சனி, 16 மே, 2020

உத்தர பிரதேசத்தில் லாரிகள் மோதல்; 23 பேர் உயிரிழப்பு


தினத்தந்தி : ராஜஸ்தானில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியதில் 23 பேர் பலியாகி உள்ளனர்.
லக்னோ, நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது. வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பிழைப்புக்காக தென்பகுதி மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து உள்ளனர். ஊரடங்கை முன்னிட்டு வேலைவாய்ப்பின்றி, வருவாயும் இன்றி, கையில் இருந்த பணமும் செலவான நிலையில், தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது என அவர்கள் முடிவு செய்தனர். ஆனால், பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில், பலர் சரக்கு வாகனங்களில் பயணித்து தங்களது ஊருக்கு சென்றடைகின்றனர். பலர் கால்நடையாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.  அவர்களில் சிலர் பெண்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் என தங்களது குடும்பத்தினரையும் அழைத்து சென்றுள்ளனர்.

இதனை அடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் வசதிக்காக அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு ரெயில்களில் அவர்களை அனுப்பி வைத்து வருகிறது.  இது தவிர்த்து அவர்களுக்கான உணவு தேவையையும் பூர்த்தி செய்கிறது.  இதனால் லட்சக்கணக்கானோர் சொந்த ஊரை அடைந்த திருப்தியில் உள்ளனர்.  அவர்களுக்கான பயண செலவுகளை ஏற்கவும் சில மாநில அரசுகள் முன்வந்தன.

எனினும், முறையான அடையாள அட்டை இல்லாதது அல்லது ஊருக்கு திரும்புவதில் காலதாமதம் ஏற்படுவது ஆகிய காரணங்களால், சிலர் கிடைத்த வாகனங்களை பிடித்து பயணம் செய்கின்றனர்.

இதேபோன்று ராஜஸ்தானில் இருந்து சொந்த ஊருக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் லாரி ஒன்றில் புறப்பட்டு சென்றுள்ளனர்.  அவர்களது வாகனம் உத்தர பிரதேசத்தின் ஆரையா என்ற பகுதியில் வந்தபொழுது, அதிகாலை 3.30 மணியளவில் மற்றொரு லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் 23 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்தனர்.  பலர் காயமடைந்தனர்.  அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  இவர்களில் பலர் பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்டை சேர்ந்தவர்கள்.

சமீப நாட்களில், நாடு முழுவதும் சொந்த ஊருக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வது அதிகரித்துள்ளது.  கடந்த வாரம் மராட்டியத்தில் 16 பேர் ரெயில் மோதி பலியானார்கள்.

கடந்த 13ந்தேதி இரவில், மராட்டியத்தில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்த உத்தர பிரதேச தொழிலாளர்கள் சிலர் லாரி ஒன்றில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபொழுது, மத்திய பிரதேசத்தின் குணா என்ற பகுதியில் எதிரே வந்த பேருந்து ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.  இந்த விபத்தில், தொழிலாளர்கள் 8 பேர் பலியாகினர்.  50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதேபோன்று அதே நாளில் நடந்த மற்றொரு சம்பவத்தில், பஞ்சாபில் இருந்து பீகாரிலுள்ள சொந்த ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது, உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று மோதியது.  இதில், 6 பேர் பலியாகினர்

கருத்துகள் இல்லை: