வியாழன், 27 அக்டோபர், 2016

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! - ஸ்டாலின்!

மின்னம்பலம்.காம் : நிதியமைச்சர் ஓ.பன்னீசெல்வம் முதல்வரின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று அவரை இரண்டாவது முறையாக தலைமைச் செயலகம் வந்தார். நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க முடியாத நிலையில் அவருடைய அலுவலகத்தில்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் நகலை வழங்கினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் ஆன நிலையில் அவரது அமைச்சரவைப் பொறுப்புகளை நிதியமைச்சர் ஓ.பன்னீசெல்வத்துக்கு மாற்றி கடந்த 10ம் தேதி உத்தரவிட்டார் கவர்னர் வித்யாசாகர்
இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக விவசாயச் சங்கங்களுடன் கலந்துரையாடலை நடத்திய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 14-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து அந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அறிக்கையை அளித்தார்.காவிரி விவகாரம் தொடர்பாக
அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் அதில் இடம் பெற்றிருந்த நிலையில் இன்று மீண்டும் தலைமைச் செயலகம் சென்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் நிதியமைச்சர் ஓ.பன்னீசெல்வத்தைச் சந்திக்கச் சென்றார். ஆனால் அவர் அலுவலகத்தில் இல்லாத காரணத்தால் கடந்த 25-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை அவரது அவலுவலகத்திலும், அதன் இன்னொரு நகலை தலைமைச் செயலாளரிடம் வழங்கி விட்டு வந்தார்.அது போல பேரவைத் தலைவர்களுக்கும் ஒரு கடிதத்தைக் கொடுக்க ஸ்டாலின் செல்ல அவரும் இல்லாத நிலையில் சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதத்தை வழங்கிவிட்டு வந்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் " தமிழக வரலாற்றில் இது வரை இல்லாத அளவுக்கு சட்டப்பேரவையில்அரசியல் சாசனத்தின் அங்கீகாரத்தை பெற்றிருக்கும் வகையில் பல குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது மரபு. உதாரணமாகமதிப்பீட்டுக் குழு , பொது கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு, பேரவை உரிமைக் குழு , அலுவல் ஆய்வுக்குழுசட்ட விதிகள் ஆய்வுக்குழு , அரசு உறுதிமொழிக் குழு , பேரவைக் குழு , பேரவை விதிகள் குழு மனுக்கள் குழு, பேரவை நூலகக் குழுஎன 12 பன்னிரண்டு குழுக்கள் ஒவ்வொரு ஆண்டும் அமைக்க வேண்டும் என்பது சட்டம். அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த ஐந்துமாதங்களில் அக்குழுக்களை அமைப்பதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்பட வில்லை. அது மட்டுமல்லாது , கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க் கட்சித் தலைவர் என்கிற முறையில் நானும் , துணைத் தலைவர் துறை முருகன் அவர்களும் அவையில் இந்த பிரச்சனைகுறித்து கேட்டபோது,இக்குழுக்களை விரைவில் அமைப்பதாக சபாநாயகர் உறுதி அளித்திருந்தார்.ஆனால் இன்று வரை அமைக்கப்படவில்லை. சட்டப்பேரவை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டுள்ள உறுதி மொழியாகிய இந்த குழு அமைக்கும் பணியை சபாநாயகருக்குநினைவூட்டும் வகையில் இன்று ஒரு கடிதம் வழங்கியுள்ளோம்.மேலும் இது குறித்து ஆளுனரிடமும் நாங்கள் எடுத்த சொல்ல இருக்கிறோம்.இதற்கு மேலும் பேரவைக் குழு அமைக்கப்பட வில்லை என்றால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படும் "என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: