செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

சுப.வீரபாண்டியன்: மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள் என்பதற்கு நெடுவாசல் ....

அரசோ, அதிகாரமோ யாராயிருந்தாலும் இனி எதனையும் உடனே முடிவெடுத்து விட முடியாது என்கின்ற அளவிற்கு மக்களிடம் விழிப்புணர்ச்சி பெருகியுள்ளது என்றே கூற வேண்டும். அதற்கு நெடுவாசல் இன்னொரு எடுத்துக்காட்டாய் எழுந்து நிற்கின்றது. மக்கள் திரண்டு போராடுகின்றனர். அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர். இளைஞர்கள் அங்கு கூடுகின்றனர். இரண்டு மூன்று நாள்களாய் எல்லாச் சாலைகளும் நெடுவாசல் நோக்கியே நீள்கின்றன. எனினும் உணர்ச்சி வயப்பட்டு உடனே அந்த இடத்தில் போய் நின்றுவிடுவதில் எனக்கு ஒரு தயக்கம் இருக்கவே செய்தது. இப்போதெல்லாம் எங்கு மக்கள் திரண்டாலும் உடன் அந்தப் போராட்டத்தை ஆதரித்து விட வேண்டும், அந்த ஜோதியில் நாமும் கலந்து விட வேண்டும் என்ற ஒரு போக்கு எழுந்துள்ளது. இதுவும் நல்லதில்லை. மாற்றுக் குரல்களைச் செவி மடுப்பவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். இந்தச் சிக்கல் என்பது முதன்மையாக மக்கள் நலன், சுற்றுச் சூழல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகிய மூன்று தளங்களில் நிலை கொண்டுள்ளது.
மக்கள் நலனே முதன்மையானது என்பதில் எந்தக் கருத்து வேறுபாட்டிற்கும் இடமில்லை. எனினும் மற்றவைகளையும் கவனிக்காமல் புறந்தள்ளி விட வேண்டியதில்லை. நான் அறிந்த புவியியல் பேராசிரியர்கள். சூழலியலாளர்கள், பொருளியல் வல்லுநர்கள் ஆகிய மூன்று துறையினரிடம் சில செய்திகளைக் கேட்டறிந்தேன். அவையும் இறுதியான கருத்துகளாக இருக்க முடியாது என்பதை உணர முடிகிறது.

இருந்தாலும் முடிவை நெருங்குவதற்கு அவை உதவுகின்றன. அங்கு கிடைக்கக்கூடிய எண்ணையின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர். வாயுதான் (gas) மிகுதி என்கின்றனர். அதனால் பெரிய பயன் ஏதும் இருக்காது என்பது அவர்களின் கருத்து.
15 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியப்பட்டணம் அருகில் இப்படி வாயு கிடைத்ததாகவும், அதிலிருந்து மின் உற்பத்தி நடைபெறுவதாகவும், அதனால் அங்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்றும் கூறுகின்றனர்.

நம் மண்ணையும், மண்ணின் வளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கருதுகின்ற நாம், எரி பொருளைப் பயன்படுத்துவதில் எந்தச் சிக்கனத்தையும் காட்டுவதில்லை என்ற அவர்களின் குற்றச்சாற்றை மறுக்க முடியாது. அதனால், நம் அன்னியச் செலவாணியில் 70 விழுக்காடு எரிபொருள் வாங்குவதில் போய்விடுகிறது என்றும் கூறுகின்றனர்.

ஆயிரம் இருந்தாலும், இந்த முயற்சியால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்றே தெரிகிறது. மேலும், கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு அரசு கொடுக்கும் பணம் நியாயமாக இருக்காது என்பதும் அனுபவத்தில் நாம் கண்ட உண்மை. ஆகவே அந்தப் பகுதி மக்களுக்கு இத்திட்டம் நன்மையை விடத் தீங்கையே கூடுதலாகக் கொண்டுவரும் என்பது தெளிவாகிறது.

 எனவே இந்நிலையில் அத்திட்டத்தைக் கைவிடுவதே சரியானதாக இருக்கும் என்னும் கருத்தை உறுதிப்படுத்தி, அங்கு போராடும் மக்களுக்கு ஆதரவாக இருப்பதே ஏற்றுக்கொள்ளத் தக்கது.

கருத்துகள் இல்லை: