வெள்ளி, 28 அக்டோபர், 2016

வீரமணி: தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் கிடையாது .. காவிரி கிடையாது .. தமிழக எம்பிக்களோ ஆழ்ந்த உறக்கத்தில்


எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமையவிருந்தநிலையில், திடீரென அந்த முடிவை மத்திய அரசு மாற்றிக்கொண்டதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை நிறுவ ஒப்புக்கொண்டு, ஆய்வுகளும் நடத்தப்பட்டு, அதற்கான நிலம் உள்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க தமிழ்நாடு அரசு இசைவளித்தநிலையில், இப்போது அந்த முடிவை மத்திய பி.ஜே.பி. அரசு மாற்றிக் கொண்டுள்ளது என்ற தகவல் கண்டிக்கத்தக்கது என்றும், தமிழக எம்.பி.,க்கள் பிரதமரைச் சந்தித்து மத்திய அரசின் முடிவைத் தடுக்கவேண்டும் என்றும், அதற்காக திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக - ஆர்.எஸ்.எஸ். அரசு, தமிழ்நாட்டை வஞ்சித்து வருவது முற்றுப்பெறாத ஒரு தொடர்கதையாக நாளும் நடந்து வருகிறது.
காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று - நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசின் கெசட்டில் 2013இல் பதிவு செய்யப்பட்டது. (அதுவும்கூட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - ஆணைக்குப் பிறகுதான் என்பது கோடிட்டுக் காட்டப்படவேண்டிய உண்மையாகும்).பிரதமர் மோடி பதவிக்கு வந்தவுடன், மத்திய பட்ஜெட்டிலே நிதியமைச்சர் அருண்ஜெட்லி, அதற்குமுன் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர், தமிழ்நாட்டில் ஓர் நகரத்தில் உயர்தரமான All India Institute of Medical Service (AIIMS) என்ற ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்து, மாநில அரசுடன், நில ஒதுக்கீடு முதலியவற்றைப் பற்றிய கருத்துப் பரிமாற்றம் - கடிதப் போக்குவரத்துகளும் நடைபெற்றன. தமிழக சட்டமன்றத்திலும் முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் மத்திய அரசு அமைக்கவிருக்கும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை - புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை போன்று அமையும் என்றெல்லாம் கூறினார். தமிழ்நாடு அரசு, மத்திய அரசு கேட்டதற்கு மறுமொழியாக, எட்டு நகரங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது. அதோடு அத்தகைய ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைவதற்குத் தேவையான உள்கட்டமைப்புகளையும் மாநில அரசு செய்துதரும் என்றும் உத்தரவாதம் கூறப்பட்டது. மேலும் அத்தகைய சிறப்பு மருத்துவமனை அமைவதற்குத் தேவையான 200 ஏக்கர் நிலம், உயர்தரமான சாலை வசதிகள், ரயில் நிலைய வசதிகள் போன்ற அத்துணை கட்டமைப்புகளையும்கூட செய்துதர தயார் என்றும் கூறப்பட்டது. மத்தியக் குழுவினர் வருகைதந்து பல நாள்கள் ஆராய்ந்தநிலையில் இறுதிக்கட்டத்தில், மதுரை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையையும் இந்தக் கட்டமைப்புடன் உள்ள ஏற்ற இடங்கள் என்பதாகத் தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசும் பெருந்துறையில் தேவைக்கு மேலேயே - 350 ஏக்கர் நிலம் அளிக்கத் தயாராகி, முன்வந்தது.
தமிழ்நாட்டு மக்களும் நம்பிக்கையுடன் இருந்தார்கள். இந்நிலையில், பெரும் அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருக்காமல் பொய்த்துவிட வேண்டும் என்று நாம் விரும்பினாலும், இது உண்மையாகிவிடும் வாய்ப்பும் 50 விழுக்காடு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள எந்த நகரமும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய தகுதி உடையதாக இல்லை என்று கூறியுள்ளனராம்!எப்படியாவது இந்த ‘எய்ம்ஸ்’ சிறப்பு மருத்துவமனையை கர்நாடகத்துக்கோ, ஆந்திராவுக்கோ கொண்டுசெல்ல ஏற்பாடுகள் மும்முரமாக, முழுவீச்சில் நடைபெறுகின்றன என்பது மற்றொரு அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. கிண்டியில் உள்ள ‘சிப்பெட்’ தலைமையகத்தை டில்லிக்குக் கொண்டுபோக முனைந்ததை எதிர்த்துக் கிளம்பிய புயல் காரணமாகவே, அதற்கு மூலகாரணமான கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் அய்யர் அவர்கள் ஒப்புக்கு அதை மறுத்துள்ளார். இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளியெறிய அனைத்துக் கட்சி, அமைப்புகளும் ஆர்த்தெழ வேண்டும். தமிழ்நாட்டு எம்.பி.,க்கள் கட்சிக் கண்ணோட்டமின்றி உடனடியாக பிரதமரைச் சந்தித்து, ஏற்கனவே கூறிய உறுதிமொழியை காற்றில் பறக்கவிடாதீர்கள்; தமிழ்நாட்டை வஞ்சிக்காதீர்கள் என்று, ஒருமித்த குரலில் கோரிக்கை வைக்கவேண்டும். தமிழனின் நெற்றிதான் எவ்வளவு அகலம் பார்த்தீர்களா? பட்டை பட்டையாக, நாமத்துக்குமேல் நாமம் போட்டுக்கொண்டே போகிறது டில்லி. குட்டக்குட்ட குனிபவர்களா தமிழர்கள்? எனவே, டில்லியின் இந்த ஓரவஞ்சகத்தை எதிர்த்து விரைவில் திராவிடர் கழகம், ஒத்த கருத்துள்ள அனைவரையும் அழைத்து, கலந்துரையாடி, அறப்போர் கிளர்ச்சித் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தத் தயங்காது என்பதை மத்திய அரசுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். உரிமைக்குக் குரல் கொடுப்பது அவசரம் - அவசியம்.” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் வீரமணி.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: