செவ்வாய், 12 மே, 2020

ஜெயஸ்ரீயை கொலை செய்தது ஏன்? அதிர வைக்கும் வாக்குமூலம்!

ஜெயஸ்ரீயை கொலை செய்தது ஏன்? அதிர வைக்கும் வாக்குமூலம்!மின்னம்பலம் : தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் மாணவி ஜெயஸ்ரீ கொலை வழக்கின் பின்னணி குறித்து கைது செய்யப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ என்னும் பத்தாம் வகுப்பு மாணவி, கை-கால்கள் கட்டிப் போட்டு தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளான கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும் தனக்கு அநீதி இழைத்தவர்கள் குறித்து ஜெயஸ்ரீ தெரியப்படுத்தும் வீடியோ காண்பவர்கள் நெஞ்சை உடைத்து விட்டது. இந்த கொடுமை சம்பவம் தொடர்பாக நமது மின்னம்பலத்தில்14 வயது சிறுமியைக் கட்டிப்போட்டு எரித்த பயங்கரம்: அதிமுக பிரமுகர்கள் கைது!என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் மாணவி ஜெயஸ்ரீயை தாங்கள் தீ வைத்து எரித்தது எதனால் என்பது குறித்து கைது செய்யப்பட்ட இருவரும் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்கள் கூறும்போது 'ஜெயபால்(மாணவி ஜெயஸ்ரீயின் தந்தை) குடும்பத்துக்கும், எங்களுக்கும் இடையே ஏழு வருடங்களுக்கும் மேலாக சண்டை நிலவி வந்தது.
ஜெயபால் குடும்பத்தினர் வருமானத்தில் முன்னேறுவது எங்களை மேலும் கோபமடையச் செய்தது. ஒவ்வொரு முறை பிரச்னை ஏற்படும் போதும் அவர்கள், எங்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். அதேபோன்று சண்டைகளுக்கு மத்தியில் ஜெயபாலின் மூத்தமகள் ஜெயஸ்ரீயும் எங்களைக் கோபமாகத் திட்டி வந்தார்.
இரு தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற சண்டையின் போதும் ஜெயஸ்ரீ எங்களைத் திட்டினார். அவளது தந்தை எங்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றிருந்தார். அந்த நேரத்தில் அவர்கள் வீட்டிற்கு சென்ற நாங்கள் தனியாக இருந்த ஜெயஸ்ரீயின் வாயில் துணியை வைத்து அழுத்தி, கை கால்களைக் கட்டி போட்டு உயிருடன் கொளுத்தி விட்டோம்." என்று தெரிவித்துள்ளனர்.
மாணவி ஜெயஸ்ரீ தப்பித்து விடக்கூடாது என்பதற்காகவே அவரை வீட்டிற்கு உள்ளே வைத்து, பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்த இரக்கமற்ற சம்பவத்தைத் தொடர்ந்து முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரையும் தங்கள் கட்சியை விட்டு நீக்குவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் அறிவித்துள்ளனர். மேலும் 'தேசிய குழந்தைகள் நலக் காப்பகம்' தாமாக முன்வந்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ஒரு வாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா

கருத்துகள் இல்லை: