ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

24 வருட பகை - தொடரும் பழிக்குப்பழி! வெங்கடேச பண்ணையார் கொலையுடன் தொடர்பு...

காவலர் வாகனம் கே.டி.சி. நகரை கடந்தபோது எதிரே வந்து குறுக்காக நின்றது மீன்கள் ஏற்றி செல்லும் வாகனம். முட்டிவிடக்கூடாது என காவலர் வாகனம் நின்றபோது, கணப்பொழுதில் எதிரிலிருந்த வாகனத்திலிருந்து கனத்த அரிவாளுடன் குதித்த சிலர், காவலர் வாகனத்தை உடைத்து அதே வேகத்தில் அரிவாளுடன் மிரண்டா, கோக், பெப்சி குளிர்பானப் பாட்டில்களில் அடைத்து வைத்திருந்த மிளகாய் பொடி கரைசலை போலீஸ் வாகனத்தில் உள்ள காவலர்கள் மற்றும் கைதி சிங்காரத்தின்மீது வீசி கண் எரிச்சலை உண்டாக்கி நிலை குலைய வைத்தனர். அப்போது, சாலையின் மற்றொரு முனையிலிருந்து இன்னோவா, குவாலிஸ், போர்டு உள்ளிட்ட கார்களிலிருந்தும், இரண்டு டூவீலர்களிலிருந்தும் இறங்கியவர்கள் எஸ்.ஐ.வீரபாகுவின் துப்பாக்கியை பறித்து காவல் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து, சிங்காரத்தை வெளியில் இழுத்து வெட்டிக் கொன்றனர்

நெல்லையில் போலீஸ் ஜீப்பை வழிமறித்து 24 வருட பகையின் பழிக்குப்பழியாக நடைபெற்ற கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் 4 போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் கண்முன்னே படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புல்லாவெளி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம் என்ற பாலசுப்பிரமணியன்(வயது 47) , தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவராக இருந்த பசுபதி பாண்டியனின் நெருங்கிய கூட்டாளி ஆவார். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் 9 வழக்குகளும், நெல்லை அருகே சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் மதன் உள்பட 3 பேர் கொலை வழக்குகளும் உள்ளன. பழைய காயலில் 2016 மார்ச் 8ஆம் தேதி மகாசிவராத்திரிக்கு மறு நாள் கொலைசெய்யப்பட்ட ஆறுமுகச்சாமி, அய்யாக்குட்டி இரட்டைக் கொலைக்கு காரணமானவராகவும் , 1993ம் வருடத்தில் கொலை செய்யச்செய்யப்பட்ட அசுபதி பண்ணையார் கொலையின் கொலையாளிகளில் ஒருவருமான இந்த சிங்காரம், நேற்று முன்தினம் பகல் 10.30 மணிக்கு நெல்லை கே.டி.சி. நகரில் பட்டப்பகலில் போலீஸ் கண்முன்னே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.


உடனடியாக, கொலை நடந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் திருஞானம், துணை கமி‌ஷனர் பிரதீப்குமார், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் ஆகியோர் கொலை நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் அருகில் உள்ள ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொலையாளிகள் பயன்படுத்திய கார்கள் மற்றும் கொலையாளிகளின் படங்கள் பதிவாகியது தெரிந்தது. அந்த காட்சிகளை வைத்து 2 கார்களையும் மீன் ஏற்றி செல்லும் ஒரு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கார்களில் இருந்த அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களையும், ரத்தகறை படிந்த சட்டைகளையும் போலீசார் கைப்பற்றினர்.

5 தனிப்படை அமைப்பு
கொலையாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகளை அமைத்து நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் திருஞானம் உத்தரவிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொலையாளிகள் குறித்து துப்பு துலக்க 2 தனிப்படைகளை அமைத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சிங்காரத்துக்கும், வெங்கடேஷ் பண்ணையாரின் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதன காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா என்றும்,
நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி மதன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் கொலைகள் தொடர்பாக பழிக்குப் பழியாக சிங்காரம் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்றும்,
பசுபதி பாண்டியனுடன் இருந்த சிங்காரம், பசுபதி பாண்டியனை கொலை செய்வதற்கு உடந்தையாக செயல்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் இந்த கொலையை செய்திருக்கலாமா என்றும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
அஜாக்கிரதையால் கொலை
தூத்துக்குடி மாவட்டம் முறப்ப நாடு பகுதியில் கடந்த 8.1.2016-ல் காவலரை தாக்கியதாக ஒரு வழக்கும்,9.1.2016-ல் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்ததாக மற்றொரு வழக்கும் முன்பு பதியப்பட்ட நிலையில் இரட்டைக் கொலைக்குப் பிறகு தன்னுடையப் பாதுகாப்பிற்காக, தானாகவே சரணடைந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வந்தார் சிங்காரம். இதில் காவலரை தாக்கிய வழக்கிற்காக தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை எஸ்.ஐ.வீரபாகு உள்ளிட்ட நான்கு போலீசார் பாளையங்கோட்டை சிறைக்கு சென்று தூத்துக்குடிக்கு திரும்பிய பொழுதில் கே.டி.சி. நகரில் கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டார் சிங்காரம். ஆனால் இதற்கு முன்பாக முக்காணி ரவுண்டானா பகுதியில் ஆத்துாரை சேர்ந்த சிதம்பரம் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில், திருச்செந்துார் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு ஆஜர் செய்ய சிங்காரத்தை 2016ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி கொண்டு வரும்பொழுது இதே மிளகாய்பொடி கலந்த தண்ணீரை தெளித்து கொலை செய்ய முயன்றது கொலையாளிகள் டீம். அப்பொழுது தப்பியவர் போலீசாரின் அஜாக்கிரதையால் இப்பொழுது கொல்லப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குற்றவாளி சிங்காரத்தை ஏற்றிக்கொண்டு காவலர் வாகனம் கே.டி.சி. நகரை கடந்தபோது எதிரே வந்து குறுக்காக நின்றது மீன்கள் ஏற்றி செல்லும் வாகனம். முட்டிவிடக்கூடாது என காவலர் வாகனம் நின்றபோது, கணப்பொழுதில் எதிரிலிருந்த வாகனத்திலிருந்து கனத்த அரிவாளுடன் குதித்த சிலர், காவலர் வாகனத்தை உடைத்து அதே வேகத்தில் அரிவாளுடன் மிரண்டா, கோக், பெப்சி குளிர்பானப் பாட்டில்களில் அடைத்து வைத்திருந்த மிளகாய் பொடி கரைசலை போலீஸ் வாகனத்தில் உள்ள காவலர்கள் மற்றும் கைதி சிங்காரத்தின்மீது வீசி கண் எரிச்சலை உண்டாக்கி நிலை குலைய வைத்தனர். அப்போது, சாலையின் மற்றொரு முனையிலிருந்து இன்னோவா, குவாலிஸ், போர்டு உள்ளிட்ட கார்களிலிருந்தும், இரண்டு டூவீலர்களிலிருந்தும் இறங்கியவர்கள் எஸ்.ஐ.வீரபாகுவின் துப்பாக்கியை பறித்து காவல் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து, சிங்காரத்தை வெளியில் இழுத்து வெட்டிக் கொன்றனர் என கொலையைப் பற்றி அருகில் இருந்தவர்கள் போலீஸ் விசாரனையில் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
இந்நிலையில், சந்தேகத்தின்பேரில் 9 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடரும் 24 வருட பகை
ஏன் இந்த தொடர் கொலைகள்.? என்ற கேள்விக்கு 24 வருடம் கழித்து கட்டாயம் பின்னோக்கி சென்றாலொழிய இந்தக் கதை தெரிய வாய்ப்பில்லை. " தூத்துக்குடி மாவட்டம் புல்லாவெளி கிராமத்தில் மூலக்கரையை சேர்ந்த சிவசுப்பிரமணிய நாடாருக்கும், அவரது மகனுமான அசுபதி பண்ணையாருக்கும் உப்பளங்கழிகளும், வயல்களுமாக அளவில்லாத சொத்துக்கள் அங்கு. ஆண்டான் அடிமை பிரச்னை, ஊதிய பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் தலைத்தூக்க, பிரச்னைகளை அப்பொழுது தூத்துக்குடி கடற்கரையோரப் பகுதியான அலங்காரத் தட்டில் சமுதாயத் தலைவராக வளர்ந்துக் கொண்டிருந்த, பின்னாளில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக வலம்வந்த பசுபதி பாண்டியனிடம் கொண்டு சென்றது தற்பொழுதுக் கொலையான புல்லாவெளி சிங்காரம். உட்கார்ந்து பேசி முடிக்க எண்ணாமல் இரு தரப்பும் மூர்க்கமாகவே பிரச்சனைகளை வளர்க்க ஜனவரி 24ஆம் தேதி தற்பொழுதைய நாடார் பாதுகாப்புப் பேரவையின் தலைவரான சுபாஷ் பண்ணையாரின் தந்தையும், போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட வெங்கடேஷ் பண்ணையாரின் சித்தப்பாவுமான அசுபதி பண்ணையாரைக் கொலை செய்து பகையை துவக்கி வைத்தது பசுபதிபாண்டியன் தலைமையிலான பொட்டல் கண்ணன், பாம் கர்ணன், பீர்முகம்மது, சிங்காரம் உள்ளிட்ட டீம்.
இன்னும் கொலைகள் தொடரும்
அதற்கடுத்த சில தினங்களிலேயே, 1993ஆம் ஆண்டு ,ஜூலை 8ஆம் தேதி சிவசுப்பிரமணிய நாடாரையும் வெட்டி வீழ்த்த அதிலிருந்தே பகை பெருகி, ஆரம்பத்தில் இரு தரப்பாக இருந்து பழிக்குப் பழியாக கொலைகள் நடத்தியவர்கள் தங்கள் பாதுக்காப்பிற்காக இரு சமுதாய பகையாக மாற்றியது குறிப்பிடத்தக்கது. பழிக்குப் பழியாக இருதரப்பிலும் மூன்று இலக்கத்தை தொடுமளவிற்கு பல கொலைகள் நடந்துள்ளது. இதில், முதல் கொலையின் சூத்ரதாரிகளான பொட்டல் கண்ணன், பாம் கர்ணன், பீர்முகம்மது பல தலைகளை பகைமுடித்த சுபாஷ்பண்ணையார் டீம், இறுதியில் பசுபதி பாண்டியனையும் முடித்து பகைதீர்த்தது. புல்லாவெளி சிங்காரம் மட்டும் தப்பித்து பசுபதிபாண்டியன் கொலைக்குக் காரணமான சுபாஷ்பண்ணையாரை தீர்க்க கண்ணபிரான், குமுளிராஜ்குமார் போன்றோருடன் காத்திருந்து கடந்த வருடத்தில் பழையகாயலுக்கு படையெடுத்த நிலையில் சுபாஷ்பண்ணையார் தப்பிக்க, அவரது ஆதரவாளர்களான ஆறுமுகச்சாமி, அய்யாக்குட்டியைக் கொன்று தலையை மட்டும் வெட்டி எடுத்து தெய்வச்செயல் புரத்திலுள்ள பசுபதிபாண்டியனின் படமிருந்த கொடிக்கம்பத்தின் அடியில் வைத்து சென்றது. அதன் பின் இப்பொழுது சிங்காரம் கொலை. இது இத்தோடு நிற்க வாய்ப்பில்லை. பழிக்குப் பழியாக சிங்காரம் தரப்பும் செய்யும் என்பதால் கொலைகள் இன்னும் தொடரும்." என நம்மிடம் பேசினார் முன்னாள் காவல் அதிகாரி.
கொலை செய்யப்பட சிங்காரத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக நேற்று பாளையங்கோட்டை ஐ கிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சிங்காரத்தின் உறவினர்கள், சிங்காரத்தின் உடலை வாங்க மறுத்து, சிங்காரத்தை கொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக சிங்காரம் குடும்பத்தினருடன், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், தூத்துக்குடி ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் வீரபாகு மற்றும் காவலர்கள் பிரின்ஸ்டோன், பாலசுப்பிரமணியன், பிரகாஷ் ஆகிய 4 பேர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். மேலும், கொலை செய்யப்பட சிங்காரத்தின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக உயரதிகாரிகளிடம் கலந்துபேசி முடிவு செய்யப்படும் என்று போலீசார் கூறியதையடுத்து சிங்காரத்தின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- வெண்பா மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: