சனி, 15 மே, 2010

கலைஞர். பார்வதி அம்மாள் சிகிச்சை பிரச்சினை: அரசியலுக்காக திட்டமிட்டு ஏமாற்றுகிறார்கள் கலைஞரி பேட்டி

கே:- உங்கள் ஆட்சியில் அதிகார மையங்கள் நிறைய உள்ளதாகவும், நிர்வா கத்திலும் ஆட்சி அதிகாரத்திலும் அவற்றின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?

ப:- குற்றம் சாட்டா விட்டால், பின்னர் எப்படி அவை எதிர்க்கட்சிகளாக இருக்க முடியும்? அதிகார மையங்கள் என்பதில் அர்த்தமும் இல்லை; அடிப்படையும் இல்லை.

கே:- சினிமா துறையினருக்கு நீங்கள் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் தருவதாகவும் ஒரு விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. தமிழ் மக்களிடத்தில் சினிமா நடிகர்களுக்கு உள்ள செல்வாக்கை உங்களுக்கான ஆதரவாக மாற்றும் முயற்சியா இது?

ப:- அரசியல் துறையிலே இருப்பதைப் போலவே, இலக்கியத் துறையிலே இருப்பதைப் போலவே சினிமா துறையிலும் எனக்கு ஏராளமான நண்பர்கள் அந்தக் காலத்திலிருந்தே உண்டு. அந்தத் துறையைச் சேர்ந்த நண்பர்கள் அடிக்கடி என்னைச் சந்திப்பார்கள். அது தானே தவிர அந்தத் துறைக்கென்று அபரிமிதமான முக்கியத் துவம் எதையும் நான் தர வில்லை. அந்தத் துறையிலே உள்ள தொழிலாளர்கள் மீது அந்தக் காலத்திலிருந்தே எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு. அதன் காரணமாக அவர்களுக்கென்று சில பல சலுகைளை நான் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற காரணத்தால், செய்கின்ற காரணத்தினால், அந்தத் துறைக்கு நான் அதிக முக்கியத்துவம் தருகிறேன் என்று உங்களைப் போன்ற சிலர் கருதுகிறார்கள் போலும்.

கே:- முன்பெல்லாம் தேர்தல் களம் என்பது கொள்கைப் பிரச்சாரம் - வாதம் - எதிர்வாதம் என அமர்க்களப்படும். ஆனால் இப்போது ஏராளமாக பணம் புழங்குவதும் - வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிற காரணியாக பண பலம் மாறி விட்டதற்கான சூழல் தென்படுகிறது. வாக்காளர்களே பணம் கேட்கும் நிலை ஏற்படுவதாக தேர்தல் அதிகாரிகளே வருந்துகிறார்கள். சாமானியர்கள் தேர்தலைப் பற்றி சிந்திக்க முடியாமல் செய்து விடும் இந்தச்சூழல் ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதா?

ப:- காலக்கணக்கெடுத்திட; நீங்கள் நண்பர் சோ அந்தக் காலத்தில் நடத்திய சம்பவாமி யுகே யுகே நாடகத்தைப் பார்த்திருக்க வேண்டும்.

கே:- நீங்கள் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது நேரில் சென்று கண்டு ரசிக்கவும் நீங்கள் தவறுவதில்லை. ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டியில் மாறுபட்டுள்ள டி.20 போட்டி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அண்மைக் காலத்தில் உங்களைக் கவர்ந்த வீரர்கள் யார்?

ப:- டி.20 போட்டிகள் விளையாட்டு வீரர்களின் திறமையைப் பொறுத்து முடிவுகள் அமைய வேண்டுமே தவிர - சூதாட்டக்காரர்களின் முடிவுகளாக அமைந்து விடக்கூடாது என்று நினைக்கிறேன். தொடர்ந்து டெண்டுல்கர் பொறுப்புணர்வோடு விளையாடுவது என்னைக் கவர்ந்த ஒன்றாகும். அண்மைக் கால வீரர்களைச் சொல்ல வேண்டுமானால் சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் டோனி, ஷேர்ன் வாட்சன், ஜாகஸ் காலீஸ் போன்றவர்கள் என்னைக் கவர்ந்தவர்களாவர்.

கே:- தமிழ்நாட்டில் பொதுவாக தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், கிராமப் புறங்களில் வறட்சியும் வறுமையும் தொடர் கின்றனவே? வேலையில்லாத் திண்டாட்டமும், வேலை தேடி நகரங்களுக்குப் படையெடுக்கும் சூழலும் நீடிக்கின்றனவே?

ப :-தமிழ்நாட்டில் பொதுவாக தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டதற்காக நன்றி. கிராமப்புறங்களிலே வறட்சியும் வறுமையும் தொடர்வதாகக் கேட்டிருக்கி றீர்கள். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்துவதாலும்; ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தினாலும் - கிராமப்புறங்களில் பெருமளவுக்கு வறுமையும் வறட்சியும் குறைந்து வருகிற தென்பதைக் கண்கூடாகக் காணலாம். கிராமப்புறங்களிலும் வளமையைக் கொண்டுவர வேண்டுமென்பதற்காகத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்காகத் தான் புதிதாக தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களை யெல்லாம் கிராமப் புறங்களிலே தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டுமென்றும், அந்தத் தொழிற்சாலை அமைகின்ற பகுதிகளிலே உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம். கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு அத்தகைய தொழிற் சாலைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கு மேயானால, நகரங்களுக்கு படையெடுக்கும் சூழல் தானாகவே குறைந்து விடும்.

கே :- நான்காண்டு கால ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவச டி.வி., கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை, சட்ட மன்றக் கட்டடம், வீட்டு வசதித் திட்டம் என சாதனைப்பட்டியல் நீளமானது. இவற்றில் உங்களைக் கவர்ந்தது எது?

ப:- ரோஜா தோட்டத்தில் உங்களைக் கவர்ந்த ரோஜா எது எனக் கேட்பதைப் போல இருக்கிறது.

கே :- இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒரு துயரமான முடிவுக்கு வந்திருக்கிறது. அந்நாட்டில் போர் முடிந்து, இரு தேர்தல்கள் நடந்துள்ள நிலையிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவும் அரசியல் தீர்வு ஏற்படவும் இந்தியாவின் நடவடிக்கைகளில் மெத்தனமும் அலட்சியமும் தென்படுகின்றனவே?

ப :- இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் - அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அமைதியான நல்வாழ்வு வாழ வேண்டும் - அவர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் இங்குள்ள மத்திய, மாநில அரசுகளின் பெரு விருப்பமாகும். இலங்கை ஒரு அன்னிய நாடு என்கிற போது தான், அவர்களின் உள்நாட்டுப் பிரச்சினை களில் நாம் தலையிடும்போது முள்ளில் விழுந்த துணியை, கிழியாமல் எடுப்பது போல் எடுக்க வேண்டியிருக்கின்றது. அந்த அளவிற்கு மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, இங்குள்ள ஒருசில அரசியல் வாதிகள் அரசியல் ரீதியான உள்நோக்கங்களோடு, ஏதோ அவர்கள் தான் இலங்கைத் தமிழர்களுக்காகப்பாடுபடு பவர்களைப் போல நடிக்கிறார்களே தவிர, வேறொன்றும் இல்லை. உதாரணமாக பார்வதி அம்மாள் பிரச்சினையையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலை. இருந்தாலும் ஒருசிலர் தங்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக அந்த அம்மையாரின் உடல் நிலையை வைத்து தாங்கள் தான் அவர்மீது அக்கறையும், பாசமும், பற்றும் உள்ளவர்கள் என்பதைப்போல திட்டமிட்டு எல்லோ ரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கே:- மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகி, அழகிரி மாநில அரசியலுக்கு வருவார் என்றும், கனிமொழி மத்திய அமைச்சராக பதவி உயர்வு பெறுவார் என்றும் ஊடகங்களில் செய்திகள் அடிபடுகின்றனவே?

ப:- நீங்கள் தான் உங் கள் கேள்வியிலேயே ஊடகச் செய்தி என்று சொல்லி விட்டீர்களே?

கே:- இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும் காங்கிரசிடம் ஒரு கர்வமும் - பெரிய அண்ணன் போக்கில் நடந்து கொள்வதாகவும் டெல்லி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்னையார் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில்கூட தமிழக அரசோடு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. குற்றம்சாட்டி இருக்கிறது. தி.மு.க. காங்கிரஸ் உறவு எப்படி இருக்கிறது? 2011 தேர்தலில் இந்த உறவு நீடிக்குமா?

ப:- இது ஏதோ உள்நோக்கத்தோடு கேட்கப்படுகின்ற கேள்வியைப் போல உள்ளது. இருந்தாலும் பதில் கூறுகிறேன். காங்கிரசிடம் எந்தக் கர்வமும் ஏற்படவும் இல்லை. பெரிய அண்ணன் போக்கில் அவர்கள் நடந்து கொள்ளவும் இல்லை. இவை வெறும் கற்பனை. அண்மையில் நான் டெல்லி சென்றிருந்த போது கூட, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மிகுந்த அன்போடு என்னை வரவேற்றார்கள். பிரபாகரனின் அன்னையார் விவகாரத்தில் கூட தமிழக அரசோடு மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. தரப்பில் யாரும் குற்றஞ்சாட்டவில்லை. பிரபாகரனின் அன்னையார் தரப்பிலிருந்து தான் யாரும் தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் நீங்கள் வேண்டுமென்றே அனைத்தையும் மாற்றி கேள்வி கேட்டிருக்கிறீர்கள். தி.மு.க. காங்கிரஸ் உறவு சுமூகமாக உள்ளது. 2011 தேர்தலிலும் இந்த உறவு நல்லவிதமாக நீடிக்கும்.

கே:- ஜெயலலிதாவுக்கு சின்சியாரிட்டி பிடிக்கும். உங்களுக்கு சீனியாரிட்டி பிடிக்கும் என்பது பரவலாகப் பேசப்படும் விஷயம். அமைச்சரவையிலும், சட்ட மன்றத்திலும் புதிய முகங்களை, புதிய சிந்த னையை வரும் ஆண்டிலாவது பார்க்க முடியுமா?

ப :- என்னைப் பொறுத்த வரையில் சின்சியாரிட்டி யோடு இணைந்த சீனியாரிட்டி யைத்தான் நான் எப்போதும் மதிப்பவன். கழகம் அவ்வப்போது தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வருவதை அனைவரும் அறிவர். புது முகங்களுக்கும் புதிய சிந்தனைக்கும் கழகத்தில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. கடைசியாக நடைபெற்ற பென்னாகரம் இடைத்தேர்தலில் கூட படித்த ஒரு இளைஞரான புது முகத்தைத் தானே நிறுத்தி வெற்றி பெறச் செய்தோம்.

கே:- தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படும் நிலைமை தொடர்கிறதே?

ப:- இந்தத் துன்பத்தைகளைவதற்கு பல ஆண்டுகளாக நம்மால் முடிந்த முயற்சிகளையெல்லாம் செய்து கொண்டு தான் வருகிறோம். எனினும் மீண்டும், மீண்டும் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

கருத்துகள் இல்லை: