புதன், 2 அக்டோபர், 2019

கிளப்புககளுக்கு வெளியிலிருந்து மதுபானத்தை கொண்டுசென்று அருந்தலாம்.. நீதிமன்ற தீர்ப்பு

கிளப்பில் மது: அரசு உத்தரவு நீக்கம்!மின்னம்பலம் : சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி அளித்த தீர்ப்பு தமிழ்நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட கிளப்புகளின் உறுப்பினர்களுக்கும், விருந்தினர்களுக்கும் மிகப்பெரும் உற்சாகத்தை தந்துள்ளது.
காரணம்... தமிழகத்தின் பதிவு செய்யப்பட்ட கிளப்புகளில், அதன் உறுப்பினர்கள், உறுப்பினர்களுடன் வரும் விருந்தினர்களும் வெளியிலிருந்து மதுபானங்களை கொண்டு வரக்கூடாது என்று 2010 ஆம் ஆண்டு போடப்பட்ட தடையை கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. அதனால், இனி கிளப்புகளின் உறுப்பினர்கள் வெளியிலிருந்து மதுபானத்தை தாராளமாக கிளப்புகளுக்கு கொண்டுசென்று அருந்தலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
சென்னை மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் 23- 3- 2010 அன்று வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையின் படி கிளப்புகளில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் அவர்களோடு விருந்தினராக செல்பவர்கள் வெளியிலிருந்து எவ்வித மது பானங்களையும் கிளப்புக்குள் கொண்டுவந்து அருந்தக்கூடாது என்று தமிழ்நாடு மதுபான உரிமம் சட்டம் 1981 பிரிவு 34 (2) இன் கீழ் தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை அடையாறு கிளப்பின் கௌரவ செயலாளர் தரப்பு உட்பட பல ரிட் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிஎம்.எஸ். ரமேஷ், கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி அளித்த தீர்ப்பில், ‘தமிழகம் முழுதும் உள்ள கிளப்புகளில் வெளியே இருந்து மதுபானம் எடுத்து வந்து குடிக்கத் தடை விதித்திருக்கும் ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார்.
அவர் அளித்திருக்கும் தீர்ப்பில், ‘மதுவிலக்கு ஆயத்துறை ஆணையர் குறிப்பிட்டிருக்கும் அந்தப் பிரிவானது கிளப்புகளுக்குள் வெளியில் இருந்து மது கொண்டுவருவது பற்றிய எதுவும் குறிப்பிடப்படவில்லை. மாறாக கிளப்பில் இருந்து வெளியே மதுபானங்களை எடுத்துச் செல்லும்போது சீல் அகற்றி எடுத்துச் செல்ல வேண்டும் என்றே குறிப்பிட்டிருக்கிறது. இந்த அடிப்படையிலேயே அந்த உத்தரவு செல்லாததாகிவிடுகிறது’ என்று சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இதன் மூலம் கடந்த சுமார் பத்து ஆண்டுகளாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுதும் செயல்பட்டு வரும் பதிவு பெற்ற கிளப்புகளில், வெளியில் இருந்து மது கொண்டுசெல்ல விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வந்துள்ளது

கருத்துகள் இல்லை: