செவ்வாய், 1 அக்டோபர், 2019

குஜராத் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பனோவுக்கு ரூ.50 லட்சம்: அரசுக்கு கெடு!

கொடுமையிலும் கொடுமையின் விலை ரூ.50 லட்சம்: அரசுக்கு கெடு!மின்னம்பலம் : குஜராத்தில் 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பனோவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டை இரு வாரங்களில் வழங்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று(செப்டம்பர் 30) உத்தரவிட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பெரும் வன்முறை ஏற்பட்டது. அப்போது அகமதாபாத்தில் உள்ள ரந்தீப்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பனோவையும், அவரது குடும்பத்தினரையும் ஒரு கும்பல் மிகக் கொடுமையாக தாக்கியது. அப்போது பில்கிஸ் பனோ 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு மூன்றரை வயதில் குழந்தை ஒன்றும் இருந்தது. பில்கிஸ் பனோவை அந்த கும்பல் தாக்கியது மட்டுமின்றி வன்கொடுமையும் செய்தது. அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை இரக்கமின்றி கொன்றது. இதில் பில்கிஸ் பனோவின் மூன்றரை வயதுக் குழந்தையின் தலையைப் பாறையில் மோதி கொலை செய்தது கொடூரத்தின் உச்சம். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 11 பேரைக் குஜராத் போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் குஜராத் விசாரணை நீதிமன்றம் சம்பவத்துக்குத் தொடர்புடைய அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனாலும் இந்த விவகாரத்தில் கடமை தவறியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 5 போலீஸார் மற்றும் 2 அரசு மருத்துவர்களை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது மூத்த நீதிபதியாக இருந்த, தற்போது தனது தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்து சிபிஐ விசாரணையில் சிக்கியுள்ள தஹில் ரமணி, 11பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்ததுடன், விடுவிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் போலீசாரை குற்றவாளி என அறிவித்தார்.
இதற்கிடையே தனக்கு இழப்பீடு கோரி பில்கிஸ் பனோ உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், பில்கிஸ் பனோவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் தற்போது வரை அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. மாறாக இழப்பீடு தொகை வழங்குவது குறித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி குஜராத் அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.போப்டே, எஸ்.ஏ. நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று (செப்டம்பர் 30) விசாரணைக்கு வந்தது. அப்போது குஜராத் அரசு சார்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ”பில்கிஸ் பனோவுக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதை ஏன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவில்லை” என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய துஷார் மேத்தா, இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளானவர்களுக்கு இழப்பீடு வழங்க ஏற்கனவே மாநில அரசிடம் ஒரு திட்டம் உள்ளது. எனவேதான் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்தோம் என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள் பில்கிஸ் பனோ 22 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது மட்டுமின்றி, தனது வயிற்றிலிருந்த சிசுவை இழந்துள்ளார். அவருடைய மூன்றரை வயது குழந்தையைத் தலையில் அடித்துக் கொன்றுள்ளனர். அவரது குடும்பத்தை இழந்து நாடோடி போல் தொண்டு நிறுவனத்தில் வாழ்ந்து வருகின்றார். அவருக்கு இழப்பீடாகப் பணம் கொடுப்பதால் அவருடைய வலிகள் எல்லாம் ஆறிவிடுமா என்பது தெரியவில்லை, எனினும் அவருக்கு இதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும் என்று குறிப்பிட்டனர்.
அவருக்கு இரு வாரங்களில் ரூ.50 லட்சம் இழப்பீடு, தங்குவதற்கு வீடு, வேலை ஆகியவை வழங்க வேண்டும் என்று குஜராத் அரசுக்குக் கெடு விதித்தனர்.

கருத்துகள் இல்லை: