செவ்வாய், 25 அக்டோபர், 2016

நாங்கள் பங்கேற்றால் கூட்டணி உடையும் என்றார்கள்:ரவிக்குமார்!.. காவிரியை விட கூட்டணி முக்கியம்?

‘திமுக கூட்டியிருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்க இயலாது’ என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் விளக்கமும் கொடுத்திருக்கிறார். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், தமிழக அரசு இதை ஏற்கவில்லை. இதனால் பிரதான எதிர்க்கட்சியான திமுக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. ‘இந்தக் கூட்டம் திமுக-வின் தோழமைக் கட்சிகளின் கூட்டம்; நரித்தனமாக செயல்படுகிறது. ஆகையால் மக்கள் நலக் கூட்டணி இந்த கூட்டத்தைப் புறக்கணிக்கிறது’ என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்திருந்தார்.

இதனிடையே சென்னையில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக-வின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் நிலைப்பாடு என மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தோம். ஆகையால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தது என்றும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களுடன் மீண்டும் ஆலோசிப்போம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாட்டை கண்டுகொள்ளாமல் வைகோ தன்னிச்சையாக ‘புறக்கணிக்கும்’ என அறிவித்துவிட்டார் என்று இத்தீர்மானம் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியது. இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து திருமாவளவன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்றார். மதிமுக பொதுச்செயலர் வைகோ-வையும் நேற்று இரவு அவரது வீட்டில் திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘திமுக-வின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று முடிவு அறிவிக்கப்படும்’ என்று கூறியிருந்தார். இதனிடையே இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் அனுப்பியுள்ள கடிதத்தில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார். “திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உள்ள பெரும்பாலோரின் கருத்து. அப்படி கலந்து கொள்ளாதபட்சத்தில் தமிழக மக்களின் நலனில் மக்கள் நலக் கூட்டணிக்கு அக்கறையில்லை என்ற சொல்லுக்கும் ஆளாக நேரிட வாய்ப்புள்ளது என்று கூறினோம். ஆகவே, மக்கள் நலக் கூட்டணியின் விவசாய பிரதிநிதிகளாவது அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கருத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை. விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டால் மக்கள் நலக் கூட்டணி உடைந்துவிடும் என்று தலைவர்கள் கருதினார்கள். எங்களால் மக்கள் நலக் கூட்டணி உடைந்துவிட்டது என்ற பழிச்சொல் வரக்கூடாது என்ற காரணத்துக்காக நாங்கள் திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மேலும் மூன்று தொகுதிகளில் தேர்தல் நடப்பதால் அணி மாறி விட்டோம் என்ற கருத்து உருவாகும் என்று மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கருதினார்கள். ஆகவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டியிருக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பில்லா நிலை ஏற்பட்டுள்ளது” என்று விளக்கம் கூறியிருக்கிறார் ரவிக்குமார். இந்நிலையில், திருமாவளவன் ஸ்டாலினுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில்,வணக்கம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மைய அரசை வலியுறுத்தும் வகையில் இன்று தங்களின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகளுக்கு அழைப்பு விடுத்தமைக்காக தங்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
காவிரிநீர்ச் சிக்கல் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென திமுக உள்ளிட்ட அனைத்து எதிர் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், தமிழக அரசு இக்கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில், தங்களின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறோம்.
காவிரிநீர்ச் சிக்கல் என்பது தமிழகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு நெருக்கடியான நிலைக்குத் தள்ள பட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதனை மைய அரசு வெளிப்படையாக புறக்கணித்துள்ளது. தமிழக மக்களுக்கு எதிரான மையஅரசின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து தமிழக மக்கள் யாவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய வரலாற்று தேவை தற்போது எழுந்துள்ளது.
இந்நிலையில், இன்று தங்களின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் விருப்பமாகும். கடந்த 13.10.2016 அன்று தங்களின் தலைமையில் நடந்த விவசாய சங்கத் தலைவர்களின் கூட்டத்தில் மக்கள் நல கூட்டணியைச் சார்ந்த சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் விவசாய சங்கத் தலைவர்களும் கலந்து கொண்டனர். அதனடிப்படையில், இன்று நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்திலும் மக்கள் நல கூட்டணி கட்சிகள் பங்கேற்கலாம் என்பதை எமது கூட்டணி கட்சித் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் முன்வைத்தோம்.
காவிரிநீர்ச் சிக்கலைத் தேர்தல் அரசியலோடு முடிச்சு போடாமல் அணுகவேண்டுமென்பதே விடுதலைச் சிறுத்தைகளின் உறுதியான நிலைப்பாடாகும். அந்த அடிப்படையில்தான் மக்கள் நல கூட்டணியின் தோழமை கட்சிகளையும் இக்கூட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம் .
24.10.2016 அன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் உயர்நிலைக்குழுவில் மக்கள் நல கூட்டணியின் நலன்களையும் கருத்தில் கொண்டு திமுக தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில்தான் மக்கள் நல கூட்டணியின் தோழமை கட்சித் தலைவர்களுடன் மீண்டும் கலந்தாய்வு செய்தோம்.
அப்போது, தஞ்சாவூர்,அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் மக்கள் நல கூட்டணி பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்துள்ள சூழலில் , திமுக ஒருங்கிணைக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது கட்சி தொண்டர்களியிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்குமென தங்களின் தயக்கத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் மக்கள் நல கூட்டணியின் ஒரு அங்கமாக இயங்கிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மக்கள் நல கூட்டணியின் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் நிலையில் உள்ளது.
அதாவது , மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும் இச்சூழலில் தங்களின் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலாதநிலையில் உள்ளோம் என்பதை தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: