செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

அருணாச்சல் முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தற்கொலை?

Former Arunachal Pradesh chief minister and Congress rebel Kalikho Pul was found dead at his residence on Tuesday. அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏவுமான கலிக்கோ புல் (47), செவ்வாய்க்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட போதிலும், இது தற்கொலைதானா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு அந்த மாநில முதல்வர் பெமா காண்டா உத்தரவிட்டுள்ளார். மேலும், கலிக்கோ புல்லின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அருணாசலப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. கலிக்கோ புல், தனது மூன்று மனைவிகள் மற்றும் 4 மகன்களுடன் இடா நகரில் அமைந்துள்ள முதல்வரின் அரசு இல்லத்தில் வசித்து வந்தார்.
மாநிலத்தின் முதல்வராக பெமா காண்டு அண்மையில் பொறுப்பேற்ற பிறகும் அந்த அரசு இல்லத்தில் தொடர்ந்து கலிக்கோ புல் வசிந்து வந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை, அவரது மூன்று மனைவியர்களில் ஒருவர் படுக்கை அறைக்குச் சென்று பார்த்தபோது, மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் கலிக்கோ புல் இறந்து கிடந்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸôர், கலிக்கோ புல்லின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக, இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அருணாசலப் பிரதேச எம்எல்ஏக்களும், பொதுமக்களும் முதல்வர் இல்லத்தின் முன்பாக திரண்டனர்.
மனஅழுத்தம் காரணமா?: கலிக்கோ புல்லின் இறப்புக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. அதேவேளையில் கடந்த 7 நாள்களாக வெளியே எங்கும் செல்லாமலும், எவரையும் சந்திக்காமலும் வீட்டுக்குள்ளேயே அவர் முடங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. மன அழுத்தத்தினால் அவர் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருணாசலப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் நபம் துகிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய கலிக்கோ புல் தலைமையிலான காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள், பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தனர். சுமார் 6 மாத காலத்துக்கு மாநிலத்தின் முதல்வராக கலிக்கோ புல் இருந்தார்.
அந்த அரசை உச்ச நீதிமன்றம் அண்மையில் அகற்றியதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை கலிக்கோ புல் ராஜிநாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக பெமா காண்டு பொறுப்பேற்ற பிறகு அருணாசலப் பிரதேசத்தின் அரசியல் சூழல் மாறியது.
இந்தச் சூழ்நிலையில் கலிக்கோ புல், மர்மமான முறையில் இறந்திருப்பது புதிய சர்ச்சைகளையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கலிக்கோ புல்லின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மாநிலத் துணை முதல்வர் இல்லம் மற்றும் அரசுக் கட்டடங்களுக்கு அவர்கள் தீ வைத்தனர். இதனால் அப்பகுதிகளில் பதற்றம் நிலவியது.
பிரதமர் இரங்கல்: கலிக்கோ புல்லின் திடீர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சுட்டுரையில் (டுவிட்டர்) இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
கலிக்கோ புல்லின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அருணாசலப் பிரதேசத்துக்காக அவர் ஆற்றிய தொண்டு என்றென்றைக்கும் நினைவுகூரப்படும் என்று அதில் மோடி தெரிவித்துள்ளார். தினமணி.காம்

கருத்துகள் இல்லை: