை
யாருக்கும் நீ உருத்தவில்லை மகளே
அதுவரை உன்னை யார் அன்பாய் அரவனைப்பாரோ என் மகளே
குழந்தைகள் அழும் குரலில்
மாளிகை கதவுகள் உன்னை அழைக்கும்
இல்லை, கைகளில் துவக்குகள் ஏந்த
எல்லை மதிலோ உன்னை அழைக்கும்
கொள்கலத்தில் உன்னை தனியாய் விட்டு
எப்படிச் செல்வேன் மகளே
தவிர்க்க முடியா சூழ்நிலை என்னை
போவென விரட்டுது மகளே
இறுதியில், ஒருமுறையாவது உன் முகம் காட்டி
சிரித்திடு என் மகளே"
மாணவி:- ஆம்.
 
கேள்வி:- யுத்தம் முடிவடைந்து ஒன்று ஒன்றரை வருடம் முடிவடைய முதல் நீங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் செல்கிறீர்கள். தவறான முடிவாக தெரியவில்லையா?
 
மாணவி :- இல்லை. எங்களுக்கு நிறைய ஆதரவு தந்தார்கள். நான் தங்கியிருந்த வீட்டில் இருந்த அக்கா தனது இரண்டு குழந்தைகளையும் எங்களிடம் தான் தந்துவிட்டு செல்வார் பார்த்துக்கொள்ள சொல்லி, அந்த அளவு நம்பிக்கை, அதே போல எமக்கும் நல்ல ஆதரவாக இருந்தார். அந்த அக்கா இறந்திட்டார், இறந்த பின் அந்த அக்காவை பல நாட்களாக நான் கனவில் கண்டேன், அந்தளவுக்கு நான் அதிர்ச்சியடைந்தேன், எனது சகோதரி போல உணர்ந்தேன், நான் நினைக்கின்றேன் நாங்கள் இன ரீதியாக பிளவுபடக்கூடாது, நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக அளவுகளை கைவிட்டு மக்களை மட்டும் கருத்தில் கொண்டு வாழ முடியும் என்றால் இதைவிட நன்றாக இருக்கும்.
 
கேள்வி:- உண்மையை கூறுங்கள் யாழ்ப்பணம் செல்ல பயம் வரவில்லையா?
 
மாணவி:- அங்குள்ள விரிவுரையாளர்கள் மிகவும் நல்லவர்கள். தமிழர் சிங்களவர் என்ற பிரிவு காட்டவில்லை, எனது விரிவுரையாளர் துவிச்சக்கர வண்டியில் தான் வருவார். அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. உடைகளை பற்றிய கவலை எல்லாம் நமக்கு இருக்கவில்லை. கையில் கிடைக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு செல்லமுடிந்தது. நிறைய சுதந்திரம் நமக்கு கிடைத்தது. அங்குள்ள மக்களும் சாதாரணமானவர்கள். உண்மையில் எனக்கு கொழும்பு செல்ல பயம். (கேள்வி கேட்பவரின் கண்கள் ஆச்சரியத்தில் மேலெழும்புகின்றன) யாழ்ப்பாணத்தில் எங்கு வேணும் என்றாலும் செல்ல முடியும் எந்த பயமும் இல்லை.

கருத்துகள் இல்லை: