புதன், 25 ஜனவரி, 2017

3 போலீஸ் ஆணையர்களை இடைநீக்கவேண்டும்- சிபிஎம்

thetimestamil.com ; வன்முறைச் சம்பவங்கள் அனைத்திற்கும் காரணமான போலீஸ் ஆணையர்கள் சென்னை – ஜார்ஜ், கோவை – அமல்ராஜ், மதுரை – சைலேஷ்குமார் ஆகியோரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து, அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென சிபிஎம் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச்செயலர் ஜி.இராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜல்லிக்கட்டு உரிமைக்காக ஒருவார காலம் தமிழகம் முழுவதும் அமைதியாகப் போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவர் மீதும் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் மூர்க்கத்தனமான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஏற்கனவே வன்மையாக கண்டித்துள்ளது. இதுபோல் தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகள் – பிரமுகர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல தரப்பினரும் காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை கண்டித்துள்ளன.

தமிழ்நாட்டின் பண்பாட்டு உரிமைக்கான மாணவர்கள் – இளைஞர்களின் வரலாறு காணாத பேரெழுச்சியின் நிர்ப்பந்தத்தினால் தமிழக அரசும், மத்திய அரசும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. எனினும் போராடிய மாணவர்கள் – இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக அணிதிரண்டவர்களை அச்சுறுத்துவது, வீடுபுகுந்து கைது செய்வது, காவல்நிலையத்தில் வைத்து தாக்குவது, அவர்கள் மீது பல்வேறு வழக்குகளைப் புனைவது என ஜனநாயகத்திற்கும், சட்ட நியதிகளுக்கும் புறம்பான நடவடிக்கைகளை காவல்துறையை ஏவி விட்டு அதிமுக அரசு மேற்கொண்டு வருகிறது. இத்தகைய ஜனநாயக விரோத அத்துமீறல்களையும், மனித உரிமை மீறல்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், போராடிய மாணவர்கள்-இளைஞர்களை சமூக விரோதிகள் என்றும், தேச விரோதிகள் என்றும் அறிவித்து அவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார். கோவை மாநகர கமிஷனர் அமல்ராஜ் எஸ்.எப்.ஐ., டி.ஒய்.எப்.ஐ., உள்ளிட்ட மாணவர்கள், இளைஞர்களின் ஜனநாயக அமைப்புகளை தேச விரோத சக்திகள் என்று முத்திரைக் குத்தி அவர்கள் மீதான தாக்குதலை கோவையில் நிகழ்த்தியுள்ளார். மதுரை மாநகர கமிஷனரும் போராடிய மாணவர்கள், இளைஞர்களை சமூக விரோதிகள், தேச விரோதிகள் என குற்றம் சுமத்தி வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார். மாணவர், இளைஞர் சங்கங்களின் முன்னணி தலைவர்கள் வீடுகளுக்குச் சென்று போராட்டம் நடத்தினால் குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்று அச்சுறுத்தும் நடவடிக்கைகளை காவல்துறையினர் தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசின், காவல்துறையின் இந்த அச்சுறுத்தல் அடக்குமுறை நடவடிக்கைகள் ஜனநாயக நெறிமுறைகளை மீறிய செயல் மட்டுமல்ல, ஜனநாயக இயக்கங்களை அடக்கி ஒடுக்கும் எதேச்சதிகார செயலுமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசின் மீதும், காவல்துறையின் மீதும் குற்றம் சுமத்துகிறது.
23.1.2017 அன்று தொடங்கிய சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே – அன்றைய தினம் அதிகாலை தொடங்கி இரவு வரை காவல்துறையினர் போராடியவர்கள் மீது தொடுத்த மூர்க்கத்தனமான வன்முறைத் தாக்குதல்கள், கண்ணீர் புகை குண்டு வீச்சு, காவல்துறையினரே நடத்திய தீ வைப்பு சம்பவங்கள், இளம் பெண்கள் – கர்ப்பிணிப் பெண்கள் மீது நடத்திய வெறித்தனமான தடியடிகள், குடியிருப்பு பகுதிகளில் புகுந்து நடத்திய வன்முறைகள், சாலையோரம் நின்ற வாகனங்களை நொறுக்கியது, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டு காவல்துறையின் அராஜகம் குறித்த பல்வேறு விபரங்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், வீடியோ பதிவுகளிலும் வெளிவந்துள்ளன. இந்த வன்முறைச் சம்பவங்கள் அனைத்திற்கும் காரணமான போலீஸ் கமிஷனர்கள் சென்னை – ஜார்ஜ், கோவை – அமல்ராஜ், மதுரை – சைலேஷ் குமார் ஆகியோரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து, அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.இராமகிருஷ்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: