வியாழன், 14 மே, 2020

கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது- விஞ்ஞானிகள் புதிய ஆதாரம்

தினத்தந்தி :நாவல் கொரோனா வைரசின் நெருங்கிய உறவு வைரசை
அடையாளம் கண்டுள்ள விஞ்ஞானிகள், இது கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது, ஆய்வுக்கூடத்தில் அல்ல என்பதற்கு ஆதாரமாக அமைகிறது என்று கூறி உள்ளனர். சீனாவில் வுகான் நகரில் உருவாகி உலகமெங்கும் 185-க்கும் மேற்பட்ட நாடுகளில் நாவல் கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படுகிற கோவிட்-19 தொற்று பரவி உள்ளது. இந்த தொற்று, 42 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளதாகவும், 2 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளதாகவும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் தொற்று தரவு மையம் கூறுகிறது.
இந்த கொடிய வைரஸ் இயற்கையாக உருவானதா, வுகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதா என்பதில் பெருத்த சர்ச்சை நிலவுகிறது.
ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அங்கிருந்து கசிந்துதான் உலகமெங்கும் பரவிவிட்டது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் வுகான் ஆய்வுக்கூடத்தில் உருவானது அல்ல, இயற்கையாக உருவானதுதான் என்று சீன விஞ்ஞானிகள் புதிய ஆதாரத்தை காட்டுகின்றனர்.

இந்த விஞ்ஞானிகள், வவ்வால்களில் சார்ஸ் கோவ்-2-வின் நெருங்கிய உறவு வைரசை (ஆர்எம்ஒய்என்-02) அடையாளம் கண்டுள்ளனர். இதுதான், கோவிட்-19 என்று அழைக்கப்படுகிற கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்தில் உருவாக்காமல் இயற்கையாக உருவானதற்கு ஆதாரம் என்று ஆராய்ச்சி நடத்தியுள்ள ஷான்டாங் முதல் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது குறித்த ஆய்வுக்கட்டுரை, ‘கரண்ட் பயாலஜி’ பத்திரிகையில் வெளியாகி உள்ளது. அதில் சமீபத்தில் அடையாளப்பட்ட வவ்வால் கொரோனா வைரஸ் (ஆர்எம்ஒய்என்-02), சார்ஸ் கோவ்-2 வைரசின் நெருங்கிய உறவு வைரஸ், அதில் இதற்கான மரபணு வரிசை காணப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
இந்த வைரசின் ஸ்பைக் புரதத்தின் எஸ்-1 மற்றும் எஸ்-2 துணைக்குழுக்களின் சந்திப்பில், சார்ஸ் கோவ்-2-வைப் போலவே அமினோ அமிலங்களின் செருகல்கள் உள்ளன, கொரோனா வைரஸ் பரிணாம வளர்ச்சியில் இந்த வகையான அசாதாரண செருகும் நிகழ்வுகள் இயற்கையாக நடக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
இதுபற்றி ஆராய்ச்சி நடத்தியவர்களில் ஒருவரான பேராசிரியர் வெய்பெங் ஷி கூறியதாவது:-
எஸ்-1 மற்றும் எஸ்-2 இடைச்செருகலானது மிகவும் அசாதாரணமானது. இது ஆய்வுக்கூடத்துடன் தொடர்புடையது என்று கூறப்பட்டது. ஆனால் எங்கள் ஆராய்ச்சியில், இந்த நிகழ்வுகள் வனவிலங்குகளில் இயற்கையாகவே நடக்கின்றன என்று தெரிய வந்துள்ளது. இது சார்ஸ் கோவ்-2 வைரஸ் ஆய்வுக்கூடத்தில் இருந்து தப்பியது என்பதற்கு எதிரானது.
புதிய வைரசான ஆர்எம்ஒய்என்-02, யுனான் மாகாணத்தில் 227 வவ்வால்களின் மாதிரிகளின் பகுப்பாய்வில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மே-அக்டோபர் மாதங்கள் இடையே இது கண்டுபிடிக்கப்பட்டது. சார்ஸ் கொரோனா வைரசின் உறைவிடம் வவ்வால்கள் என 2005-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, வவ்வால்கள்தான் தொற்றுநோய்க்கான பிறப்பிடம் என்பதை அறிந்து அதுகுறித்த ஆய்வில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.
இறுதியாக, வவ்வால்களில் அடையாளம் காணப்பட்ட வைரசில் இது போன்ற செருகும் நிகழ்வு, இந்த வகையான செருகல்கள் இயற்கையான தோற்றம் கொண்டவை என்று உறுதியாக கூறுகின்றன. உண்மையில் விலங்கு பீட்டா கொரோனா வைரஸ், இயற்கையாகவே ஏற்படலாம்.
எங்கள் ஆய்வு, சார்ஸ் கோவ்-2-ன் பரிணாமா வம்சாவளியை பற்றி மேலும் வெளிச்சம் தந்துள்ளது.
அதிகமான வன விலங்குகளின் மாதிரியானது வைரஸ்களை வெளிப்படுத்தும் என்று ஆய்வு வலுவாக தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்எம்ஒய்என்-02 வைரஸ், வவ்வால்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், உலகை இப்போது படாத பாடுபடுத்தும் நாவல் கொரோனா வைரஸ் என்னும் கோவ்-19 வைரசும் இயற்கையாககத்தான் தோன்றி இருக்க வேண்டும், பரிசோதனைக்கூடத்தில் அல்ல என்பதுதான் விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

கருத்துகள் இல்லை: