வியாழன், 20 மே, 2010

சிங்கப்பூர் டின்டேல் பல்கலைக்கழகமும்,​​ நமது ஊர் கலைஞன் பதிப்பகமும் இணைந்து ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கத்தை சிங்கப்பூரில் ​

கடந்த வாரம் வெள்ளி,​​ சனிக்கிழமைகளில் சிங்கப்பூர் டின்டேல் பல்கலைக்கழகமும்,​​ நமது ஊர் கலைஞன் பதிப்பகமும் இணைந்து ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கத்தை சிங்கப்பூரில் ​ நடத்தின.​ இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கத் தமிழகத்திலுள்ள பல பல்கலைக்கழகங்களில் இருந்து மட்டுமல்லாமல் பல இந்திய மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்தும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.​ கருத்தரங்கின் விவாதப் பொருள் "வாழ்வியலில் இலக்கியம்'.
வந்திருந்த தமிழறிஞர்களான பேராசிரியர்கள் பலர்,​​ இலக்கியம் மிகவும் நீர்த்துப்போய்,​​ புதினங்கள்,​​ சிறுகதைகள்,​​ மரபுக் கவிதைகள்,​​ எல்லாமே சிதைந்து நீர்த்துப் போய்விட்டதாக வருத்தப்பட்டனர்.​ சிறுகதைகள் என்பது ஒரு பக்கக் கதைகள் என்றாகி,​​ போஸ்ட் கார்ட் கதைகள்,​​ ஸ்டாம்புக் கதைகள் என்றாகிவிட்டது என்று ஆதங்கப்பட்டனர் பலர்.​ எல்லாவற்றுக்கும் மேலாக,​​ பெருவாரியான தமிழறிஞர்களின் மனவேதனை தமிழ் படிப்பதே பயனற்ற ஒன்று என்கிற எண்ணப் போக்கு பெற்றோர்களுக்கும்,​​ மாணவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதாக இருந்தது.​ ​
பன்னாட்டுக் கருத்தரங்குக்கு வெளிநாட்டில் கூடியிருந்த தமிழறிஞர்கள்,​​ பெருவாரியான தமிழகத்தின் மூத்த தலைமுறையினர் தங்களது மனதிற்குள் வெம்பி வெதும்பும் பிரச்னையைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.​ "தமிழ் படிப்பதால் வேலை கிடைக்குமா?',​ "தமிழ் படிக்காவிட்டாலோ,​​ தமிழ் மொழி இல்லாமல் போனாலோ என்ன குடியா முழுகிவிடும்?',​ "மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கான ஒரு கருவிதானே தவிர,​​ அதற்குமேல் முக்கியத்துவம் தரப்படும் அம்சமாக நாங்கள் கருதவில்லை' என்றும் பலர் குரலெழுப்பி வேதனைத் தீயில் நெய் வார்க்கவும் முற்படுகின்றனர்.
மேலே சொன்ன கருத்துகளை வெளிப்படுத்துபவர்கள் அனைவருமே தாங்களோ,​​ தங்களது குழந்தைகளோ படித்துப் பட்டம் பெற்று அமெரிக்காவிலோ,​​ வேறு வெளிநாடுகளிலோ வேலைக்குப் போக வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் வாழ்க்கையை அணுகுபவர்கள் என்பதுதான் உண்மை.​ இவர்கள் தெரிந்து கொள்ள மறுக்கும் ஒரு முக்கியமான விஷயம்,​​ மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம் என்பதையும்,​​ அப்படி அடையாளம் இல்லாமல் இருப்பவன் ஏதாவது ஒரு கட்டத்தில் இரண்டும்கெட்டான் நிலையில் தத்தளிக்க நேரிடும் என்பதையும்!
பன்னாட்டுக் கருத்தரங்கில் மேலே சொன்ன சர்ச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது,​​ வெளியே சிங்கப்பூர் தெருக்களில் இதேபோன்ற ஒரு சர்ச்சை எழுந்து,​​ சிங்கப்பூர் அரசு மக்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தும் விட்டிருப்பது பலருக்கும் தெரியாது.​ சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சர் நெக் எங்க் ஹென் ஒரு பத்திரிகைப் பேட்டியில்,​​ அடிப்படைக் கல்வித் திட்டத்தில் தாய்மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் குறைக்கப்படும் என்று வாய்தவறி உளறி மாட்டிக்கொண்டு,​​ கடைசியில் வெகுண்டெழுந்த சீன மக்களிடம் மன்னிப்புக் கேட்டதுடன்,​​ தாய்மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் எள்ளளவும் குறைக்கப்படாது என்று பிரதமர் லீ சீன் லூங்கே உறுதி அளிக்க வேண்டி வந்திருக்கிறது.
சிங்கப்பூர் நகரிலுள்ள "ஹுங்க் லிம் பார்க்' என்கிற இடத்தில் பேச்சாளர் மூலை என்றொரு இடம் இருக்கிறது.​ இங்கே யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துகளைப் பேசலாம்.​ வழக்கத்துக்கு விரோதமாக இந்தப் பூங்காவில் சீனர்கள் குவிந்து விட்டனர்.​ அரசின் முடிவுக்கு எதிராகப் பெற்றோர்கள் குரலெழுப்பி தங்களது மொழிப்பற்றை வெளிப்படுத்தினார்கள்.​ இங்கே கூடிய சீனர்கள் வயதான கிழவர்கள் என்று நினைத்து விடாதீர்கள்.​ கோட்டும் சூட்டும் அணிந்த இளைஞர்கள்தான் பெருவாரியானவர்கள்.​ இவர்கள் அனைவருமே நன்றாக ஆங்கிலம் பேசுபவர்கள்.​ படித்தவர்கள்.
சீனர்கள் மட்டுமல்ல,​​ மலாயர்களும் சரி,​​ தங்களது தாய்மொழிக்குப் பாடத்திட்டத்தில் தரப்படும் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.​ இதைப்பற்றி அதிகமாகக் கவலைப்படாமல் இருந்தவர்கள் நமது இந்தியர்கள் மட்டுமே என்பதுதான் வருத்தமான ஒன்று.
சீனர்களைப் பொறுத்தவரை,​​ அவர்களுக்கு மொழி,​​ அதிலும் குறிப்பாகத் தாய்மொழிப் பற்று என்பது மிகவும் முக்கியமானது.​ தாய்மொழியில் எழுதவும்,​​ பேசவும் தெரியாத சீனர்கள் இருக்கவே மாட்டார்கள்.​ நாகரிகத்தின் அடையாளமாக,​​ சீனமொழியில் எழுதத் தெரிவது கருதப்படுகிறது.​ ஆங்கிலம் படிப்பதற்குத் தரப்படும் முக்கியத்துவம் சீன மொழியில் எழுதவும்,​​ பேசவும்,​​ படிக்கவும் தரப்படுகிறது.​ உலகம் முழுவதும் எங்கெல்லாம் சீனர்கள் வாழ்கிறார்களோ,​​ அங்கெல்லாம் சீனமொழியைக் கற்றுத்தரப் பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டு,​​ அதற்கு சீன அரசு மானியம் வழங்கி உதவுகிறது.
பலருக்கும் தெரியாத இன்னோர் உண்மை என்ன தெரியுமா?​ சீன அதிபர் ஹு ஜிண்டாவோவும்,​​ பிரதமர் வென் ஜியாபோவும் அமெரிக்கக் கல்வி கற்றவர்கள்.​ நன்றாக ஆங்கிலம் தெரிந்தவர்கள்.​ ஆனால் அவர்கள் பன்னாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொண்டு சீன மொழியில்தான் பேசுவார்களே தவிர ஆங்கிலத்தில் அல்ல.​ அவர்கள் மட்டுமல்ல,​​ ஜப்பான் பிரதமர்,​​ ஜெர்மானிய அதிபர்,​​ ரஷிய அதிபர்,​​ பிரெஞ்சு அதிபர் என்று ஆங்கிலம் தாய்மொழியல்லாத நாடுகளின் தலைவர்கள் பலர் அவரவர் மொழியில் மட்டுமேதான் கருத்துப் பரிமாற்றம் நடத்துகிறார்கள்.
சிங்கப்பூருக்கே வருவோம்.​ சீனர்களும் மலாயர்களும் ஆங்கிலத்துக்கு எதிரானவர்கள் அல்லர்.​ ஆங்கிலம் படிக்க வேண்டும்,​​ உலகத்தவருடன் போட்டி போட வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களுக்கு நிறையவே இருக்கிறது.​ அதேசமயம் தங்களது தாய்மொழி முக்கியத்துவம் இழந்துவிடக் கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.​ தங்கள் குழந்தைகள் தாய்மொழியுடன் ஆங்கிலமும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர,​​ தாய்மொழி தெரியாவிட்டாலும் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று விரும்புவதில்லை.​ கண்டிப்பாக வீட்டில் தாய்மொழியில் மட்டுமே பேசுவதை பழக்கப்படுத்துகிறார்கள்.
நம்மைப் போலவே இருமொழிக் கொள்கை உள்ள சிங்கப்பூரில்,​​ எட்டாம் வகுப்புவரை கட்டாயமாகத் தாய்மொழிப் பயிற்சி வேண்டும் என்று குரலெழுப்பியது பெற்றோர்கள்.​ இங்கே தமிழகத்தின் சிபிஎஸ்இயோ,​​ மெட்ரிகுலேஷனோ,​​ மாநிலக் கல்வி முறையோ தாய்மொழியில் கட்டாயப் புலமை வேண்டும் என்று குரலெழுப்புவது இருக்கட்டும்.​ குழந்தைகள் தமிழில் பேசுவதே கௌரவக் குறைவு,​​ அவமானம் என்று கருதும் பெற்றோர்கள் அல்லவா அதிகம்.
பேச்சு வழக்கு ஒழிந்து விட்டால்,​​ எழுத்துக்கு ஏது இடம்?​ எழுத்து இல்லாமல் எங்கே இலக்கியம்?​ இலக்கியமே இல்லை எனும்போது வாழ்வியலில் இலக்கியம் கேலிப்பொருளாகி விடுமே...​ நமது அன்னிய மோகம்,​​ சிங்கப்பூர் சீனர் மற்றும் மலாயர்களைப் பார்த்து மொழிஅடையாளத்தின் இன்றியமையாமையைக் கற்றுக் கொடுக்கக் கூடாதா?
தமிழைக் காப்பாற்ற சிங்கப்பூரை உதாரணம் காட்ட வேண்டி இருக்கிறது...​ ஹும்...

கருத்துகள் இல்லை: