செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

ரங்கராஜ் பாண்டேவுக்கு எதிராக வழக்காடிய வழக்கறிஞர் திராவிடர் கழகத்திலிருந்து நீக்கம்?

pandeகடந்த வருடம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியை நேர்காணல் செய்தார் தந்தி டிவியின் ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே. அப்போது தந்தை பெரியார், பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி என்றார்  என சொல்லி ஒரு கேள்வியை முன்வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்தும் இதுபோன்று பெரியார் கூறவேயில்லை என்றும் இதற்கான ஆதாரம் இருந்தால் பாண்டேவிடம் இருந்தால் தரவேண்டும்; அப்படியில்லை என்றால் இப்படியான மேற்கோளை ஊடகத்தில் சொன்னதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று திருப்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குமரவேல் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதிலிருந்து பாண்டே ஆறு முறை தடை ஆணை பெற்றார்.

சென்ற மாதம் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டதால் நேரில் ஆஜரானார் பாண்டே. அது இங்கே பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் மனுதாரர் குமரவேல் தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் பாண்டியனை இந்த வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என திராவிடர் கழகம் வலியுறுத்தியதாகவும் அவர் வழக்கை திரும்பப் பெறாததால் அமைப்பை விட்டு நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விடுதலை நாளிதழில் கழகக் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொண்டதால் சட்டத்துறை துணை செயலாளர் ஆ. பாண்டியன் கழகத்தைவிட்டு  நீக்கம் செய்வதாகவும் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆ. பாண்டியனை டைம்ஸ் தமிழ் தொடர்பு கொண்டு பேசியது:
“நான் 40 வருடங்களாக கழகத்தில் இருக்கிறேன். வழக்கறிஞராகத்தான் இந்த வழக்கில் ஆஜரானேன். என்னிடம் திரும்பப் பெற சொன்னார், நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். என்னிடம் மனுதாரர் இந்த வழக்கை ஒப்படைத்திருக்கிறார்.  வழக்கறிஞராக வழக்கை திரும்பப் பெறுவது அறமாகாது. ஒரு அமைப்பில் இருக்கும்போது அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் அவர்கள் சொல்வதைக் கேட்கவில்லையென்றால் நீக்கத்தான் செய்வார். என்னுடைய நிலையும் தவறில்லை. அவர்களுடைய முடிவும் தவறில்லை. அவர்களுடைய நடவடிக்கையை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்கிறார்.
இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராகி நடத்த உள்ளதாகவும் பாண்டியன் தெரிவிக்கிறார். thetimestamil.com

கருத்துகள் இல்லை: