வியாழன், 26 ஜனவரி, 2017

நீட் தேர்வில் விதிவிலக்கு... கி.வீரமணி : ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்கு சாவுமணி! நீட் தேர்வு, லட்சம் ஜல்லிகட்டு தடைக்கு சமம்?

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதி விலக்கு அளிக்க வேண்டும்.  இல்லையேல் எதிர்காலத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாய இன மக்களின் பிள்ளைகள் டாக்டர்கள் ஆகும் வாய்ப்பை அறவே மறந்து, துறந்து விட வேண்டியதாகி விடும் என்பது உறுதி!

அகில இந்திய நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து, தமிழ்நாட்டுக்கு விதி விலக்கு அளிக்கவேண்டுமென திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டி, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசின் கொள்கைகளையும், 2017ஆம் ஆண்டிற்குரிய செயல் திட்டங்களையும் அறிவித்து, சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஏற்கப்படுவதற்கான முன்னோட்டமே, ஆளுநர் உரை என்பதாகும். கடந்த பல மாதங்களாக தமிழ்நாட்டில் பொறுப்பு ஆளுநரே இருப்பது, தமிழ்நாட்டிற்கும் சரி, மத்திய அரசுக்கும் சரி பெருமை தரும் அரசியல் சட்ட நடைமுறையாக ஒரு போதும் ஆகாது! மத்தியில் உள்ள பிரதமர் மோடி அரசு ஏன் இத்தனை மாதங்கள் காலந் தாழ்த்தி வருகின்றது என்பது வெளிப்படையான ஊகத்திற்குரியதுதான்! தாங்கள் விரும்பும் ஆர்.எஸ்.எஸ்.காரரை (எந்த மத்திய அரசு பதவிக்கும் மோடி அரசில் இதுதான் முதல் முன்னுரிமைத் தகுதி என்பதால்) நியமிக்க முனைகிறது மத்திய அரசு. ஆளுநர் நியமனத்தைப் பொறுத்தவரை மாநில அரசுடன், முதல் அமைச்சருடன் கலந்து பேசி இருசாராருக்கும் கருத்திணக்கம் ஏற்பட்டு நியமிக்கப்படுவதுதான் இதற்கு முன் நடைமுறை. அரசின் கருத்தறிந்து நல்லிணக்கம் கொண்ட ஆளுநரை நியமிக்க வேண்டும்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்த போதே ஏற்பட்ட இந்தக் காலி இடத்தை நிரப்பிட, கர்நாடக ஆர்.எஸ்.எஸ்.காரரைப் பரிந்துரைத்தது மத்திய அரசு. அதை அன்றைய முதல்வர் திட்டவட்டமாக ஏற்க மறுத்த நிலையில் பொறுப்பு ஆளுநராக திரு. வித்யாசாகர்ராவ் அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இன்னமும் எத்தனை காலம் இப்படியே தொடருவது நியாயம்? எனவே தமிழ்நாட்டு அரசின் கருத்தறிந்து நல்லிணக்கம் கொண்ட ஒருவர் உடனடியாக நியமனம் செய்யப்படல் அவசர அவசியமாகும்.
ஆளுநர் உரை என்ற அந்த உரையில் தமிழ்நாடு, மத்திய அரசால் எப்படி வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பதை பல இடங்களில் அ.தி.மு.க. அரசு சுட்டிக் காட்டி, ஒப்பாரி வைத்து அழுதுள்ளதே தவிர, வலிமையான உரிமைக் குரலை ஏனோ ஓங்கி ஒலிக்கவில்லை.
முதலமைச்சரும், நிதியமைச்சருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஆற்றவிருக்கும் நிதி நிலை அறிக்கை உரையில் அதைச் செய்தால், நடு நிலையாளர்களும், மாநில உரிமைக் காவலர்களும் அதை வரவேற்பது உறுதி! தமிழக (பொறுப்பு) ஆளுநர் உரையில்,
"2005ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகள் உள்பட அனைத்துத் தொழில்முறைக் கல்லூரிகளுக்கான சேர்க்கையை முறைப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து, 2006 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொழில்முறைக் கல்வி நிலையங்களுக்கான நுழைவுச் சட்டத்தை இயற்றி, தொழில்முறைக் கல்விக்கான தனி நுழைவுத் தேர்வுகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது. ஊரக, ஏழை, எளிய, சமூகப் பொருளாதார நிலையில் நலிவடைந்த குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களால் நகர்ப்புறங்களில் பயிலும் மாணவர்களோடு பொது நுழைவுத் தேர்வுகளில் போட்டியிட இயலாது என்பதால், அத்தகைய மாணவர்களின் நலனிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மருத்துவக் கல்விக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதோடு மட்டுமல்லாமல், சிறப்பாகச் செயல்பட்டுவரும் வெளிப்படையான சேர்க்கை முறையைப் பின்பற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்குப் பெரும் அநீதி இழைப்பதாகவும் உள்ளது.
எனவே, மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் வெளிப்படையான சேர்க்கை முறையையே தொடர்ந்து பின்பற்ற இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்" என்று குறிப்பிட்டது நம்மைப் போன்ற சமூக நீதிப் போராளிகளுக்கும், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கும், இதற்காக போராட்ட களங்களில் பகுதி பகுதியாக முதற்கட்டம், இரண்டாம் கட்டம் என்று போராடி வருவதால் தக்க பலன் கிடைக்கத் துவங்கி உள்ளது என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு, நாடாளுமன்றத்தில் அகில இந்திய நுழைவுத் தேர்வு (மருத்துவப் படிப்புக்கானது) சட்டமாக்கப் பெற்ற நிலையில் இது சாத்தியப்படுமா என்ற அய்யம், தமிழகத்தின் அரசுக்கோ, ஊடகங்களுக்கோ, மக்களுக்கோ, பெற்றோர்களுக்கோ தேவையேயில்லை. ஏறுதழுவுதலை செயல்படுத்த, எப்படி பொதுப் பட்டியலில் உள்ள ஒரு பொருளுக்கு, விலக்கு அளிக்கப்பட்டதோ அப்படி இதிலும் விலக்குப் பெற முடியும்.
இந்திய அரசியல் சட்டத்தில் கல்வி 7ஆவது அட்டவணையில் (Seventh Schedule) உள்ளபடி List III-Concurrent List, Item 25. Education, including technical education, medical education and universities, subject to the provisions of entries 63, 64, 65 and 66 of List I; vocational and technical training of labour.
அதாவது பொதுப் பட்டியலின் 25ஆ0வது பொருளாக (Item 25) தொழில் நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி உள்ளிட்ட கல்வித் துறை இருப்பதால் மேற்கண்ட நடைமுறை இதற்கும் பொருத்தும்.
21 ஆண்டு கால அனுபவத்தாலும், சமூக நீதிக் கண்ணோட்டத்திலும், கிராமப் புற ஏழை, எளிய முதல் தலை முறையினர் டாக்டர்களாக படித்து முன்னேறத் தடையாக இருக்கும் என்பதாலும், நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதி விலக்குச் சட்டத் திருத்தத்தை தமிழக சட்டமன்றத்தில் உடனடியாக நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலைப் பெற்று, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்து சட்டமானால், (தமிழ்நாடு) நுழைவுத் தேர்வு எழுத வேண்டியிராது. எனவே, இந்த நுழைவுத் தேர்வால் தமிழ்நாட்டு ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு சமூகநீதியை மறுக்கும் வாய்ப்பு உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் நுழைவுத் தேர்வால் பாதிக்கப்பட்டு, பிறகு அது ரத்து செய்யப்பட்டதினால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட (BC, MBC, SC, ST) பிள்ளைகள் மிகப் பெரும் அளவில் கடந்த சில ஆண்டுகளில் பயன் பெற்று வருகிறார்கள் என்பதையும் எடுத்துச் சொல்லி, கடந்த காலத்தில் திமுக, அதிமுக அரசுகளால் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலைக்கு மாறாக இந்த ஆண்டு நுழைவுத் தேர்வை திணித்தால், பெருங்கொந்தளிப்பும், அரசியல் சட்டம் அடிப்படை உரிமையாக வழங்கும் சமூகநீதி வாய்ப்புகளுக்குக் கேடு ஏற்படும் என்பதால் உடனடியாக (விதி விலக்கு தரும்) இதனை தனிச் சட்டமாக்கி தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, நமது தமிழ்நாட்டு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரைச் சந்தித்து வலியுறுத்துவதோடு நடைபெறவிருக்கும் மக்களவை, மாநிலங்களவை கூட்டத்தொடரில் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதி விலக்கு அளிக்க வேண்டியதையும் வற்புறுத்திட வேண்டும். இதில் காலம் தாழ்த்திடக் கூடாது. இல்லையேல் எதிர்காலத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாய இன மக்களின் பிள்ளைகள் டாக்டர்கள் ஆகும் வாய்ப்பை அறவே மறந்து, துறந்து விட வேண்டியதாகி விடும் என்பது உறுதி! இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: