செவ்வாய், 12 ஜூன், 2012

மணல் கடத்தலுககு இடையூறாக இருந்த 15 நாய்கள் விஷம் வைத்து சாகடிப்பு

நெல்லை: தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்த இடையூறாக இருந்த 15 நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றுள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படை வீடு பகுதி ஆற்றில் இருந்து அதிக அளவில் மணல் கடத்தப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இரவோடு, இரவாக லாரி, டிராக்டரில் மணல் கடத்தப்படுகிறது. மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு அப்பகுதி நாய்கள் இடையூறாக இருந்துள்ளன.
இந்நிலையில் மணப்பாடு வீடு அருகே நாய்களுக்கு மர்ம நபர்கள் மாமிசத்தில் விஷம் தடவி கொடுத்துள்ளனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், ஜான்சன், செல்லதுரை வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் உள்பட 15 பேருக்கு சொந்தமான நாய்கள் செத்து மடிந்தன.
மேலும் விஷம் தடவிய மாமிசத்தை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட காக்கைகளும் இறந்தன.
மணல் கடத்தல் குறித்து போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இரவு நேரங்களில் மணல் அள்ள வருபவர்களை பார்த்து நாய்கள் குறைப்பதால் அவர்கள் நாய்களை விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பிராணிகள் வதை தடுப்பு அமைப்பான புளூ கிராசிடம் அப்பகுதி மக்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: