ஞாயிறு, 16 மே, 2010

தமிழினம் பலம் குன்றுவதற்கு கூட்டமைப்பின் நிலைப்பாடே வழிவகுத்தது


- ஜீவகன்
உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தில் தேர்தல் முறைமாற்றம் முக்கிய இடம் வகிக்கின்றது. தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்குப் பதிலாகத் தொகுதிவாரி முறையும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் கலந்த ஒரு தேர்தல் முறையை நடை முறைப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. பிரதான அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இந்த மாற்றத்துக்கு ஆதரவளிக்கின்றன. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை மாற்றுவது சிறுபான்மையினரின் நலன்களுக்குக் குந்தகமானது என்று பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கையொன்றில் அவர் கூறியிருக்கின்றார்.

சுரேஷ் கூறியிருப்பது அவரின் சொந்தக் கருத்தா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை நீக்குவது தொடர்பாக முன்னர் ஒரு சந்தர்ப்பத் தில் கூட்டமைப்புத் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கு மாறுபட்டதாகவே சுரேஷ் பிரேமச்சந்திரனின் கருத்து இருக்கின்றது. அதனாலேயே இந்தக் கேள்வி.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை மாற்றுவதாலோ மாற்றாமலிருப்பதாலோ தங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் பழைய தேர்தல் முறை தங்களுக்குக் கூடுதல் வாய்ப்பானது என்றும் அப்போது அவர்கள் கூறினார்கள். உண்மையும் அதுதான். தொகுதிவாரித் தேர்தல் முறை கூட் டமைப்புக்கு நன்மையானது என்பதைக் கடந்த பொதுத் தேர்தல் முடிவுகளிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். அப்படியிருக்க சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோக பூர்வ கருத்தாகக் கொள்வோமானால் அக்கருத்தை இப்போது வெளியிடுவ தற்கான இரண்டு காரணங்கள் மனதில் தோன்றுகின்றன.

கூட்டமைப்புத் தலைவர்களும் அவர்களுக்கு முந்திய தலைவர்களும் அறுபது வருட காலமாக இனப் பிரச்சி னையின் தீர்வுக்காக எதுவும் செய்யாததால் தமிழ் மக்கள் தாங்கொணாத் துன்பங்களுக்கு உள்ளாகினர். இத னால் மக்களின் எதிர்ப்பு வலுவடைந்து தனித் தொகுதியில் வெற்றி வாய்ப்புக் குறைந்துவிடும் என்ற அச்சம் ஒரு காரணமாக இருக்கலாம்.

இனப்பிரச்சினைக்கான அரச தரப்புத் தீர்வு முயற்சியை ஏதேனுமொரு கார ணத்தைக் கூறி நிராகரிப்பதும் பின்னர் அதற்கு இனரீதியான விளக்கம் அளிப்பதும் தமிழ்த் தலைவர்களின் வழமை. பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் விடுக்கும் அழைப்பை நிராகரிக்கும் நோக்கம் இருப்பதால் முன்கூட் டியே ஒரு காரணத்தை முன்வைப் பதாகவும் இருக்கலாம்.

எவ்வாறாயினும், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பதுதான் இன்றைய யதார்த்தம். பேச்சுவார்த்தையை எவ்வ ளவு காலத்துக்குப் பின்தள்ளுகின் றோமோ அவ்வளவு காலத்துக்கு இனப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை. இனப் பிரச்சினைக்கு ஏதாவதொரு தீர்வு இல்லாதிருக்கும் வரை தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் தொடரவே செய்யும்.
இரண்டு பொறுப்புகள்
தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு பிரதான பொறுப்புகள் உள் ளன. ஒன்று நீண்டகாலப் பொறுப்பு. மற்றது குறுகியகாலப் பொறுப்பு.

இனப் பிரச்சினைக்கு முழுமையான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது பிரதானமானது. இது உடனடியாக நிறைவேற்ற முடியாத பொறுப்பு. நீண்டகால வேலைத் திட்டத்துடன் செயற்படுவதன் மூலமே இந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடியும்.

அண்மைக் காலம் வரை தமிழ் மக்கள் ஈடுசெய்ய முடியாத இழப்புகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள். சொத்துகளை இழந்திருக்கின்றார்கள். உற்றார் உறவினரை இழந்திருக்கின்றார்கள். இந்த இழப்புகளுக்குக் காரணமாக இருந்த சூழ்நிலை இப்போது இல்லாத போதிலும் இன்றும் துன்பங்கள் இல்லாமிலில்லை. காலங்காலமாக வாழ்ந்த சொந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறி வாழும் அவலநிலை இப்போதும் இருக்கின்றது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக நாளாந்த வாழ்க்கையில் முகங்கொடுக்கும் கஷ்டங்கள் இப்போதும் இருக்கின்றன. தமிழ் மக்கள் இப்போது அனுபவிக்கும் கஷ்டங்கள் தொடராதிருக்கும் வகையிலும் முன்னர் முகங்கொடுத்த இழப்புகள் மீண்டும் ஏற்படாதிருப் பதை உறுதிப்படுத்தும் வகையிலும் செயற்பட வேண்டியது அம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளு மன்ற உறுப்பினர்களின் பொறுப்பு. இது இப்பாராளுமன்ற உறுப்பினர்க ின் குறுகிய காலப்பொறுப்பு.

இரண்டு பொறுப்புகளும் ஒன்றுடனொன்று சம்பந்தப்பட்டவை. முழுமையான அரசியல் தீர்வை உடனடி யாக அடையக் கூடியதாக சமகால யதார்த்தம் இல்லை என்பதில் மாறுட்ட கருத்து இருக்க முடியாது. படிப் படியாகவே முழுமையான அரசியல் தீர்வை அடைய வேண்டும். படிப்படியாக அரசியல் தீர்வை முன்னெடுக் கும் நடைமுறை தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கும் தீர் வாக அமையும்.

பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழான மாகாண சபையையோ அல்லது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதனிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய ஒரு அமைப்பையோ ஏற்றுக் கொண்டு மேலதிக அதிகாரங்களைப் பெறுவதற்காகத் தொடர்ந்து முயற்சிப்பதன் மூலம் முழுமையான அரசியல் தீர்வை அடைய முடியும்.

மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடனாவது நிர்வாக அமைப்பொன்றை உடனடியாக மாகாண மட்டத்தில் கொண்டு வருவது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர் வாக அமையும்.

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முழுமையான தீர்வு கிடைக்கும்வரை காத்திருக்கும் நிலைப்பாட்டைக் கைவிட்டு, உடனடியாகச் சாத்தியமான தீர்வை ஏற்றுக்கொண்டு மேலதிக அதிகாரங்களுக்காகத் தொடர்ந்து முயற்சிக்கும் அணுகுமுறையைப் பின்பற்றுவார்களேயானால் நீண்ட காலப் பொறுப்பையும் குறுகியகாலப் பொறுப்பையும் ஒரே சமயத்தில் நிறைவேற்றுவதாக இருக்கும்.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையைத் தட்டிக் கழிப்பதற்கான ‘நியாயங்களைக்’ கண்டுபிடிப்பதை விட்டு, பேச்சுவார்த்தை மூலம் சாத்தியமான தீர்வொன்றைப் பெற்று அதை வலுப்படுத்திக்கொண்டு படிப்படியாக முழுமையான தீர்வை நோக்கி நகரும் ஆக்கபூர்வ அரசியலுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரும்ப வேண்டிய காலம் வந்துவிட்டது.
புலம் பெயர்தல்
பத்து லட்சம் தமிழர்கள் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்திருக்கின்றார்கள் என்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதினொன்றாக இருந்த பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை ஒன்பதாகக் குறைந்திருக்கின்றது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருப்பது ஒரு அபாய எச்சரிக்கையாகவே உள்ளது. பல்லின நாடொன்றில் ஒரு இனத்தின் குடிசன எண்ணிக்கை குறைவடைவதும் பாராளுமன்றப் பிரதிநிதித்து வத்தில் வீழ்ச்சி ஏற்படுவதும் சாதாரண விடயங்களல்ல. அந்த இனம் பலமிழக்கின்றது என்பதே இதன் அர்த்தம். எந்த இனமாக இருந்தாலும் அதன் பலம் குறையும் போது எதிர்காலம் கேள்விக்குறி ஆகின்றது. இந்த நிலை தோன்றுவதைத் தவிர்ப்பதற்கான செயற்பாடுகளுக்கே தலை ர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்துக்குமுரிய பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை அம் மாவட்டத்தின் சனத்தொகையை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படுகின்றது. சனத் தொகை கூடும் போது ஆசனங்களின் எண்ணிக்கை கூடும். குறையும் போது குறையும். எனவே பத்து லட்சம் தமிழர்கள் புலம் பெயர்ந்திருக்கும் நிலையில் தமிழ்ப் பிரதேசங்களின் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைவ தொன்றும் புதுமையானதல்ல.

புலம் பெயர்தலைத் தவிர்ப்பது எவ்வாறு என்பதே தமிழ்த் தலைவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம்.

பொருளாதாரக் காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்து சென்றவர்களிலும் பார்க்க தமிழ்ப் பிரதேசங்களில் நில விய அமைதியின்மை காரணமாகப் புலம் பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆயுதப் போராட்டம் இந்த நிலைக்கு அடிப்படைக் காரணம் எனக் கூறினால் தவறாகாது. தமிழ்க் குழுக்களின் ஆயுதப் போராட்டத்துக்கு எதிர்வினையாக அரசாங்கம் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் தோன்றிய அமைதியின்மை புலம் பெயர்தலுக்கு வழிவகுத்தது.

ஆயுதப் போராட்டம் தலைதூக்கியதற்கும் ஒருவகையில் தமிழ்த் தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் இனப் பிரச்சினையைச் சரியான முறையில் கையாண்டிருந்தால் ஆயுதப் போராட்டம் தலை தூக்கியிருக்காது. இப்போது அதைப் பற்றிப் பேசிப்பலனில்லை. புலம் பெயர்தலைத் தடுப்பது எப்படி என்பதே இப்போதைய முக்கிய பிரச்சினை.

சுதந்திரமான நடமாட்டத்துக்குக் கூட இடமில்லாதவாறு அமைதியின்மை நிலவும் பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறுவது இயல்பானதே. இவ்வாறாகவே பலர் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றனர். புலிகளின் சர்வாதிகார தர்பார் ஒருபுறத்திலும் படையினரின் இரா ணுவ நடவடிக்கை மறுபுறத்திலுமாக அச்சஞ்சூழ்ந்த சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காகவே மக்கள் வெளியே றினர். அமைதியான சூழ்நிலை இருந் திருக்குமேயானால் அவர்கள் வெளியேறிச் சென்றிருக்க மாட்டார்கள். வடக்கு, கிழக்கு மாகாண சபை செயற்பட்ட குறுகிய காலத்தில் புலம் பெயர்தல் இடம் பெறவில்லை. அப் போது அமைதியான சூழ்நிலை நில வியது. மக்களிடம் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தோன்றியது. அதனால் மக்கள் சொந்த இடங்களில் வாழ விரும்பினார்கள். அந்த மாகாண சபை நிர்வாகத்துடன் மிக நெருக்க மான தொடர்பு கொண்டிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. இதை நன்கறிவார்.

புலம் பெயர்ந்து சென்று வெளிநாடுக ளில் தங்கள் வாழ்க்கையை அமைத் துக் கொண்டவர்கள் மீண்டும் இலங் கைக்கு வந்து வாழ்க்கையை ஆரம் பிப்பார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது. அவர்களை மீண்டும் இலங் கைக்கு வந்து வாழ்க்கையை ஆரம் பிக்குமாறு தலைவர்கள் அழைக்க வேண்டும். அதற்கு முன்னோடியாகத் தலைவர்கள் தங்கள் குடும்பங்களைச் சொந்த மண்ணுக்குக் கொண்டுவர வேண்டும். குடும்பங்களை வெளி நாடுகளில் தங்க வைத்துக்கொண்டு, புலம் பெயர்தலால் தமிழினம் பலம் குன்றுகின்றது என்று வேதனை தெரிவிப்பதில் அர்த்தமில்லை.

புலம் பெயர்வதை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் தமிழினம் நாளுக்கு நாள் நலிவுறும் என்பதை எல்லோ ரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்” எனவே புலம் பெயர்தலைத் தவிர்க் கும் வகையில் செயற்பட வேண்டி யது தமிழ் மக்களின் தனிப் பிரதிநிதி களென உரிமை கோருபவர்களின் பிரதான கடமை. இதுவரை அக்கட மையை அவர்கள் நிறைவேற்ற வில்லை. புலம் பெயர்தலை ஊக்கு விக்கும் வகையிலேயே செயற்பட்டி ருக்கின்றார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாண சபை செயற்பட முடியாத சூழ்நிலையைத் தோற்றுவித்ததும் பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டத்தை நிராகரித்ததும் பின் னர் புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்பட்டதும் அமை தியின்மை அதிகரிப்பதற்கு வழிவகுத் தன.

இப்போதாவது இத் தலைவர்கள் சரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மாகாண மட்டத்தில் நிர் வாக ஏற்பாடொன்றை ஏற்று அமைதி யைத் தோற்றுவிப்பதன் மூலம் புலம் பெயர்தலைக் கட்டுப்படுத்தலாம். அதைவிட்டு முழுமையான தீர்வுதான் தேவை என்று காத்திருப்பது புலம் பெயர்தல் தொடர்வதற்கும் அதன் மூலம் தமிழினம் பலம் குன்றுவதற் கும் வழிவகுப்பதாகிவிடும்.
-Thinakaran -

கருத்துகள் இல்லை: