புதன், 2 அக்டோபர், 2019

அதிமுகவை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் திமுக மனு.. ஜெயலலிதாவின் போலி கையெழுத்து

அதிமுகவை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் திமுக மனு!
மின்னம்பலம் : இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தில் இருக்கும் சின்னங்கள் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றின்படி அதிமுகவுக்கு வழங்கப்பட்டிருக்கும் அங்கீகாரத்தை திரும்பப் பெற்று அதிமுகவை தடை செய்யுமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் விரிவான மனு இன்று (அக்டோபர் 1) அளிக்கப்பட்டிருக்கிறது.
திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ.வான டாக்டர் சரவணன் சார்பில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான அருண், திமுக தலைவர் ஸ்டாலினின் அனுமதியோடு தலைமை தேர்தல் ஆணையத்திடம் இந்த மனுவை அளித்திருக்கிறார்.

இந்த விரிவான மனுவில், “ தேர்தல் சின்னங்கள் பதிவு மற்றும் ஒதுக்கீடு சட்டம் 1968 பிரிவு 16(A) 13(b) (c) (d), மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 29A(5) ஆகிய சட்டப் பிரிவுகளின் வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு வழங்கப்பட்டிருக்கிற மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தையும் திரும்பப் பெற வேண்டும்” என்று திமுக வலியுறுத்தியிருக்கிறது.
திருப்பரங்குன்றத்தில் 2016 இடைத்தேர்தலில் மறைந்த ஏ.கே. போஸ் வெற்றிபெற்றதை எதிர்த்து தன்னால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பையே இந்த மனுவின் அடிப்படை ஆதாரமாக கூறியிருக்கிறார் மனுதாரரான சரவணன்.
“17-1-16 அன்று இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர், புதுச்சேரியில் நெல்லித் தோப்பு ஆகிய தொகுதிகளுக்கு தேர்தலை நடத்துவதற்கு அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி 19-11 -2016 அன்று தேர்தல் நடந்தது. 2016 செப்டம்பர் 22 ஆம் தேதி அன்றைய தமிழக முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்களின் ஏ, பி படிவங்களில் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தலைமை நிர்வாகி கையெழுத்திடவேண்டும் என்ற நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அப்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை தேர்தல் அலுவலருக்கு 24-10-16 அன்று ஒரு கடிதம் எழுதுகிறார். வேட்பாளரின் ஏ.,பி படிவத்தில் கட்சித் தலைவரின் கையெழுத்துக்கு பதில் கைரேகை பெறலாமா என்று தெளிவு வேண்டி அவர் அந்தக் கடிதத்தை எழுதுகிறார்.
அதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் எழுதிய பதிலில், ‘ஏ,பி படிவங்களில் கையெழுத்துக்கு பதில் கட்டை விரல் ரேகையைப் பெறலாம், அப்படிப் பெறப்படும்போது சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அலுவலர் அல்லது உதவித் தேர்தல் அலுவலர் முன்னிலையில் பெறப்பட வேண்டும். அவர்கள் சான்றொப்பம் இட வேண்டும். பின் அது தமிழக தலைமை தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று முதன்மைச் செயலாளர் வழிகாட்டுதல்களை அளிக்கிறார்.
ஆனால் இந்த வழிகாட்டுதல்களைப் பற்றிக் கவலைப்படாமல் அதிமுக சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலருக்கு 26-10-16 அன்று எழுதப்பட்ட கடிதத்தில், ‘கட்சியின் பொதுச் செயலாளர் சிகிச்சை பெறும் அப்பலோ டூட்டி டாக்டர் முன்னிலையில் ஏ,பி படிவங்களில் அவரது கட்டை விரல் கைரேகை பெற அனுமதிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்தக் கடிதத்தை தமிழக தலைமை தேர்தல் அலுவலர் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்புகிறார். இதையடுத்து தான் முன் அனுப்பிய வழிகாட்டுதல்களுக்கு மாறாக இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம், ‘எந்த ஒரு அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் முன்னிலையில் ஜெயலலிதாவிடம் கட்டை விரல் ரேகை பெறலாம்’ என்று புதியதொரு வழிகாட்டுதலைப் பிறப்பித்தது.
இந்த ஆணை உடனடியாக தமிழக தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பப்பட்டு, அவர் வழியாக சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது.

இதன் மூலம் அதிமுக என்ற கட்சியும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரும் அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தையும், வாக்காளர்களாகிய பொதுமக்களையும் ஏமாற்றியிருக்கிறார்கள்.
திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸின் வேட்பு மனுவில் உள்ள ஏ.பி ஃபார்மில் வைக்கப்பட்ட கை ரேகை அப்போதைய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடையது அல்ல என்று தொடுக்கப்பட்ட தேர்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 22-3-19 அன்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின் 74-80 பத்திகளில் ஜெயலலிதாவின் கைரேகையின் நம்பகத் தன்மையைத் திட்டவட்டமாக உயர்நீதிமன்றம் தெரிவிக்கிறது.
“குறிப்பிட்ட அந்தத் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களின் ஏ,பி படிவங்களில் ஜெயலலிதா கட்டை விரல் ரேகை வைக்கும் நிலையில் இல்லை. மேலும் மருத்துவ அதிகாரியின் முன்னிலையிலும் அந்த படிவங்களில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்படவில்லை. அதற்குப் பிறகுதான் மருத்துவ அதிகாரியால் சான்றொப்பம் இடப்பட்டது என்பதால் அந்த படிவங்கள் செல்லாது என்றே கருதப்படும்” என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனவே தமிழக தலைமை தேர்தல் அலுவலரும் அதிமுக என்ற கட்சியும் சேர்ந்து முதன்மை தேர்தல் அதிகாரியையும், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தையும் ஏமாற்றி மோசடி செய்திருக்கிறார்கள்.
இந்த மோசடிச் செயலின் ஒரே பயனாளராக அதிமுக அரசியல் கட்சி உள்ளது. இந்த செயல்பாடுகளால் நியாயமற்ற முறையில் தேர்தல் நடத்தப்பட்டிருப்பதோடு பெரும் செலவினங்களையும் இழப்புகளையும் ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. இது தேர்தல் செயல்முறையின் தூய்மை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது. மேலும், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும் குறைக்கிறது. அதிமுக கட்சியின் செயல், 1968 ஆம் ஆண்டு சின்னங்கள் சட்டத்துக்கு எதிரானது.
போலியான தேர்தல் ஆவணங்களை உருவாக்கி நான்கு தொகுதி வாக்காளர்களையும் இந்திய தேர்தல் ஆணையத்தையும் ஏமாற்றிய முதல் அரசியல் கட்சி அதிமுகதான். இதன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளையும் அக்கட்சி மீறிவிட்டது. இந்த அடிப்படையில் மட்டும், ஒரு மாநில அரசியல் கட்சி என்ற அவர்களின் அங்கீகாரம் திரும்பப் பெறப்பட வேண்டும் “ என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: