திங்கள், 27 பிப்ரவரி, 2017

ஹானர்ஸ் செல்வகுமார் .. அன்பு வழியை தேர்ந்தெடுப்பவர்களுக்கு தோல்வியே இல்லை

யுவகிருஷ்ணா:“நீங்க இந்த கல்லூரியில் படிக்க முடியாது” கல்லூரி முதல்வர் சொன்னதுமே கண்கள் இருண்டது செல்வகுமாருக்கு. “
ஏன்?”
“காரணத்தை தனியா சொல்லணுமா? உங்களுக்கே தெரியாதா?”
“பரவாயில்லை. சொல்லுங்க”
“இந்தப் படிப்பு மின்னியல்/மின்னணுவியல் சம்பந்தமானது. நிறைய லேப் ஒர்க் இருக்கும். நடக்க முடியாத உங்களால் ஏதாவது விபத்து நடந்தா பெரிய பாதிப்பு ஏற்படும்”
சிறுவயதில் இருந்தே கனவில் கட்டிய மண்கோட்டை கண் முன்பாக சிதறுவதை கண்டு மனசு உடைந்தார் செல்வா.
லால்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முதலாவதாக வந்த மாணவன். அன்றைய திமுக அரசு அறிமுகப்படுத்தி இருந்த ஒற்றைச்சாளர முறையில் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்திருந்தது. கல்லூரியில் சேருவதற்காக போனபோதுதான் இந்த இடி.
இராமச்சந்திரன் - ஜோதி தம்பதியினரின் மூத்த மகன். செல்ல மகனுக்கு செல்வகுமார் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள். அவர்களது மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. போலியோ பாதிப்பு காரணமாக செல்வாவின் இரு கால்களும் பாதிப்படைந்தது. திருச்சி ஆர்.சி. மேனிலைப் பள்ளியில் சேர்ந்தபோது அவரின் படிப்பு சுமார்தான். அப்பள்ளி தாளாளராக இருந்த தாமஸ் அடிகளார், செல்வாவை பார்த்து கனிவுடன் சொல்கிறார்.


“மை சன்! நீ மத்தவங்களை மாதிரி கிடையாதுன்னு உனக்கே தெரியும். நீ கடவுளோட ஸ்பெஷல் சைல்ட். நடக்க முடியலைன்னு நீ என்னிக்குமே வருத்தப்படக் கூடாது. உன் சொந்தக் காலில் உன்னால் நிற்க முடியும். கல்வி மட்டுமே உன்னை கரைசேர்க்கும். அது மட்டுமே உன்னை உயர்த்தும். இதை நீ எந்தக் காலத்திலும் மறந்துடக் கூடாது”

விளையாட்டுப் புத்தியை அன்றோடு ஏறக்கட்டினார் செல்வா. எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருந்தார். தந்தைக்கு இடமாற்றல் ஏற்பட்டதால் பன்னிரெண்டாம் வகுப்பை லால்குடி அரசினர் மேனிலைப் பள்ளியில் படித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துகிருஷ்ணனின் ஊக்குவிப்பால், +2 தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவராக தேர்வானார்.

அவருக்குதான் என்ஜினியரிங் அட்மிஷன் கொடுக்க மறுத்தார் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி முதல்வர். தகுதி இழப்பாக, செல்வாவின் கால்கள் காட்டப்பட்டது. சோகத்தில் ஆழ்ந்த பெற்றோரை செல்வாதான் தேற்றினார். ‘அண்ணா பல்கலைக் கழகம் கொடுத்த அட்மிஷனை கல்லூரி முதல்வர் எப்படி மறுக்க முடியும்?’ மீண்டும் தந்தையோடு சென்னைக்கு படையெடுத்தார். போராடி தன்னுடைய உரிமை பெற்றார். எந்த கல்லூரி அவரை சேர்த்துக் கொள்ள முடியாது என்று மறுத்ததோ, அதே கல்லூரியில் அதே துறையில் கம்பீரமாக நுழைந்தார்.

“எல்லா கல்லூரி முதல்வர்களுமே அப்படிதான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. மாற்றுத் திறனாளிகளை கல்விதான் கரை சேர்க்கும். அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களும் உண்டு. அடுத்து கல்லூரி முதல்வராக வந்த அபய்குமார், என்னை அணைத்து ஆறுதல் படுத்தினார். கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவரான ராம்கோபால் அவர்களின் வழிகாட்டுதலையும் மறக்க முடியாது. கல்வி தவிர்த்து மற்ற செயல்பாடுகளிலும் என்னை அவர் ஈடுபடுத்தினார். கல்லூரி இறுதியாண்டில் நான் என்.எஸ்.எஸ். தலைவராகி, ஆண்டு விழாவில் சிறந்த மாணவர்களில் ஒருவனாக டிவிஎஸ் நிறுவனம் வழங்கிய பதக்கத்தை பெற்றேன்” என்று கல்லூரி நினைவுகளில் மூழ்குகிறார் செல்வகுமார்.

‘படிப்பு முடியப் போகிறது, அடுத்தது என்ன?’ என்கிற கேள்வி, செல்வாவின் முன்பாக பூதாகரமாக நின்றது. என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு இன்றும் பீதியை ஏற்படுத்தும் வார்த்தை, ‘Next?' என்பதே. உடன் படிக்கும் மாணவர்களில் தொடங்கி, பெற்றோர், உறவினர், சுற்றம், நட்பு அனைவருமே கேட்கும் கேள்வி இதுதானே?

இறுதியாண்டு மாணவராக இருந்த செல்வா, சென்னையில் இருந்த லேசர் சாஃப்ட் நிறுவனர் சுரேஷ்காமத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார். “ஐயா, என்னால் நடக்க முடியாது. என்னுடைய கால்களுக்குதான் அந்த வலிமை கிடையாதே தவிர, மனசுக்கு மற்றவர்களைவிட கூடுதல் வலிமை உண்டு. நீங்கள் எதிர்ப்பார்ப்பதையும் விட சிறப்பாக பணியாற்ற முடியும். உங்கள் நிறுவனம் எனக்கு வேலை கொடுக்குமா?”

என்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவனின் இந்த மின்னஞ்சல் சுரேஷ்காமத்தை உலுக்கியது. “உடனே சென்னைக்கு வா” என்று பதில் கொடுத்தார். நேர்முகத் தேர்வில் பங்கேற்று செல்வா தேர்வானார். படிப்பை முடித்ததுமே வந்து வேலையில் சேர்ந்துக் கொள்ளலாம் என்று நிறுவனம் அவருக்கு சலுகை வழங்கியது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி. நல்ல சம்பளம். லைஃபில் செட் ஆகிவிட்டோம் என்கிற திருப்தி மட்டும் செல்வாவுக்கு கிடைக்கவே இல்லை.

கோபால் புரோகிராமிங்கில் தன்னுடைய திறனை நன்கு வளர்த்துக் கொண்டார். ஐரோப்பிய ஒன்றியம், இந்திய அரசோடு இணைந்து நடத்திய தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம் ஒன்றில் கலந்துக் கொள்வதற்கான வாய்ப்பு அவருக்கு அமைந்தது. அந்த கருத்தரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் எத்தகைய பணிவாய்ப்புகள் உண்டு என்பதை பற்றி அவர் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப மேற்கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அவர் எடுத்துரைத்தது கருத்தரங்கில் பங்கு பெற்றவர்களை கவர்ந்தது.

அந்த கருத்தரங்கம் செல்வாவின் வாழ்வில் மிகப்பெரிய திறப்பு. அதன் பிறகு தனக்கு வேலை கொடுத்த லேசர் சாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ்காமத்தை பொறுப்பாளராக்கி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மையத்தை தொடங்கினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் நாற்பது மாற்றுத் திறனாளிகள் இந்த மையத்தால் உந்துதல் பெற்றார்கள். அவர்கள் அனைவருக்கும் லேசர் சாஃப்ட் நிறுவனமே வேலையும் வழங்கியது.

“எங்கள் சிறப்பு மையத்தில் பயிற்சி பெற்ற ஓர் இளைஞன், ‘மஸ்குலர் அட்ரோபி’ என்கிற அரியநோயால் பாதிக்கப்பட்டவன். அவனால் பணி செய்ய முடியாது என்று நிறுவனத்தின் இரண்டாம் கட்ட அதிகாரிகள் பணி நியமனம் கொடுக்க மறுத்தார்கள். என் இயல்பான போராட்டக் குணத்தின் காரணமாக போராடத் தொடங்கினேன். கடைசியாக சுரேஷ்காமத்திடம் எனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, அந்த இளைஞனை பணியில் சேர்த்தேன். என்னுடைய வாழ்விலேயே எனக்கு பெரிய நிறைவு கொடுத்த சம்பவம் அது” என்கிறார் செல்வா.

அப்போது தமிழில் blogs எனப்படும் வலைப்பூக்கள் பிரபலமாகத் தொடங்கிய நேரம். செல்வாவுக்கு இயல்பாகவே சமூகநீதிக் கொள்கைகளின் மீதும், தமிழ் மொழியின் மீதும் இருந்த பிடிப்பின் காரணமாக அவரும் வலைப்பூக்களில் எழுத ஆரம்பித்தார். அப்போது அவருக்கு அறிமுகமான ‘விக்கிப்பீடியா’ ரவிசங்கர் மூலமாக, சுவீடனில் இலவச மேற்படிப்பு வாய்ப்புகள் குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. நிறுவனர் சுரேஷ்காமத்திடம் தான் சுவீடனில் படிக்க ஆசைப்படுவதை சொன்னார். அவர் பச்சைக்கொடி காட்ட, தேசிய வங்கி ஒன்றில் கல்விக்கடன் பெற்று சுவீடனுக்கு செல்கிறார். தன்னை போலவே பல தமிழக மாணவர்களும், இந்த இலவச மேற்படிப்பு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இணையத் தளங்களிலும், வாரப் பத்திரிகைகளிலும் ‘எப்படி சுவீடனில் மேற்படிப்புகளை படிக்க இயலும்?’ என்று கட்டுரைகள் எழுதுகிறார். இவற்றை வாசித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் செல்வாவை தொடர்பு கொண்டு சுவீடனுக்கு சென்றார்கள். அங்கு கல்வி கற்று நல்ல நிலையில் இருக்கும் பலர் இன்றும் செல்வாவோடு நல்ல நட்பில் இருக்கிறார்கள்.

சாஃப்ட்வேர் என்ஜினியரிங்கில் முதுகலை பட்டத்தை அங்கே பெற்றார். அவருக்கு இப்போது இரண்டு வாய்ப்புகள், வாசல் கதவை தட்டுகிறது. ஒன்று, இத்தாலியில் தகவல் பாதுகாப்பு மற்றும் அகவுரிமைத் துறையில் ஆராய்ச்சி படிப்பிற்கான இடம். அடுத்தது, அவர் வாழ்வில் கற்பனை கூட செய்துப் பார்த்திரான சம்பளத்தோடு மலேசியப் பல்கலைக்கழகம் ஒன்றில் விரிவுரையாளர் பணி. என்ன செய்வது என்று மூளையை கசக்கிக் கொண்டவருக்கு தாமஸ் அடிகளார் சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்தது. “கல்வி மட்டுமே உன்னை கரைசேர்க்கும். அது மட்டுமே உன்னை உயர்த்தும்”

இத்தாலியில் படிப்புக்கு உதவித்தொகை கிடையாது. இருந்தாலும் பல லட்ச ரூபாய் சம்பளப் பணி வாய்ப்பை உதறிவிட்டு ஆராய்ச்சிப் படிப்புக்காக இத்தாலிக்குச் சென்றார். அங்கே ஆய்வகப் பேராசிரியர்களின் உதவியால், ஆய்வகத்தில் பகுதிநேரப் பணி செய்து சொற்ப வருமானம் கிடைத்தது. அதைவைத்து சமாளித்துக் கொண்டார்.

ஆய்வில் சிறப்பாக கவனம் செலுத்திய அவருக்கு உடனுக்குடன் பலன் கிடைத்தது. முதல் ஆண்டிலேயே முதலீடு செய்யும் திட்டம் ஒன்றில் இடமும், ஆய்வகத்தின் ஆராய்ச்சித்தாளில் செல்வாவின் பெயரும் இடம்பெற்றது. ஐரோப்பாவில் கணினித்துறையில் சாதிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான கூகுள் ஸ்காலர் விருதும் அவருக்கு கிடைக்கிறது. கூகிளின் ஐரோப்பிய தலைமையகம் அமைந்திருக்கும் ஜூரிச் நகரில் நடந்த ஒருவார பயிற்சியரங்கில் கலந்துக் கொண்டார். ஏழாயிரம் ஈரோக்கள் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாய்) அவருக்கு சன்மானமாகவும் கொடுத்தார்கள்.

கல்வியில் ஒரு புறம் உயர்ந்துக்கொண்டே சென்றுக் கொண்டிருந்த நிலையில், வாழ்க்கையிலும் ஏற்றம் கண்டார் செல்வா. இவரது கட்டுரைகளை இணையத்தில் வாசித்து வாசகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி சுப்பிரமணியன். செல்வாவுக்கு எப்போதும் விஜயலட்சுமியின் வார்த்தைகள் ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கும். இருவருக்கும் மனம் ஒத்துப்போக இங்கிலாந்தில் திருமணம் நடந்தது. இவர்களது காதலுக்கு பரிசாக இப்போது ஒன்றரை வயதில் கார்த்திக் என்கிற மகன், மழலை பேசிக்கொண்டிருக்கிறான்.

இந்த ஆண்டு தொடக்கம் செல்வாவுக்கு அமோகமாக அமைந்திருக்கிறது. பல்கலைக்கழகத் தேர்வுக் குழுவால், அவரது ஆராய்ச்சி ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. Kerckhoffs Ltd என்கிற தகவல் பாதுகாப்பு மற்றும் அகவுரிமை நிறுவனத்தை இங்கிலாந்தில் தொடங்கியிருக்கிறார். தொழில்நுட்ப சிறுநிறுவனங்களை ஊக்குவிக்கும் பிரிட்டிஷ் அரசக் குடும்பத்தினர் முதலீடு செய்யும் அறக்கட்டளையில் இவரது தொழில்நுட்ப முன்மாதிரியை சமர்ப்பிக்கக்கூடிய அரிய வாய்ப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

ஐந்தாண்டு ஆராய்ச்சிகளுக்கு முனைவர் பட்டத்தை டென்ஷனோடு எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவருக்கு இன்ப அதிர்ச்சியை பல்கலைக்கழக தேர்வுக்குழு வழங்கியிருக்கிறது. யெஸ். டாக்டரேட் பட்டத்தோடு சேர்த்து ‘ஹானர்ஸ்’ பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறார்கள். தன்னுடைய ஆராய்ச்சி நூலில் இந்தியாவில் சமூகநீதி காத்த தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞர், வி.பி.சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

“தமிழகத்தில் என்ஜினியரிங் கல்வியையே போராடி பெற முடிந்த நிலையில் இருந்த நான், இன்று ஐரோப்பாவில் ஹானர்ஸ் பட்டம் பெறுமளவுக்கு வளர்ந்திருப்பதற்கு அங்கே சமூகநீதி சிந்தனைகள் தோற்றுவித்து, செயல்பாட்டுக்கு கொண்டுவர பெரும் முயற்சி செய்த தலைவர்களே காரணம். எனவேதான் என்னுடைய நூலில் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தேன்” என்று சொல்கிறார் செல்வா.

பொதுவாக மாற்றுத் திறனாளிகள் தங்கள் மீது யாரேனும் அனுதாபம் செலுத்தினால் அதை விரும்ப மாட்டார்கள். ஆனால், அதைப்பற்றி செல்வா அலட்டிக் கொள்வதில்லை.

“அனுதாபம் என்பதும் ஒருவகை அன்புதான். அதை மறுக்கக்கூடாது. நாம் மற்றவர்களிடமிருந்து கொஞ்சம் மாறுபட்டிருக்கிறோம் என்று அவர்கள் நம் மீது அன்பு செலுத்துகிறார்கள். திருப்பரங்குன்றம் கோயில் படிகளில் நான் தவழ்ந்து ஏறும்போது சில வடநாட்டு யாத்ரீகர்கள் காசு கொடுப்பார்கள். கவுரவம் பார்க்காமல் அதை வாங்கிக் கொள்வேன். மகிழ்ச்சியோடு போவார்கள். அந்த காசை கொண்டுபோய் கோயில் உண்டியில் போடுவேன். ‘பிச்சைக்காரன்னு நெனைச்சியா?’ என்று அவர்களிடம் நான் கோபத்தை காட்டியிருந்தால், அவர்களது அன்பை மறுக்கக்கூடியவனாக ஆகியிருப்பேன். . அன்பு வழியை தேர்ந்தெடுப்பவர்களுக்கு தோல்வியே இல்லை” என்று உணர்ச்சிப் பூர்வமாக பேசுகிறார்.

“ஓக்கே செல்வா. நெக்ஸ்ட்?”

“இப்போதெல்லாம் ‘நெக்ஸ்ட்?’ என்கிற கேள்வி என்னை பயமுறுத்துவதில்லை. மாறாக, அடுத்தடுத்து இந்த கேள்வி கேட்கப்பட்டால்தான் அடுத்தடுத்து ஏதாவது செய்துக்கொண்டே இருக்க முடியுமென்று நினைக்கிறேன். என்னுடைய நிறுவனம் சம்பாதிக்கக்கூடிய லாபத்தில் ஒரு பகுதியை, என்னை வளர்த்த சமூகத்துக்கு செலவழிக்க வேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறேன். தமிழகத்தில் பொறியியல் கல்லூரி ஒன்றில் தகவல் பாதுகாப்பு மற்றும் அகவுரிமை ஆய்வகத்தை அமைத்து, நம் மாணவர்களுக்கு மேம்பட்ட சிறப்பு வாய்ப்புகளை வழங்கும் திட்டமிருக்கிறது” என்கிறார் ஹானர்ஸ் செல்வகுமார்.

(நன்றி : தினகரன் வசந்தம்)

கருத்துகள் இல்லை: