ஞாயிறு, 10 மே, 2020

Court மராத்தி ... திரைத் தாலாட்டுக்களில் இருந்து ஒரு .... .. விழிக்கலாம் முடிந்தால்?

கோர்ட் ....மராத்தி ஹிந்தி குஜராத்தி ஆங்கிலம் எல்லாம் கலந்த கலவை

2015 இல் வெளிவந்த  Court  ஒரு மராத்தி திரைப்படம். வழக்கமாக நான் ரசித்த  படங்களை பற்றி எல்லாம் வாய்க்கு வந்த படி அளந்து கொண்டு வரும் எனக்கு இந்த படம் ஒரு பெரிய அதிர்ச்சியை கொடுத்து விட்டது.
வழக்கமான திரைப்படங்களுக்கு உரிய சட்ட திட்டங்களும் அல்லது கற்பனைகளும் .எதிர்ப்பார்ப்புக்களும் இந்த படத்துக்கு பொருந்தாது .எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி விட்டது Court கோர்ட்.
இது எந்த மொழி படம் என்று அறுதியாக கூறமுடியாதோ அதே போலவே இது என்ன படம் என்றும் இலகுவாக கூறி விட முடியாது.
இந்த படத்தில் வரும் எந்த காட்சியும் ஒரு இலகுவான கவிதையை அல்லது காதலை கூறவில்லை. பின்னணி இசைகூட கிடையாது.
காட்சிகளில் காமராவோ இயக்குனரோ வசனகர்த்தவோ எதுவும் கிடையாது என்ற எண்ணம்தான் தோன்றுகிறது.
நீதிமன்றங்களையும் தெருவோரங்களையும்  சந்தைகளையும் நாம் எப்படி அன்றாடம் பார்த்துக்கொண்டே கடந்து போய்கொண்டு இருக்கிறோமோ அதே போன்று இந்த திரைப்படம் உள்ளது, இதில் என்ன அதிசயம்  இருக்கிறது நீங்கள் எண்ணுவது புரிகிறது.
வழக்கமாக நாம் காணும் நீதிமன்றங்களும் தெருவோரங்களும் சந்தைகளும் இதுவரை இந்த திரையில் கண்டது போல் இதுவரையில் காணவில்லை.
இது எந்தவிதமான செய்தியையும் கூட புதிதாக தரவில்லை . ஆனால் எமக்கு நன்றாகவே தெரிந்து  சகிக்க பழகிவிட்ட மிக சாதாரண விடயங்களை மீண்டும் எமது கண் முன்னே கொண்டுவந்துவிட்டு தன்பாட்டுக்கு போய்க்கொண்டே இருக்கிறது.

அவற்றை பார்ப்பதுவும் அதை பற்றி சிந்திப்பதையும் கூட வலியுறுத்தவில்லை. இந்த திரைப்படத்துக்குத்தான் காமெரா இயக்குனர்கள் வசனங்கள் பின்னணி இசை என்று எதுவுமே இல்லையே?

 இவை ஒன்றுமே இல்லாவிடில் இது என்ன திரைப்படம் என்று எண்ணவேண்டாம் .. என்னிடம் இதற்கு பதில் கிடையாது. அதுதான் முதலிலேயே கூறினேனே இது ஒரு இலகுவான படம் அல்ல.
உங்கள் கண்முன்னே நடக்கும் அநீதிகளை கண்டு நீங்கள் ஆக்ரோஷம் கொள்ளவேண்டும் என்று இந்த படத்தில் யாரும் பிரசாரம் செய்யவில்லை.
ஆனால் அவற்றிக்கான காட்சிகள் எல்லாம் உண்டு. ஆனாலும் அவற்றை கண்டு நீங்கள் வெகுண்டு எழுவதோ இல்லையோ எதுவும் இந்த திரைமொழியில் கூறப்படவில்லை.

மும்பை நகர முனிசிப்பால்டியின் நகர சுத்திகரிப்பு தொழிலாளி ஒருவர் நச்சு வாயிவினால் இறந்து விட்டார். போதிய பாதுகாப்பு  கருவிகள் இல்லாமை போன்ற காரணிகளால் அந்த தொழிலாளி இறந்துவிட்டார்.
அத்தொழிலாளியின் மரணத்திற்கு காரணமான மாநகர நிர்வாகம் அந்த தொழிலாளி தற்கொலை செய்துகொண்டதாக வாதம் செய்கிறது.

இந்த சாக்கடைகளை சுத்தம் செய்யும் தொழிலை செய்வதை விட செத்து போவதே மேல் என்ற கருத்தை வலியுறுத்தி பிரசார பாடல்களை பாடி களப்பணி ஆற்றுகிறார் பாடகர் நாராயண் காம்பிலே.
இவரின் புரட்சி கீதங்களால் ஈர்க்கபட்டு அந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை முடிக்க முயல்கிறது.மேலிடம்.
நாராயண் கம்பிலேய்க்காக வாதாடுகிறார் ஒரு குஜராத்தி வழக்கறிஞர்.
இறந்த தொழிலாளியின் மனைவியை உருட்டி புரட்டி கேள்வி கேட்டு அரச வழக்கறிஞர் எப்படியாவது அந்த தொழிலாளி இவரின் பாடல்களால் மனம் மிகவும் ஒடிந்து இருந்தார் என்ற வாக்கு மூலத்தை பெற முயல்கிறது.
மேற்கொண்டு இந்த திரைசம்பவத்தின் முழுக்கதையையும் நான் கூறுவதால் எந்த பிரயோசனமும் இல்லை.
அன்றாடம் இது போன்ற கதைகள் கண்முன்னால் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நாம் என்னதான் செய்கிறோம்?

ஒரு திரைபபடம் த்ரீ டி எல்லாம் தாண்டி இந்த அளவுக்கு காட்சிகளை கண்முன்னே வைக்க முடியுமா?
உண்மையில் கண்முன்னே நடக்கும் நடந்து கொண்டே இருக்கும் நொறுங்கி போன உலகத்தை  பல சி சி டி வி காமராக்களை ஆங்காங்கே பொருத்தி வைத்து அவற்றை எல்லாம் தொகுத்து பார்ப்பது போல இருக்கிறது.  இந்த் திரைப்படத்துக்கு என்று ஒரு ஒளிப்பதிவாளர் இருக்கிறார் என்று நம்பவே முடியாத படி எங்குமே காமெரா நகரவே இல்லை.
அதனாலேயே இது ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வை தரவில்லை, அதனால்தானோ என்னவோ காட்சிகள் எல்லாம் நம் கண்முன்னே அன்றாடம் நடப்பது போல தெரிகிறது .. 
சில அசாதாரணமான  ஹாலிவூட்டில் படங்களில் சாத்தியமாகி இருக்கிறது.
திரைத்தாலாட்டுக்களில் நாம்  தூங்கி போன ரசிகர்கள் ஆகிவிட்டோம்.
இந்த கோர்ட் என்ற மராத்திய படம் நீ விரும்பினால் தூங்கு என்றே கூறிக்கொண்டு தட்டி எழுப்பி கொண்டே இருக்கிறது.

கருத்துகள் இல்லை: