வெள்ளி, 27 ஜனவரி, 2017

மாணவர்கள் மீதான தடியடி ஏன்? ஸ்டாலின் கேள்விக்கு ஒ.பி.எஸ். பதில்.. வழக்கமான வழ வழ கொளகொள ..;

நக்கீரன் :சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) மெரீனாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது 23ஆம் தேதி போலீசார் தடியடி நடத்தியது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், 2009ம் ஆண்டில் இருந்து ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் பேசிய அவர், கடந்த 17ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடைப்பெற்றது. 22ஆம் தேதியே போராட்டக்காரர்கள் விலகுவதாக தெரிவித்தார்கள்.

போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று விலியுறுத்தினர். தேச விரோத, சமூக விரோத கும்பல்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பினர். முல்லைப் பெரியாறு, தனித் தமிழ்நாடு என கோரிக்கை எழுந்தது. குடியரசு தினத்தை சீர்குலைக்க சமூக விரோத கும்பல் திட்டமிட்டிருந்தது. இந்த போராட்டத்தின்போது குறைந்த பட்ச பலத்தை மட்டுமே காவல்துறையினர் பயன்படுத்தினர் என்றார்.   மாணவர்கள்


ஒ.பன்னீர்செல்வத்தின் விரிவான உரை:
;தமிழர்களின் பண்பாட்டு சின்னமாக விளங்கும் ஜல்லிக்கட்டு 2006ஆம் ஆண்டு முதலே பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை அவ்வப்போது வழங்கிய பல்வேறு இடைக்கால உத்தரவுகளின்படியே ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு தனது 11.7.2011 நாளிட்ட அறிவிக்கையில் காட்சிப்படுத்த தடை செய்யப்படும் விலங்குகள் பட்டியலில் காளையையும் சேர்த்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.;

உச்சநீதிமன்றம், மத்திய அரசால் 11.7.2011 அன்று வெளியிடப்பட்ட அந்த அறிவிக்கை மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 7.5.2014 அன்று இறுதி உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தவும், மகாராஷ்டிராவில் காளைமாட்டுப் பந்தயத்தை நடத்தவும் முழுமையான தடை பிறப்பிக்கப்பட்டது.மேலும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் 2009, இந்திய விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ளதால், இது மத்திய சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியின் காரணமாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் 7.1.2016 அன்று ஒரு அறிவிக்கையை வெளியிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு வழி செய்தது. ஆனால், பல அமைப்புகள் இதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து தடை உத்தரவை பெற்று விட்டன. இந்த வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் முடித்து விட்டது. ஆனால், இறுதி தீர்ப்பு இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என பாரதப் பிரதமரை நான் வலியுறுத்தி வந்தேன். 

அதற்கு முன்பாகவே ஜெயலலிதா ஜல்லிக்கட்டு நடத்துவதற்குரிய அவசர சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று பல முறை மத்திய அரசை புரட்சித் தலைவி அம்மா நேரிலும் கடிதம் வாயிலாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.இந்த சூழ்நிலையில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த இயலாத சூழ்நிலையில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர் சங்கம், மாடுபிடி வீரர்கள் சங்கம் போன்ற சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்களும், சில அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் 12.1.2017 முதல் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 16.1.2017 அன்று மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 700 பேர் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி வாடிவாசல் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் கேட்டுக் கொண்டும் அவர்கள் கலைந்து போகாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 227 பேர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், காவல் துறையினர் அவர்களை 17.1.2017 அன்று கைது செய்தனர்.

இதனையடுத்து, பொது மக்கள் சுமார் 3,500 பேர் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே கூடி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு கோரினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை, கோயம்புத்தூர், மதுரை மாநகர், திருச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூடினர்.இதனையடுத்து, காவல் துறையினர் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்தனர். விடுவிக்கப்பட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து, காவல் துறையினர் தலையீட்டின் பேரில், பின்னர் அவர்கள் கலைந்து சென்று வாடிவாசல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மீண்டும் சேர்ந்து கொண்டனர்.அன்று, சென்னை மெரினா கடற்கரை, சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கதக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி ஆங்காங்கு தொடர் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னையில் காவல் துறை உயரதிகாரிகள் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களுடன் பேசி அவர்களின் பிரதிநிதிகள் சுமார் 15 பேரை இது குறித்து அரசுடன் பேச சம்மதிக்க வைத்தனர்.எனது உத்தரவின் பேரில், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் ஆகியோர் 18.1.2017 அன்று அதிகாலை 2 மணிக்கு போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.அமைச்சர்கள், ஜல்லிக்கட்டு தடை நீக்குவதற்கு தமிழக அரசு மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். பிரதிநிதிகள், அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள், போராட்டக்காரர்கள் அனைவரும் அறியும்படி அரசு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டுமென்று கோரினர். 

18.1.2017 அன்று, நான் ஜல்லிக்கட்டு  பிரச்சினையில் சட்டரீதியான தீர்வு காண அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கி, 19.1.2017 அன்று காலை புதுடில்லியில் பாரதப் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்திட அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டுமென வலியுறுத்த உள்ளேன் என்பதையும் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்கள் போராட்டங்களை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளும் அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். நான் புதுடில்லி செல்வதற்கு முன் எனது வீட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களின் பிரதிநிதிகளை சந்தித்து இது பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினேன்.

19.1.2017 அன்று மதுரை மாநகர், வைகையாற்று பாலத்தில் சுமார் 1,000 பேர் நாகர்கோயிலில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரெயில் வண்டியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று, காரைக்கால் பெங்களூர் விரைவு ரெயில் வண்டியை சேலம் நகரில் சுமார் 500 பேர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மதுரை இரயில்வே சந்திப்பில் பயணிகள் ரெயில் ஒன்றையும், பின்னர் காரைக்குடி ரெயில் நிலையத்தில் குருவாயூர் விரைவு ரெயில் வண்டியையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறித்தனர்.காவல் துறையினர் தலையிட்டும் அவர்கள் ரெயில் வண்டிகளை செல்ல விடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த மறியல் போராட்டங்களினால் சென்னைக்கும் தென் மாவட்டங்களுக்கும் இடையிலான ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாநிலத்தின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல், ரெயில் மறியல், ஊர்வலம், மனித சங்கிலி போன்ற போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டனர். இப்போராட்டங்களின் போது காவல் துறையினர் பொது அமைதிக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். குறிப்பாக சென்னையில் ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற போதும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாமல் காவல் துறையினர் பார்த்துக் கொண்டனர்.

பாரதப் பிரதமரை 19.1.2017 அன்று புதுடில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்திட ஏதுவாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என நான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். எனது கருத்துகளை பரிவுடன் கேட்டுக் கொண்ட பாரதப் பிரதமர், இந்த பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்படாததை சுட்டிக் காட்டிய பாரதப் பிரதமர் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக எடுத்திடும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை அளித்தார்.எனவே, நான் புதுடில்லியிலேயே தங்கியிருந்து மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தங்கள் மேற் கொண்டு அதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்திட இயலுமா என்பது பற்றி சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் விவாதித்தேன். அதனடிப்படையில் மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு மாநில திருத்தம் ஒன்றை கொண்டு வர முடிவெடுக்கப்பட்டு, வரைவு சட்ட திருத்தம் புதுடில்லியிலேயே தயார் செய்யப்பட்டது.>இதை அவசர சட்டமாக பிறப்பிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி, இந்த அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் பரிந்துரை பெறப்பட்டு, மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப் படவேண்டும் என்பதால் அதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த அவசர சட்டத்தை அதிகாரிகள் மூலம் 20.1.2017 அன்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து விட்டு நான் சென்னை திரும்பினேன். இந்த அவசர சட்டத்திற்கு மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அன்று இரவே பெறப்பட்டது.

;20.1.2017 அன்று புது டில்லியிலும், சென்னை விமான நிலையத்திலும், பத்திரிகையாளர்களை சந்தித்த போது, தமிழக அரசால் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதைப் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினேன்.

அன்று மாலை மதுரை மாநகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் சுமார் 200 பேர் மதுரை விமான நிலையத்திற்குள் சென்று விமான போக்குவரத்தை தடை செய்யும் நோக்குடன் விமான நிலையத்திற்கு முன்பு மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமைதியாக கலைந்து போக செய்து, விமான நிலையம் அருகில் தேவையான ஏற்பாடுகளை பலப்படுத்தினர்.
மேதகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெற்று, விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்திற்கான தமிழ்நாடு திருத்தச் சட்டம் 21.1.2017 அன்று சட்டமாக்கப்பட்டது. எனவே, அடுத்த நாளே, அதாவது, 22.1.2017 அன்றே ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் மற்றும் சில இடங்களில் நடைபெறும் என தெரிவித்து அறிக்கை ஒன்றை நான் வெளியிட்டேன்.<;">21.1.2017 அன்று, ஊடகங்களுக்கு நான் பேட்டி அளித்த போது, 23.1.2017 அன்று துவங்க உள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரில், அவசரச் சட்டத்திற்கு மாற்றான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படும் என்பதை எடுத்துக் கூறினேன்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி நிரந்தர சட்டம் கொண்டுவர வேண்டுமெனவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டுமெனவும் அதுவரையில் தங்கள் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்து, மாநிலத்தில் பல்வேறு இடங்களில் காத்திருப்பு போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

;சென்னை மெரினா கடற்கரை மற்றும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்களிடையே பல்வேறு அமைப்பினர் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவி ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் போராட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியர், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை தூண்டிவிட்டதோடு, அவ்வமைப்பினர் பொது இடங்களில் மிகவும் ஆட்சேப கரமாக பேசி வந்தனர்.

இப்போராட்டங்கள் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டு, பொது மக்களின் அன்றாட அலுவலுக்கு இடையூறு ஏற்பட்டது. குறிப்பாக, சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சென்னை, மெரினா கடற்கரையில் 26.1.2017 வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, குடியரசு தினத்தன்று கறுப்புக்கொடி காட்டுதல், குடியரசு தின விழாவை சீர்குலைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட திட்ட மிட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன.<;">இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

கருத்துகள் இல்லை: