ஞாயிறு, 10 ஜூன், 2012

நான் மத்திய மந்திரியாக இருந்தபோதுகூட இந்த வரவேற்பு இல்லை : ஆ.ராசா



நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா 1 1/2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கோவை வந்தார். வரவேற்பு முடிந்ததும் தனது சொந்த தொகுதியான நீலகிரிக்கு காரில் புறப்பட்டார்.

அன்னூர் அருகே உள்ள கணேசபுரத்தில் திரண்டிருந்த தி.மு.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் மத்தியில் ஆ.ராசா பேசியபோது,


’’அவினாசி-அத்திக் கடவு திட்டம் தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. செயல்படுத்தமுடியுமா? என்ற நிலையில் இருந்த அந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினோம். ஆனால் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் மற்றும் இந்த தொகுதி எம்.எல்.ஏ. மக்களின் குறை தீர்க்க அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதற்கு நாங்கள் எந்த வகையிலும் உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.

நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறோம். நீலகிரியில் கலைஞர் என்னை போட்டியிட சொன்னபோது சற்று யோசித்தேன். நான் பள்ளி, கல்லூரிகளில் படித்தபோது அங்கு சுற்றுலாதான் சென்றுள்ளேன். மற்றபடி எனக்கு நீலகிரியை பற்றி எதுவும் தெரியாது என்றேன்.

ஆனால் கலைஞர் கண்டிப்பாக நீ போட்டியிட வேண்டும். கொங்கு மக்களும், நீலகிரி மக்களும் அன்பானவர்கள். உன்னை வெற்றிபெற செய்வார்கள் என்றார். அதன்படி என்னை வெற்றிபெறச் செய்தீர்கள்.

நான் மத்திய மந்திரியாக இருந்தபோதுகூட இந்த வரவேற்பு இல்லை. 1 1/2 ஆண்டு கழித்து வந்த எனக்கு நீங்கள் அளித்த வரவேற்பு உற்சாகத்தை தந்துள்ளது. உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

நீலகிரி மக்களின் குறைகளை தீர்க்காமல் இங்கிருந்து செல்லமாட்டேன். நான் மத்திய மந்திரியாக இருந்த போது 30 கோடி தொலை தொடர்பு இணைப்புகள் தான் இருந்தது. அது தற்போது 100 கோடியாக உயர்ந்துள்ளது. அதற்கு காரணம் நான்தான். 100 கோடி தொலை தொடர்பு இணைப்புகள் மூலமாக உங்களுடன் நான் தினமும் பேசிக்கொண்டு இருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: