புதன், 2 அக்டோபர், 2019

புத்தக வாசிப்பு இல்லாத ஒரே தலைவர் காந்தியார்?

Karthikeyan Fastura  : இந்திய பெருந்தலைவர்களில் புத்தக வாசிப்பு இல்லாத
ஒரே தலைவர் காந்தியார் என்பது என் கருத்து.
நேரு, அம்பேத்கார், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், மௌலானா ஆசாத், சுவாமி விவேகானந்தர், பாரதியார், பெரியார் என நான் படித்த பல தலைவர்கள் தேர்ந்த வாசிப்பு உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.
காந்திக்கு புத்தக வாசிப்பு இல்லாததன் விளைவு தான் அவரை சனாதன வாதிகளால் சுட்டுக்கொல்ல வைத்தது. எப்படி என்றால் அவர் நீண்ட வாசிப்பு உடையவராக இருந்திருந்தால் இந்து மத சனாதன தர்மம் ஒரு அதர்மம் என்று புரிந்திருப்பார். உலக நாடுகளின் வரலாற்றையும், அறிவியலையும் பொருத்தி பார்த்து தேச மக்களிடம் பேசியிருப்பார்.
இந்துத்துவ சிந்தனை கொண்ட காங்கிரஸ் காரர்களையும், இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்குள் சண்டை மூட்டிவிடும் சங்கிகளின் தந்திரத்தை புரிந்துகொண்டு இந்தியா பாகிஸ்தான் என்று பிரிய வேண்டிய சூழல் வரும்போது பிடிவாதம் பிடிக்காமல் சுமூகமாக பிரித்திருப்பார்.
சனாதனத்துடன் எப்போதும் பிற மதங்கள் சகிப்புத்தன்மையுடன் சமநீதியுடன் வாழ்வது கடினம் என்று அம்பேத்கார், ஜின்னா உள்ளிட்ட தலைவர்கள் பாகிஸ்தான் பிரித்துவிடுவது நல்லது என்று சொன்ன போதும் கேட்காமல் வீண் பிடிவாதம் பிடித்ததால் தான் வங்காளத்தில் மிகப்பெரிய மதக்கலவரம் தோன்றியது. தேவையில்லாமல் டென்சனை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்த்தார். 4000 பேர் கொல்லப்பட்டார்கள். பிறகு அவரே அதை நிறுத்தவும் உண்ணாவிரதம் இருந்தார். அதன் பிறகு தான் பாகிஸ்தான் பிரியவும் ஒப்புக்கொண்டார்.

ஒரு நல்ல தலைவர் என்பவர் சத்தியவானாக காட்டிக்கொண்டால் மட்டும் போதாது. அவர் நீண்ட வாசிப்பில் ஆர்வம் கொண்டவாராக சமூகம், பொருளாதாரம், வரலாறு, அறிவியல் பற்றிய உண்மைகளை அறிந்தவராக இருக்க வேண்டும். அவரால் தான் முன்னமே யூகித்து நுண்ணுணர்வுடன் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். அந்த வகையில் காந்தியின் புத்தக வாசிப்பு அதிகபட்சம் டால்ஸ்டாய் தாண்டி இல்லை. ( உண்மையாகவே படித்தாரா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு). அதுவும் கூட அக்கால கட்டத்தில் பரவலாக பேசப்பட்ட நாவலாசிரியர் என்பதால் இருக்குமோ என்று தான் தோன்றுகிறது. மற்றபடி அவர் எழுத்தில் உலக வரலாறு பற்றியோ, அறிவியல் பற்றியோ, உலகப் பொருளாதாரம் பற்றியோ எந்த கேள்வியோ, கருத்தோ, விவாதமோ இல்லை. இத்தனைக்கும் அந்த கால கட்டத்தில் தான் அவை பெரும் எழுச்சி கண்டு மனித வரலாற்றையே மாற்றிக்கொண்டிருந்தது. அதை அல்லவா தேடித் தேடி நுகர்ந்து அதற்கேற்றார் போல மக்களை வழிநடத்தியிருக்க வேண்டும்.
அவர் செய்ததெல்லாம் பஜனை தான். பின்ன எப்படி நல்ல தலைவராக இருந்திருப்பார்.

கருத்துகள் இல்லை: