புதன், 13 ஜூன், 2012

காலியாகிறது நித்தியானந்தா ஆசிரமம்

பெங்களூரு, ஜூன் 12- கருநாடக மாநிலம் பெங்களூர் அருகே பிடதியில் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் காவல்துறையினர் இன்று சோதனையிடுகிறார். இதனால் ஆசிரமத்தில் உள்ள பக்தர்கள் சீருடைகளைக் களைந்து சாதாரண உடையில் வெளியேறினார்கள்.
செய்தி வருமாறு:
நித்யானந்தாவின் பெண் சீடர்களில் ஒருவரான சென்னையைச் சேர்ந்த ஆர்த்திராவ், கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நித்தியானந்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதையடுத்து பெங்களூருவில் நித்தியானந்தா, கடந்த 7 ஆம் தேதி தன் மீதான பாலியல் புகாருக்கு பதில் அளிக்க செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார். செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் நித்தியானந்தா சீடர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
ஆதாரங்களைக் காண்பித்த செய்தியாளர் நித்தியானந்தாவின் சீடர்களால் வெளியேற்றப்பட்டார். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு செய்தியாளர் தாக்கப்பட்டார்.

இதையடுத்து கன்னட செய்தியாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைத்து அதை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இதற்கு பணிந்த கருநாடக முதலமைச்சர் சதானந்த கவுடா, பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நித்தியானந்தா கைது செய்யப்படுவார் என்றும் சதானந்தகவுடா அறிவித்தார்.

கருநாடக அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நித்யானந்தா தலைமறைவாகி விட்டார். பிடதி ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய அவர் எங்கு சென்றார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சோதனை நடத்துவதற்கான அரசு உத்தரவு இன்று ராம்நகர் மாவட்ட ஆட்சியருக்குக் கிடைத்தது. இதனை அவர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அனுபவ் அகர்வாலுக்கு தெரிவித்தார்.

தனிப்படை காவல்துறையினர் பீடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் இன்று சோதனையிடுகிறார்கள். என்னென்ன பொருள்கள் இருக்கிறது என்பதை கணக்கிடுவதுடன் அங்கிருந்த ஆவணங்களையும் ஆய்வு செய்கிறார்கள்.

நித்யானந்தா ஆசிரமத்தில் வெளிநாட்டு பக்தர்கள் உள்பட சுமார் 150 பேர் தங்கி இருந்தனர். நித்தியானந்தாவை கைது செய்ய அரசு உத்தரவிட்டதையடுத்து பலர் ஆசிரமத்தை காலி செய்ய தொடங்கினார்கள். சீடர்கள் பலர் தங்களது சீருடைகளை களைந்து சாதாரண உடையில் வெளியேறினார்கள்.

பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்த காவல்துறையினர் அவர்களது உடமைகளை கடுமையாக சோதனையிட்ட பின்னரே வெளியேற அனுமதித்தனர். இன்று காலை வரை 70 சதவீதம் பக்தர்கள் வெளியேறி விட்டனர். வெளிநாட்டைச் சேர்ந்த பக்தர்கள் மட்டும் ஆசிரமத்தில் தங்கி உள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: