வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

காஷ்மீர்: 350 பேருக்கு பார்வை பறிபோன பரிதாபம்!.. பெல்லட் குண்டுகளை பாவித்ததால் ராணுவம்...


காஷ்மீர் கலவரத்தில் ராணுவத்தினர் ‘பெல்லட்’ குண்டுகளை பயன்படுத்தியதால் சுமார் 350 பேருக்கு பார்வை பறிபோயிருக்கிறது. மூன்று பேரின் உயிர் பறி போயிருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மருத்துவர்கள் ஒரு கண்ணை கட்டிக் கொண்டு போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி புர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து மக்கள் ராணுவம் மற்றும் காவல்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை அமைதியான முறையில் எதிர்கொண்டு தீர்வு காண்பதற்கு பதிலாக ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை பயன்படுத்தி கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படையும் தங்களது சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி மிக கொடூரமாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற மோதலை தொடர்ந்து காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இதில் எண்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. 350-க்கும் மேற்பட்டோர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ பார்வையை பறிகொடுத்திருக்கிறார்கள். 1,400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனா்.
காயமடைந்தோருக்கு சிறப்பு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி முகமது சையீது தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் 330 பேர் புல்வாமா மாவட்ட மருத்துவமனையிலும் குல்காமில் 200 பேர், அனந்த்நாக்கில் 115 பேர், பாரமுல்லாவில் 100 பேர், பந்திபோராவில் 120 பேர், ஸ்ரீநகரில் 49 பேர், ஷோபியானில் 40 பேர், புட்காம் மாவட்ட மருத்துவமனையில் 30 பேர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கெய்சர் முகமது கூறுகையில், துப்பாக்கி குண்டு காயங்களுடன் 340 பேர் மருத்துவக்கல்லூரி மற்றும் அதன் துணை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். ராணுவத்தினர் கலவரத்தை ஒடுக்க உயிரைப் பறிக்கும் துப்பாக்கிப் போக, உயிரைப் பறிக்காத சிறு குண்டுகளை உமிழும் ‘ஏர்-கன்’ துப்பாக்கிகளையும் பயன்படுத்துகின்றனர். இவை உடலில் காயம் ஏற்படுத்துவதோடு, கண்ணில்பட்டால் பார்வை பறிபோய் விடுவதுதான் கொடுமை. காஷ்மீர் மருத்துவர்கள் கூற்றுப்படி இதற்கு முன்னர் வட்ட வடிவமாக இருந்த இந்த குண்டுகள் தற்போது கூர்மையான அதிகம் காயம் ஏற்படுத்தும் வடிவில் இருக்கின்றன. இதனால் மக்கள் அதிக ஆழத்துடன் காயமடைகின்றனர். 2010ஆம் ஆண்டில் இதே போன்றதொரு கல்லெறி போராட்டம் நடைபெற்றபோது நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காஷ்மீரில் கொல்லப்பட்டனர். அப்போதுதான் இந்த ‘ஏர்-கன்’ சிறு குண்டு துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த துப்பாக்கியினுள் இருக்கும் கேட்ரேஜ் எனப்படும் தோட்டாப்பையில் சில நூறு குண்டுகள் இருக்கும். ஒருமுறை சுட்டால் எதிர்முனையில் ஒரே தடவையில் நூற்றுக்கணக்கான குண்டுகளை உமிழும். மக்களை உடனே கொல்வதற்குப் பதில் இந்த குண்டுகள் சித்ரவதை செய்து கொல்கிறது அல்லது வதைக்கிறது. தற்போது, இந்த குண்டினால் பாதிப்படைந்தோரின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 117 பேர்களில் 106 பேருக்கு அறுவை சிகிச்சை நடந்து, அதில் ஐவருக்கு ஒரு கண் முற்றிலும் பறி போயிருக்கிறது. மேலும் கண்களில் பாய்ந்திருக்கும் குண்டு துகளையும் பல நேரங்களில் எடுக்க முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து சென்ற கண் மருத்துவர்களோ இந்த துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
14 வயது இன்ஷா மாலிக், ஸ்ரீநகர் மஹாராஜா ஹரிசிங் மருத்துவமனை ஐசியூ-வில் நினைவின்றி கிடக்கிறார். அவரது இரு கண்களையும் காஷ்மீர் போலீஸார் இந்த ஏர்-கன் சிறு குண்டுகளால் துளைத்தெடுத்துவிட்டனர். இனி என்ன செய்தாலும் கண்பார்வையை மீட்கவே முடியாது. அந்தப் பெண் குழந்தையின் வலது கண் சிதைக்கப்பட்டுள்ளது; இடது கண்ணோ கிழிக்கப்பட்டுள்ளது. இனி அவள் வாழ்நாள் முழுவதும் பார்வையில்லாமல் கழிக்க வேண்டும். ஜூலை 8ஆம் தேதி புர்ஹான் வானி படுகொலைக்குப் பின்னர் கலவரத்தில் போலீஸார் மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் இவளும் ஒருத்தி.
சோஃபியான் மாவட்டத்தின் சீடோ கிராமத்தில் ஒன்பதாம் வகுப்பில் முதல் மாணவியான இக்குழந்தை செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்குள் அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அப்போது போலீஸ் கண்மூடித்தனமாக பெல்லட் குண்டால் சுட்டதில் சமையலறைக்குள் இருந்த அச்சிறுமியின் கண்பார்வை பறிக்கப்பட்டுள்ளது.
2014இல் எதிர்க்கட்சியாக இருந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி இந்த துப்பாக்கிகளை பயன்படுத்துவதைக் கடுமையாக கண்டித்தார். காஷ்மீர் இளைஞர்களின் பார்வையை பறிக்கும் சதி என்றெல்லாம் கூறினார். தற்போது அவரும் முதலமைச்சராக இருந்து இதை வேடிக்கை பார்ப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. போராட்டக்காரர்களை கொல்லாத துப்பாக்கி என்ற பெயரில் இப்படியாக கண்கொள்ளா காஷ்மீரின் கண்கள் பிடுங்கப்படுகின்றன. இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்தான் கொதித்தெழுந்து, தற்போது கண்களைக் கட்டிக் கொண்டு நூதனப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.

“எங்கள் மக்களின் பார்வை பறிபோக பெல்லட் குண்டுகள்தான் காரணம். இந்த பெல்லட் குண்டுகளை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்” என்றார்கள். ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துவது தொடர்பாக அரசை இடித்துரைத்துள்ளது. இந்த பெல்லட் குண்டுகளை பயன்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு அரசை உயர்நீதிமன்றம் பணித்துள்ளது. இனியாவது, இந்த பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுமா?  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: