ஞாயிறு, 1 நவம்பர், 2020

ஊரடங்கு தளர்வுகள்: பள்ளிகள், தியேட்டர்கள் செயல்பட அனுமதி!

ஊரடங்கு தளர்வுகள்: பள்ளிகள், தியேட்டர்கள் செயல்பட அனுமதி!

நவம்பர் மாதத்திற்கான ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ள தமிழக அரசு, திரையரங்குகள், பள்ளிகள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது.   கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு அமலிலிருந்து வருகிறது.9ஆம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் சமீப நாட்களாக வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கடந்த 28ஆம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன், ஊரடங்கு தளர்வுகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைகளின் அடிப்படையில், ஊரடங்கு நவம்பர் 30ஆம் தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுவதாகத் தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

அதன்படி,

9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வரும் நவம்பர் 16ஆம் தேதி முதல் அரசின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படுவதாக  அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பள்ளி/கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் நவம்பர் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

தற்காலிக இடத்தில் தற்போது செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம், நவம்பர் 2ஆம் தேதி முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் 16ஆம் தேதி முதலும் கோயம்பேடு வணிக வளாகத்தில்  செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

சின்னதிரை உட்படத் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு, ஒரே சமயத்தில் 150 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின்போது பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவிகித இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி நவம்பர் 10ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள்,  அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் நவம்பர் 10ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

திருமண நிகழ்வுகளுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களுக்கு 100 நபர்களுக்கு மிகாமலும் மக்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் உடற்பயிற்சி கூடங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் 60 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன” என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  “நீச்சல் குளங்கள், கடற்கரை சுற்றுலா தளங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்கும். மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிரச் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை நீடிக்கும். புதுச்சேரி தவிர வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள் வருபவர்களுக்கும், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கும் தற்போது நடைமுறையிலுள்ள இ பதிவு முறை தொடர்ந்து அமல்படுத்தப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளது.

பொது இடங்களுக்குச் செல்லும் போது சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், மாஸ்க் அணிதல், பண்டிகை காலங்களில் ஓரிடத்தில் அதிகமாய் கூடுவதைத் தவிர்த்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது

-கவி

 

கருத்துகள் இல்லை: