வெள்ளி, 15 மே, 2020

நாளை மீண்டும் டாஸ்மார்க் திறப்பு

மின்னம்பலம் : தமிழகத்தில் நாளை முதல்
மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டாஸ்மாக்கை திறக்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், நிபந்தனைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதன் மூலம் டாஸ்மாக்கை திறக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது.
இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இன்று (மே 15) வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படும். ஆனால், சிவப்பு மண்டலங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. உரிய சமூக இடைவெளி பின்பற்றப்படும். மது வாங்க வருபவர்களுக்கு வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடம் வழங்கவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வருபவர்களுக்காக சிவப்பு, பச்சை, நீலம் என ஏழு நிறங்களில் டோக்கன்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நாம் ஏற்கனவே வராத வழக்கும்: வண்ண வண்ண டோக்கன்களும் என்ற தலைப்பில், நீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்பே, சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்று ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வண்ண டோக்கனை அச்சடித்து வைத்துவிட்டனர் என்று சொல்லியிருந்தோம். அதுபோலவே, டோக்கனில் குறிப்பிடப்படும் நேரத்தில் மட்டுமே மதுபானம் வழங்கப்படும். முன்பு நடந்தது போல டாஸ்மாக்கில் கூட்டம் கூடாத அளவிலும், சமூக இடைவெளியை பின்பற்றும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.
டாஸ்மாக் திறப்பு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் தமிழகம் முழுவதும் மாவட்ட சேல்ஸ் மேன்கள் மற்றும் சூப்பர்வைசர்கள் அவசரமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் பேசிய அதிகாரிகள் ஒரு நாளைக்கு 500 டோக்கன் தான் அளிக்க வேண்டும். ஒரு நபருக்கு 4 குவாட்டர், ஒரு பீர் அல்லது ஒரு ஒயின் மட்டுமே கொடுக்க வேண்டும். கடை அருகில் 50 பேர் மட்டுமே நிற்க வேண்டும், ஒருவருக்கும் மற்றொருவருக்கும் ஆறு அடி இடைவெளி இருக்க வேண்டும்.
மதுக்கடைகளுக்கு வரக்கூடிய கூட்டத்தை சமுதாயக் கூடம் அல்லது திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, அங்கு டோக்கன் அளித்து கடைக்கு அனுப்புங்கள். முக்கியமாக கூட்டம் இருப்பது போல எந்த மீடியாக்களிலும் புகைப்படம் வரக்கூடாது. சரியாக மாலை 5 மணிக்கெல்லாம் மூடி விட வேண்டும் என்றெல்லாம் பல நிபந்தனைகளை விதித்தனர்.
இவர்களில் பெரும்பாலான சேல்ஸ் மேன்கள், “ஒரு நாளைக்கு 500 டோக்கன் என்றால் அதிகமான பிரச்சனைகள் ஏற்படுத்தும். 1000 டோக்கன் கொடுத்தால் சமாளிக்கலாம்” என்று தெரிவித்தனர்.
இந்தத் தகவல் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் பதில் சொல்வதாக தெரிவிக்கப்பட்டதால் சேல்ஸ் மேன்கள் காத்திருக்கிறார்கள். 500 டோக்கன் 1000 ஆக அதிகரிக்கப்படுமா என்ற தகவல் இரவுதான் தெரியும் என்கிறார்கள் டாஸ்மாக் சேல்ஸ்மேன்கள்.
காசி, எழில்

கருத்துகள் இல்லை: