சனி, 28 ஜனவரி, 2017

போயசின் லேடஸ்ட் பஜனை : சின்னம்மா முதல்வர் ஆகணும்! ... என்னை சீஎம் ஆக்கிடு நடராஜன் பஜனை


ஜெயலலிதா இறந்த அந்த இரவில்கூட லேசாக கண்ணை மூடியபடி உட்கார்ந்திருந்த சசிகலா, கடந்த புதன்கிழமை இரவு முழுமையாகத் தூங்கவில்லை. தூக்கம் வராமல் கார்டனில் இங்கும் அங்குமாக நடந்தபடியே இருந்தார் என்கிறார்கள்.’’
‘‘அவர் தூக்கத்தைப் பறித்தவர் யார்’’?
‘‘நடராஜன் தரப்பிலிருந்து சசிகலாவிடம் பேசியிருக்கிறார்கள். ‘இவ்வளவு சிக்கல் இருக்கும்போது நீங்கள் முதல்வராக ஆவது சரியாக இருக்காது. அதனால நடராஜனை முதல்வராக்கிடலாம்.’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு நடராஜனே சசிகலாவிடம் பேசினாராம். ‘சொத்துக்குவிப்பு வழக்குல என்ன தீர்ப்பு வரப்போகுதுன்னு தெரியாது. அதனால நீ முதல்வராக வேண்டாம். தீர்ப்பு எதுவும் தப்பா வந்தால் பதவி போயிடும். என்னை முதல்வராக்கிடு. எல்லா பிரச்னைகளையும் நான் பாத்துக்குறேன். சொத்துக்குவிப்பு வழக்குல தீர்ப்பும் சாதகமாக வர்ற மாதிரி பாத்துக்குறேன்’ என்று நெருக்கடி கொடுத்திருக்கிறார். சசிகலா எந்தப் பதிலும் சொல்லவில்லையாம். அதனால்தான் அன்று இரவு முழுவதுமே தூங்கவே இல்லை என்று சொல்கிறார்கள்.

இந்தத் தகவல் நேற்று காலை திவாகரனுக்குப் போயிருக்கிறது. அவர் உடனே சென்னை கிளம்பி வந்திருக்கிறார். ‘அவரு சொல்றதை எல்லாம் கேட்க வேண்டாம். அது எப்படி சரியாக இருக்கும். யாரும் ஏத்துக்க மாட்டாங்க. எதுவும் சிக்கல் வந்துடக் கூடாது. அதனால உடனடியாக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தைக் கூட்டுங்க...’ என்று சொல்லியிருக்கிறார் திவாகரன். அவர் கொடுத்த ஐடியா-படிதான் எம்.எல்.ஏ..க்கள் கூட்டம் நடந்திருக்கிறது. ஓ.பி.எஸ். கொடியேற்றிய குடியரசு தினத்துக்குக் கூட வராத எம்.எல்.ஏ.,க்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்துவிட்டார்கள்.
அதே நேரத்தில், முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்றும் சிலர் கார்டனில் சொல்லியிருக்கிறார்கள். துக்ளக் ஆசிரியரான குருமூர்த்தியுடன் முதல்வருக்கு ரகசிய நட்பு இருக்கிறது. மத்திய அரசு நினைப்பதை, குருமூர்த்தி மூலமாக பன்னீரிடம் சொல்லி செயல்படுத்த வைக்கிறது என்றும் சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார்கள் சிலர். ஆனால் சசிகலாவோ, ‘மத்திய அரசு என்ன நினைக்குதோ எனக்குத் தெரியாது. பன்னீர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அவர் அப்படி நடந்துக்க மாட்டாரு...’ என்று சொன்னாராம்.
இப்படி எல்லாப் பக்கங்களில் இருந்தும் சசிகலாவுக்கு தொடர்ந்து சிக்கல் வந்துகொண்டே இருப்பதால், உடனடியாக அவரை முதல்வராகப் பதவியேற்க வைத்துவிட வேண்டும் என நினைக்கிறார் திவாகரன். அதற்கான வேலைகளிலும் அவர் இறங்கிவிட்டார். சசிகலாவுமே கிட்டத்தட்ட அந்த மனநிலைக்கு வந்துவிட்டார். அதனால் விரைவில் பதவியேற்பு விழா இருக்கும் என்கிறார்கள். அதே நேரத்தில் யாராவது, ஏதாவது குழப்பம் செய்தால் அவர்களை நேரடியாக எதிர்ப்பதற்குக் கூட சசிகலா துணிந்துவிட்டார் என்கிறார்கள்’’

சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி .க்கள் கூட்டம் நேற்று அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பங்கேற்க தலைமைக்கழகத்திற்கு வந்த சசிகலாவிற்கு மேளதாளத்துடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்புக் கொடுத்தனர். மேலும் சாலையின் இருபுறமும் குவிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சசிகலாவை வாழ்த்தினர்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சசிகலா பேசுகையில்,
எதிரான கட்சி நம்மை பிரிக்கவும், அழிக்கவும் சதி செய்கிறார்கள்.அது எடுபடாது.எடுபடவும் இடம் கொடுக்க கூடாது. அம்மா என்ன கொள்கையில் இருந்தார்களோ, அந்த கொள்கையை, அம்மாவின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும். 2019இல் எம்.பி.தேர்தல் வருது. அந்த தேர்தலில் இப்ப உள்ளதுபோல், மகத்தான வெற்றி பெறனும். இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தொகுதிக்கு போங்க. தொகுதியில் உங்கள் மக்கள் பிரச்னைகளை உடனே தீர்த்து வையுங்க. சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் பேசுங்க. அவங்க செய்யலைன்னா எனக்கு கடிதமா தாங்க.நான் செய்றேன் என்றார்.
அப்போது, கூட்டத்தில் கலந்துகொண்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. தூசி மோகன் ஆகிய மூன்று பேரும் எழுந்து நின்று
அம்மா நீங்க முதலமைச்சரா வரணும் ,
அம்மா நீங்க முதலமைச்சரா வரணும் ,
அம்மா நீங்க முதலமைச்சரா வரணும்
என்று மூன்று முறை குரல் கொடுத்தனர். அதனைக்கேட்ட சசிகலா சிரித்தபடி தலையாட்டினார். இந்த கூட்டத்தில், சசிகலாவால், போயஸ்கார்டன் வீட்டில் இருக்க வேண்டாம் என்று விரட்டப்பட்ட டி.டி.வி.தினகரனும், டாக்டர் வெங்கடேசனும் சசிகலாவுக்கு அருகே உடன் இருந்தனர்.
கூட்டத்தில், சசிகலா பேசும்போது, எதிரான கட்சி என்று குறிப்பிட்டது திமுக தான் என்று தெரிய வந்தாலும், ஒரு இடத்தில்கூட திமுக என்று சசிகலா குறிப்பிடாமல் பேசினார். ஆனால், இதேநேரத்தில், ஜெயலலிதா இருந்திருந்தால் தைரியமாக திமுக என்று குறிப்பிட்டு பேசியிருப்பார் என்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூட்டம் முடிந்து திரும்பி செல்லும்போது பேசிக்கொண்டே சென்றார்கள்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: