வெள்ளி, 15 ஜூன், 2012

ஒரு ஆஸ்பத்திரியில் ஒரு அப்பாவி! – சோ

பல வாசகர்கள் ‘சோவின் உடலுக்கு என்ன? குணமாகி விட்டதா? என்ன நடந்தது?’ என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘சோ’ ஆஸ்பத்திரியில் சுமார் 12 நாட்கள் இருந்து விட்டு, வந்தாகி விட்டது. தன்னுடைய அனுபவத்தை ‘சோ’ கூறுகிற கட்டுரை இது.

எம்.ஜி.ஆர். செத்துப் பிழைத்தவர். நான் உபதேச வெள்ளத்தில் மூழ்கி எழுந்தவன்.

ஆஸ்பத்திரியில் இருந்தாலும் இருந்தேன். ஓர் உபதேச மழையே என் மீது பொழிந்து விட்டது. எனக்கு உபதேசம் செய்யாதவர்களே யாரும் கிடையாது. எனக்கு வந்த நோய் ஒருபுறம் இருக்கட்டும். இந்த உபதேசப் பிரளயத்தைப் பார்ப்போம்.
என்னைப் பார்க்க வந்து சுமார் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, இறுதியில் ‘இதோ பார்! யார் கிட்டேயும் அநாவசியமா பேசிக்கிட்டிருக்க வேண்டாம். யார் வந்தாலும் அஞ்சு நிமிஷத்துலே திருப்பி அனுப்பிடு. பேசாம படுத்துக்கிட்டிரு. அவங்களா போயிடுவாங்க. இல்லேன்னா அவனவன் அரை மணி நேரம் உட்கார்ந்துடுவான். அதுக்கு இடம் கொடுக்காதே. அது உனக்கு நல்லதில்லை. என்ன! போயிட்டு வரட்டுமா?’ என்று சொல்லி போனவர்கள் பலர்.


‘என்ன! போய்ட்டு வரட்டுமா?’ என்று எழுந்து நின்று, ஏதோ ஒரு யோசனை வந்தவர்களாக, சற்று நின்று ‘பேஷண்டை சும்மா தொந்திரவு பண்ணக் கூடாது. அந்த இங்கிதம் நிறைய பேருக்குத் தெரியறதில்லே!’ என்று பிரகடனம் செய்து விட்டு, மீண்டும் உட்கார்ந்து விட்டவர்கள் சிலர். இவர்கள் இருந்த அரைமணி நேரத்தில் பலவித உபதேசங்கள்.

‘இதோ பாரு! இந்தக் காலத்திலே டாக்டர்களை எல்லாம் நம்ப முடியாது. எல்லோரும் பணம் பண்றவங்க. அதுக்காக இல்லாத வியாதிக்கெல்லாம் மருந்து கொடுத்துக்கிட்டு இருப்பாங்க. நீதான் ஜாக்கிரதையா இருக்கணும்’.

இவர் போய், அடுத்து வருகிறவரின் உபதேசம், ‘டாக்டர் சொல்றபடி அப்படியே கேள். நமக்குத்தான் தெரியும்னு நினைச்சுக்கிட்டு எதையும் செய்யாதே. கண்டவன் சொல்றதை நீ கேக்காதே. டாக்டர் சொல்றதை அப்படியே கேளு.’

இன்னொரு ரகத்தினரின் உபதேசம் இப்படி: ‘நம்ம உடம்பு பத்தி நமக்குத் தெரியாதது, டாக்டருக்குத் தெரியுமா? அவங்க தெரிஞ்ச மாதிரி பேசறாங்கன்றதுக்காக அதை அப்படியே ஒத்துக்கக் கூடாது. நீ இன்டர்நெட் போட்டுப் பாரு. அவங்க சொல்ற டேப்லட், கேப்ஸ்யூல்... இதுக்கெல்லாம் என்ன எஃபெக்டுன்னு பாரு. அதோட ஸைடு எஃபெக்ட் பாத்தியானா உனக்கே பயம் வந்துரும். இந்த மாத்திரைய சாப்பிடறதாலே நல்லதா, இல்லே பெரிய ஆபத்தா அப்படின்ற கேள்வி வரும். அதனாலே ஒரு டாக்டர் சொல்றதோடு விட்டுடாதே. அவர் சொல்றதை நீ செக் பண்ணு. செகண்ட் ஒபினியன் கேளு. சில சமயம் தேர்ட் ஒபினியன் கூட தேவைப்படும். என்னா? ஜாக்கிரதை. என்ன? நான் போய் என் டாக்டரைப் பாக்கணும். இரண்டு வேளையா ஒரே வயத்து வலி. என்னன்னே புரியலை. அவரு மருந்து கொடுத்தார்னா டக்னு குணமாகும். போய்ட்டு வரட்டுமா, போறேன்’.

உபதேச வகைகள் இத்துடன் முடியவில்லை. இது வேறு வகை: ‘இந்த டாக்டர்ஸெல்லாம் ஆன்டிபயாடிக் கொடுப்பான். அது பெரிய விஷம். உடம்பை உருக்கிடும். இந்தக் கிருமிகள் எல்லாம் இருக்கே.... ரொம்ப இன்டெலிஜன்ட். அது இந்த ஆன்டிபயாடிக்குக்குப் பழகிடும். அப்புறம் அதுக்கு ஒரு இன்னொரு ஆன்டிபயாடிக் கொடுப்பான். அந்தக் கிருமி எல்லாம் அதுக்கு பழகிடும். அப்புறம் வேறொரு ஆன்டிபயாடிக் கொடுப்பான். அப்புறம் அதுக்கும் பழகிடும். இப்படியே இது போய்க்கிட்டே இருக்கும். அதனாலே இந்த டாக்டர்ஸே வேண்டாம். நீ பேசாம ஆயுர்வேதிக் ட்ரீட்மென்ட் எடுத்துக்கோ. ஒரு ஆபத்தும் கிடையாது. என்ன...! ஸ்லோ ப்ராஸஸ்! அவ்வளவுதான். பட், அதைப் பத்தி பரவாயில்லை. ஆறு மாசம், ஒரு வருஷம் ட்ரை பண்ணு. நல்ல எஃபெக்ட் இருக்கும். சூரணம், லேகியம், பஸ்பம் எல்லாம் கொடுப்பான். அதைச் சாப்பிடு. நல்ல பத்தியம் இரு. உனக்கு நிச்சயம் குணமாகும். வீணா இந்த மாடர்ன் மெடிஸன் வேண்டவே வேண்டாம்’ என்று ஒருவர்.

அடுத்த விஸிட்டர் : ‘இதோ பாரு! எவனாவது சொல்றான்னு கேட்டு, ஆயுர்வேதிக், சித்தா மெடிஸன் இதுக்கெல்லாம் போயிடாதே. வீண் வம்பு! சும்மாவானா எதையாவது கொடுத்துட்டிருப்பாங்க. ஒண்ணும் எஃபெக்ட்டே இருக்காது. கேட்டா இதெல்லாம் ஸ்லோ ஆக்டிங். நாங்க நோயை குணப்படுத்துறது மாத்திரம் அல்ல. இந்த நோயோட மூலத்தையே குணப்படுத்துறோம்னு சொல்வான். என்ன மூலத்தை குணப்படுத்துறது? இவங்களாலே வெறும் மூலத்த கூட குணப்படுத்த முடியாது. அதனால நீ அந்தப் பக்கமே போகாதே. நீ மாடர்ன் மெடிஸன்ஸையே நம்பு. அதுக்கு கைமேல பலன். ஒரு மாத்திரை போட்டியானா தலைவலி நிக்கறது, இன்னொரு மாத்திரை போட்டியானா வயித்து வலி நிக்கறது. அந்த அளவு ரிசர்ச் பண்ணியிருக்காங்க. அதனாலே நீ மாடர்ன் மெடிஸனை நம்பு. ஆயுர்வேதிக் எல்லாம் போய் மாட்டிக்காதே.’

அடுத்த உபதேசகர் இயற்கையின் நண்பர் : ‘பாரு! நான் சொன்னா நீ ஏத்துக்குவியோ இல்லியோ எனக்குத் தெரியாது. இந்த மாதிரி கபம், ஜுரம், உடம்பு வலி, குளிர் இதுக்கெல்லாம் பெஸ்ட் மெடிஸன் என்ன தெரியுமா? முடக்காத்தான் கீரையை எடுத்து, அதை நல்லா கிள்ளி, கடக்காத்தான் கீரையை போட்டு, அதையும் கலந்து, ஊதுவளை பிழிஞ்சி, வௌக்கத்தான் கீரையை கலந்து, கானாடுகாத்தான் காயை எடுத்து, அதை நல்ல சூரணமா அரைச்சு, இதை கஷாயமாக்கணும். ‘அதுக்கப்புறம்தான் விஷயமே இருக்குது. அதை அப்படியே வெச்சிரு. ஊறட்டும். இன்னொரு டம்ளர்லே என்ன பண்றே – ஆட்டுப் பாலை எடுத்துக்கோ! ஆட்டுப் பால்ல நீ நல்லா கோமியத்தைக் கலந்துக்கோ. அதுலே களாக்கா, எருக்கம் பூ இல்லே – எருக்கம் இலை – எருக்கம் பூ விஷம். அதைப் போட்டுக்காதே – எருக்கம் இலையை போட்டுரு. முன்னே வெச்ச பாரு கஷாயம்! அதை இதுலே போடு. அப்படிப் பண்ணியானா...’ என்னாகும் என்று அவர் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எனக்கே புரிந்துவிட்டது. அதோடு வியாதி தீர்ந்தது. நானும் தீர்ந்தேன் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்தவர், வருவார். ‘டேய்!’ சுற்றுமுற்றும் பார்த்தார். ரூமில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டார். என்ன இருந்தாலும் ரூமில் யாரும் இல்லை. அவர் பேசுவதை நாற்காலி, கட்டில், டேபிள் போன்றவை கேட்டுவிடக் கூடாது என்பதுபோல், குரலை தாழ்த்திக் கொண்டார். ‘எவனோ ஏவல் வெச்சுப்புட்டான். உனக்கு வேண்டாதவன் நிறையப் பேர் இருக்கான். அவன்ல ஒருத்தன் ஏவல் வெச்சுட்டான். நான் விசாரிச்சுட்டேன். உன் நட்சத்திரத்துக்கு ஏவல்தான். தீர்மானமா சொல்லிப்புட்டான். இதுக்கு நாம என்ன செய்யணும்னா, உளுந்தூர்பேட்டையிலே ஒரு சாமியார் இருக்கார். அவர் கிட்டே போனா, நெத்தியிலே ஒரு எலுமிச்சம் பழத்தை வெச்சு ஒரு அடி அடிப்பார். அதை நசுக்கி அந்தச் சாறை எடுத்து, அவர் குடிச்சுடுவார். நம்ம மேலே வெச்ச ஏவல் எல்லாம் அவர்கிட்டே போயிடும். அவர் தாங்கிப்பார். அப்பேர்ப்பட்ட சித்தர். நேத்து உளுந்தூர்பேட்டையிலே இருந்தார். இன்னைக்கு எங்கே இருக்கார்னு தெரியாது. அவரைக் கண்டுபிடிச்சிட்டோம்னா அவ்வளவுதான். சூன்யத்தை எடுத்துடுவாரு. நமக்கு ஜெயம்தான். ஆனா, அவரை கண்டுபிடிக்க முடியாது.’ அடுத்தவர் வருவார். இவர் ஒரு மாடர்ன் ஆசாமி. ‘நம்மூர் ஆஸ்பிடல்களே பிரயோஜனம் இல்லடா. நம்மூர் டாக்டர்ஸும் பிரயோஜனம் இல்லை. இதை நம்பி என்ன பண்றது? பெரிய மனுஷங்களுக்கு உடம்புக்கு வந்தா என்ன பண்றாங்க? சிங்கப்பூர் போறாங்க, அமெரிக்கா போறாங்க. ஏன்? அங்கெல்லாம் நல்லா க்யூர் கிடைக்குது. அதனாலே நீயும் செலவப் பாக்காம, சிங்கப்பூர், அமெரிக்கானு எங்காவது போய் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டு வா. அதான் பெஸ்ட்’.

‘செலவைப் பாக்காம...’ என்று அவர் சுலபமாகச் சொல்லி விட்டார். யார் செலவு? அது என் செலவு. அடுத்தவர், ‘இந்த ஏஜ்ல இப்படித்தான்டா வரும். நீ என்ன சின்னப் பையனா? அப்படித்தான் வரும். அதெல்லாம் சமாளிச்சுக்க வேண்டியதுதான். என்ன பண்றது? அவ்வளவுதான். என் சித்தப்பா ஒருத்தர் இருந்தார். அவருக்கு கிட்டத்தட்ட உன் வயசுதான். ஏதோ ஜுரம்ன்னாரு. அதுக்கெல்லாம் மருந்தெல்லாம் வாங்கி கொடுத்தோம். ரெண்டே நாள்! போய்ட்டார். ஸோ, இதுக்கெல்லாம் கவலைப்படாதே! என்ன இப்போ? வெறும் ஜுரம்தானே! மருந்து கொடுத்தா சரியாப் போயிடும். ரெண்டே நாள்!’ அடுத்தவர் என்னைப் பார்த்து திடுக்கிட்டு விட்டார். ‘டேய் என்னடா இது! இப்படி இளைச்சுப் போயிட்டே? மூஞ்சி வாடிப் போயிடுச்சு! உடம்பே எலும்பும் தோலுமா இருக்கு! என்னடா இது! என்ன ஆச்சு உனக்கு? பாத்தாலே பயமா இருக்கேடா! டேய்! என்ன பண்ண போறே நீ? சரி, சரி! பாத்துக்க ஒண்ணும் ஆகாது. ஒண்ணும் கவலைப்படாதே! ஜாலியா இரு! நேத்து இருந்தவன், இன்னிக்கு இல்லை! அதுக்காக பார்த்தா முடியுமா? தைரியமா இரு! கவலை கூடாது.’

அடுத்தவர் ‘இதோ பாரு! நிறைய ஃப்ரூட்ஸ் சாப்பிடு. தேன்ல பலாப்பழத்தை தோய்ச்சு சாப்பிட்டா, ரொம்ப ஹெல்த்தியா இருக்கும். ப்ரோட்டின் சாப்பிடு. நிறைய ப்ரோட்டின். அப்பப்ப அரைமணிக்கொரு தடவை பால்ல கலந்து புரோட்டின் பவுடர் சாப்பிடு. அதோட விட்டுடாதே. இளநீர் நிறையச் சாப்பிடு. ஒருநாளைக்கு ஏழு தடவை இளநீர் சாப்பிடு. வாட்டர் முக்கியம். ஒருநாளைக்கு எட்டு லிட்டர் குடிக்கணும்னு சொல்றாங்க. அது முடியலைன்னா எய்ட் லிட்டர்ஸாவது குடி. சாப்பிடு. அப்புறம் இந்த பாதாம் பருப்பு, வால்நட், பிஸ்தா இந்த மாதிரி நட்ஸ் எல்லாம் சாப்பிடு. மருந்தை விட இதெல்லாம்தான் குணம் தரும். ஏன்னா உடம்புலே ஸ்ட்ரென்த் வரும்.’

இவர் சொல்வதைக் கேட்டால், காலையிலிருந்து இரவு வரை சாப்பிடுவதற்குத்தான் நேரமிருக்குமே தவிர, வேறெதற்கும் நேரம் இருக்காது என்று எனக்குத் தோன்றியது. அடுத்தவர் பரோபகாரி. ‘மிளகு ரசத்திலே சீரகத்தைப் போட்டு, வெந்தயத்தைப் பொடி பண்ணி கலந்து, இஞ்சி கரைச்சு விட்டு, பெருங்காயத்தைப் போட்டு, புதினா இலையை நல்லா கசக்கிப் பிழிஞ்சி, அதையும் கலந்து, எலுமிச்சம் பழத்தை ஊத்தி.... கலந்த ரசம் இந்தா இதைச் சாப்பிடு. இதை முந்தா நேத்துக்கு முன் நாளே என் வொய்ஃப் என்கிட்டே கொடுத்தா. மறந்து போய் எங்கேயோ வெச்சுட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது. கண்டுபிடிச்சேன். அதான் இருக்கட்டுமேன்னு கொண்டு வந்தேன். சாப்பிடு. ஜம்முன்னு இருக்கும். போய்ட்டு வரட்டுமா? திரும்பி வரேன் நானு’

அடுத்தவர் ‘என்னடா, கலைஞர் எப்படிப் பேசியிருக்கார் பாத்தியா? என்ன அர்த்தத்திலே அவர் பேசறாருன்னு புரியலையே? சி.எம். செய்யுறதுல்லாம் சரின்னுதான் நினைக்கிறீயா? சென்ட்ரல்ல என்ன ஆகும்னு நினைக்கிறே? பிரணாப் முகர்ஜி பிரசிடென்ட்டா வருவாரா? இல்லே அவரை கேபினட்ல இருந்து விடக் கூடாதுன்னு தீர்மானம் பண்ணுவாங்களா? என்னமோ தெரியலே! இந்த சைனாக்காரன் வேறே கொஞ்சம் கொஞ்சமா உள்ளுக்குள்ளே வந்துக்கிட்டே இருக்கான். இந்தியன் கவர்ன்மென்டே கவனிக்க மாட்டேங்குது. பாகிஸ்தான்காரனை பாரு! இந்த விஸா எல்லாம் தளர்த்த வேண்டாம்னு சொல்லிட்டான். சரிடா டேய்! உனக்கு இப்ப பாலிடிக்ஸ் எல்லாம் வேணாம். பாலிடிக்ஸ் எல்லாம் அநாவசியமா எதுக்கு உனக்கு? ஏன்டா, உனக்கு பாலிடிக்ஸ்..? இப்ப அதான் கவலையா உனக்கு? அதை மறந்துட்டு கொஞ்சம் பேசாம இரேன். அதான் நல்லது! வரட்டுமா? நியூஸ் பாக்கணும். பிரணாப் முகர்ஜி ஸ்டேட்மென்ட் வரப் போகுதுன்னு ஒருத்தன் சொன்னான். போய்ட்டு வரட்டுமா? பாலிடிக்ஸ மறந்துடு. வேண்டாம் உனக்கு.’

இதுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல், ஒருவர் ஒன்று சொன்னார். ‘இதெல்லாம் எதனால நமக்கு வருதுன்னு நினைச்சே? நீ என்ன மருந்து சாப்பிட்டாலும் இதெல்லாம் சரியாப் போகாது. இதை அனுபவிச்சுட வேண்டியதுதான். போன ஜன்மத்து பாவம்! வேற வழி கிடையாது. அனுபவிச்சுத்தான்டா ஆகணும். அது, தானா சரியாப் போகிற வரைக்கும் நீ என்ன்னா மருந்து சாப்பிட்டாலும் சரியாப் போகாது. நாமெல்லாம் இந்த யுகத்துலே கொஞ்சநஞ்ச பாவமா பண்ணியிருக்கோம்? அத்தனையும் அனுபவிக்க வேண்டாமா? அதுலே கொஞ்சம் கழியறது இப்படி! அதை நினைச்சு சந்தோஷப்படு. பாவம் 100 பர்சன்ட் இருந்தா, இந்த ஜுரத்துலே ஒரு பர்சன்ட்டாவது போகாதா?’ இன்னும் கொஞ்சம் தாராளமாக, இந்தப் பாவத்தில் 50 பர்சென்ட் போகும் என்று அவர் சொல்லியிருந்தாலாவது நிம்மதியாக இருக்கும். அதுகூட இல்லை. ஒரு பர்சன்ட்தான் போகும் என்று சொல்லி விட்டுப் போனார்.

இப்படிப் பல உபதேசங்கள்.

நெஞ்சில் கபம் இருந்ததால், அதை எடுக்க ஃபிஸியோதெரபிஸ்ட்கள் என்னை மார்பில் அடித்தார்கள். ‘பட் பட் பட்’ என்று நல்ல அடி. ஆண்கள் செய்கிற வரையில் இது சரியாகப் போயிற்று. ஒரு பெண் வந்து நன்றாக அடித்தார். அவர் அடித்து முடித்த பிறகு, அவரிடம் ‘அம்மா உனக்கு ஒரு வேண்டுகோள்’ என்றேன்.
‘என்ன ஸார்?’ என்று அவர் கேட்டார்.
‘என்னை அடித்ததை வெளியே சொல்லி விடாதீர்கள். பொம்பளையிடம் அடிபட்டவன் என்ற பெயர் வரும். தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.
அந்த அம்மையார் பெருந்தன்மையுடன் ‘நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.
அடுத்ததாக வந்த ஆள், ‘அந்த அம்மா வந்து உங்களை மார்லே பட் பட் பட்டுன்னு நல்லா அடிச்சுட்டாங்களாமே!’ என்று கேட்டார்.
‘யார் உங்களுக்குச் சொன்னது?’ என்றேன்.
‘அவங்கதான் சொன்னாங்க’ என்றார்.
சரி, ஒரு உபதேச வெள்ளத்தில் மூழ்கி எழுந்தேன். ஒருவழியாக உடல் குணமாகி, வீட்டிற்குச் செல்வதற்காக லிஃப்ட்டில் ஏறினேன்.
லிஃப்ட் பாய் ‘சார் வணக்கம்!’ என்றான்.
‘வணக்கம்’ என்றேன்.
‘உடம்பு நல்லாயிடுச்சா?’ என்றான்.
‘நல்லாயிடுச்சு’ என்றேன்.
‘போய்ட்டு வாங்க சார். எப்ப சார் திரும்பி வருவீங்க?’ என்றான்.
நல்ல ஆசி! என்று நினைத்து விடைபெற்றேன்.

இதற்கிடையில், என்னைக் கவனித்த டாக்டர்கள், டாக்டர் ராஜ்.பி.சிங்; டாக்டர் ராமசுப்ரமணியம்; டாக்டர் பிரபாகர் தியாகராஜன் தவிர - டாக்டர்கள் ரங்கபாஷ்யம், பாலசுப்ரமணியம், கணேஷ், ஸ்ரீதரன், விஜய் சங்கர் போன்றவர்கள் காட்டிய அக்கறையும், திறமையும் அசாத்தியமானது. ஏதோ தங்கள் வீட்டில் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு விட்டதைப் போல், அவ்வளவு அக்கறை காட்டினார்கள். அவர்கள் மட்டுமல்ல, அப்பல்லோவின் அதிபர் டாக்டர். பிரதாப் சி.ரெட்டி மற்றும் அவருடைய மகள் ப்ரீதா ரெட்டி உட்பட – அங்கிருந்த லிஃப்ட் பாய் வரை, என்னிடம் காட்டிய பரிவும், அக்கறையும் என்றும் மறக்க முடியாதவை. டாக்டர்களின் திறமை, அவர்களுடைய அனுபவம் என்னை மீண்டும் இயங்க வைத்தது. இதற்கிடையில், அப்படி இப்படி சமாளித்து, ‘துக்ளக்’ இதழை வெளிக்கொண்டு வர ‘துக்ளக்’ காரியாலயத்தில் உள்ளவர்களும் மிகவும் உதவினார்கள். கட்டுரைகளை சரி பார்ப்பது, தலையங்கம் எழுதுவது போன்ற வற்றைச் செய்தாலும், கேள்வி-பதில் எழுத முடியவில்லை என்பதால், இரண்டு இதழ்களில் அதை நிறுத்தினேன். அதில் வாசகர்களுக்கு வருத்தம் உண்டு. எனக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. இதைத் தவிர, வாசகர்கள் எத்தனை பேர், எனக்காக வேண்டிக் கொண்டார்கள், எத்தனை பேர் கோவில்களில் அர்ச்சனை செய்தார்கள், பிரசாதங்களை அனுப்பினார்கள் என்ற கணக்கைப் பார்த்தால், அதற்கு முடிவே கிடையாது. அத்தனை பேர் அவ்வளவு அக்கறை காட்டியிருக்கிறார்கள். ஒரு வாசகருடைய தகப்பனார் வந்து, என்னுடைய கையை பிடித்துக் கொண்டு, அழுது தீர்த்துவிட்டார். ‘எனது உயிர் போகட்டும், நீங்கள் பிழைக்க வேண்டும்’ என்றார் அவர். அப்படி ஒன்றும் என் உயிருக்கு ஆபத்து நேரிட்டு விடவில்லை. ஆனால் அவருக்கு அவ்வளவு ஆதங்கம்! சில பெரிய மனிதர்கள், விவரஸ்தர்கள் வந்து அழுதார்கள்! என் நண்பன் ஒருவன் கதறித் தீர்த்து விட்டான். இத்தனைக்கும் எனக்கு வந்த நோய் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியதே அல்ல.
முதல்வர் வந்து பார்த்தார். ஏற்கெனவே எனக்குக் கிடைத்த மரியாதை, பல மடங்கு கூடிவிட்டது. நான் ஒரு VIP ஆகி விட்டேன். Very Important Patient! ஓரிரு நாளைக்கு மேல் தொடர்ந்து படுத்தவன் இல்லை என்பதால், இந்த மாதிரி ஒரு மாதம் நீண்டு விட்ட நோய், எல்லோரையும் மிகவும் பாதித்து விட்டது. ஆளும் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள், பல முக்கியஸ்தர்கள், நண்பர்கள், வாசகர்கள் என்று நேரில் வந்து பார்த்தவர்களுக்கும், பல வகைகளில் விசாரித்தவர்களுக்கும் வந்த வருத்தம், அவரவர்களைச் சூழ்ந்து விட்ட சோகம், கவலை எல்லாம் என்னை மிகவும் சிறிய மனிதனாக்கி விட்டது. நான் யோசித்துப் பார்த்தேன். ‘நாம் என்ன செய்து விட்டோம்? ஒரு பத்திரிகை நடத்துகிறோம். அதில் நமது கருத்துக்களை எழுதுகிறோம். அதை விற்கிறோம். பணம் சம்பாதிக்கிறோம். எழுதுகிற கருத்துக்கள் விலை போகாதது என்று சொல்லலாமே தவிர, அதற்கு ஒரு விலை வைத்து நான் லாபம் சம்பாதிக்கிறேன் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படிப்பட்டவனுக்கு இவ்வளவு பேர் அன்பும் பாசமும் காட்டுகிறார்கள் என்றால், அது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்!’ அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் என்று முன்பு நான் ஒரு புஸ்தகம் எழுதினேன். அதில் நான் கூறிய அதிர்ஷ்டங்களை எல்லாம் விட இப்படிப்பட்ட வாசகர்களைப் பெற்றிருக்கிறேனே, அதுதான் என் அதிர்ஷ்டம்!

ஆஸ்பத்திரியில் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன். ‘டாக்டர்கள் காட்டிய கருணையும் பரிவும், ஒருபுறம்; வாசகர்கள் காட்டிய அன்பு, அக்கறை – இவையெல்லாம் சேர்ந்து நாம் இதற்கு தகுதிதானா என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் என் மனதில் எழுப்பிக் கொண்டே இருந்தன. என்ன தகுதி இருக்கிறதோ, இல்லையோ, நாம் முடிந்தவரை இனி நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.
‘தானேதான் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். தானே தன்னைத் தாழ்த்திக் கொள்ளக் கூடாது’ என்ற தீர்மானத்துடன், இனி இதுவரை இருந்ததை விட, ஓரளவாவது (பெருமளவில் முடியாது என்பது தெரியும்) நல்ல மனிதனாக உயர வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தேன்.
இது நன்றிப் பிரகடனம்!
நன்றி சொல்ல ஆரம்பித்தால், அதற்கு முடிவே இருக்காது போலிருக்கிறது. அவ்வளவு பேர்! அவ்வளவு நல்லவர்கள்! என்னிடம் பரிவு காட்டினார்கள்; அக்கறை காட்டினார்கள். முதலில் ஏதோ காய்ச்சல் என்று நினைத்துக் கொண்டு, நானாக எனக்குத் தெரிந்த மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதில் ஆன்டிபயாடிக் மருந்தும் உண்டு. பத்து நாளில் உடம்பு நன்றாகக் கெட்டது. அதன் பிறகு ஜுரம், ஹை ஃபீவர், கபம், உடம்பு வலி, குளிர் என்று எல்லாம் வந்து விட்டன. இனி நம் வைத்தியம் செல்லாது என்று தீர்மானித்து டாக்டரிடம் போனேன். டெஸ்ட்கள் செய்தார்கள். சில மருந்துகளைக் கொடுத்தார்கள். இரண்டு மூன்று பேர் ஒருவருக்கு ஒருவர் கலந்து ஆலோசித்து மருந்துகள் கொடுத்தார்கள். இன்ஜெக்ஷன்கள் கொடுத்தார்கள். இப்படி பத்து நாள் போயிற்று.

இருபது நாளாயிற்று. உடம்பு சரியாகவில்லை. ஒரு ஸ்பெஷலிஸ்டிடம் அனுப்பினார்கள். அவர் அன்றே அப்போதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறிவிட்டார். அப்பல்லோவில் போய்ச் சேர்ந்தேன். இதற்கு முன்னால் நான், நோய் என்று ஆஸ்பத்திரியில் போய் படுத்ததில்லை. அங்கே சிகிச்சை ஆரம்பித்ததில் சுமார் ஐந்து நாட்களில் எல்லாம் சரியாகி விட்டது என்று நினைத்தபோது, ஏற்கெனவே எனக்கு இருந்த மூச்சு இரைப்பு மட்டும் போகவில்லை. இரவு தூக்கம் கிடையாது. அவ்வளவு மூச்சிரைப்பு. அதற்காக ‘லங் ஸ்பெஷலிஸ்ட்’டை கன்ஸல்ட் செய்ய வேண்டி வந்தது. மீண்டும் அப்பல்லோ! அங்கு சிகிச்சை தொடங்கியது. லங் ஸ்பெஷலிஸ்டுக்கு உதவியாக மனோதத்துவ ரீதியில் எனக்கு இருக்கக் கூடிய மன அழுத்தங்கள் விலக வேண்டும் என்பதற்காக, ஒரு டாக்டர்! இப்படி மூன்று டாக்டர்கள் கவனித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மூச்சிரைப்பு குறைந்தது. இரண்டாவது முறை கிட்டத்தட்ட 8 நாட்களுக்கு மேல் அப்பல்லோவில் இருந்தேன். பிறகு வீடு திரும்பினேன்.

நன்றி: துக்ளக்

கருத்துகள் இல்லை: