திங்கள், 24 அக்டோபர், 2016

வைகோ தன்னிச்சையாக அறிவித்ததால் ம.ந.கூட்டணி டமால் !

சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் 3 தொகுதி தேர்தல், திமுக அனைத்துக்
கட்சிக் கூட்டம் ஆகியவை தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உண்டு என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானம் இன்று அம்பலப்படுத்தியுள்ளது.
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்தார். அதேபோல் திமுகவின் நாளைய அனைத்து கட்சிக் கூட்டத்தையும் மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கும் என அறிவித்திருந்தார். ஆனால் உண்மையில் இந்த 2 விவகாரங்களிலும் ஒருமித்த முடிவெடுக்கப்படும் முன்னரே வைகோ தன்னிச்சையாகவே அறிவித்திருக்கிறார் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. சென்னையில் இன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவின் கூட்டத்தில் ஒற்றை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது." 

டெல்லியில் ஜனாதிபதியை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் சந்தித்த போது 3 தொகுதிகளின் தேர்தல், திமுக அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பது மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்பியது. இதனால் இது குறித்து அக்கட்சி பொறுப்பாளர்களிடம் ஆலோசித்துவிட்டு சொல்வதாக கூறியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக அனைத்து கட்சி கூட்டம்

ஆனால் இதனிடையே வைகோ, 3 தொகுதிகளிலும் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடாது என அறிவித்துவிட்டார். அதேபோல திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வெண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு என்கிறது அந்த தீர்மானம். இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்து பேச அனுமதி அளிக்கப்பட்டது எனவும் அத்தீர்மானம் கூறுகிறது.
திருமா அதிருப்தி

திருமா அதிருப்தி

விடுதலைச் சிறுத்தைகள் ஆலோசனை நடத்துவதற்கு முன்னரே திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி பங்கேற்காது என அறிவித்துவிட்டார் வைகோ. தற்போது வைகோ அறிவித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்காக மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் திருமாவளவன்.

வைகோ தன்னிச்சையாக

ஆக மக்கள் நலக் கூட்டணியில் பல்வேறு பிரச்சனைகளில் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது... ஆனாலும் மதிமுக பொதுச்செயலர் வைகோ தொடர்ந்து தன்னிச்சையாக தம்முடைய நிலைப்பாட்டையே மக்கள் நலக் கூட்டணியின் நிலையாக அறிவித்துவருகிறார் என்பதை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது விடுதலை சிறுத்தைகளின் தீர்மானம்.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை: