சனி, 5 அக்டோபர், 2019

BBC உடலுறவுக்கான திருமணம் ..பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் இராக் மதகுருமார்கள்..வீடியோ


`உடல் சுகத்துக்கான திருமணங்களுக்கு'' எளிதில் இலக்காகும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் இராக்கிய மதகுருமார்கள் பற்றி பிபிசியின் பிரத்தியேகமான புலனாய்வு கண்டறிந்துள்ளது 
இராக்கில் உள்ள மதகுருமார்கள், உடல் சுகத்துக்காக இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் தரகு வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை, ஷியா பிரிவினரிடம் நடைமுறையில் உள்ள ``உடல் சுகத்துக்கான தற்காலிக திருமணம்'' என்ற வழக்கம் குறித்து பிபிசி அரபிக் செய்தி புலனாய்வுப் பிரிவு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இராக்கில் மிகவும் முக்கியமான வழிபாட்டுத் தலங்களின் அருகில் மதகுருமார்களால் நடத்தப்படும் திருமண அலுவலகங்களில், தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் இந்தக் குழுவினர் விசாரித்ததில், ``உடல் சுகத்துக்கான திருமணங்களுக்கு'' மிகவும் குறுகிய காலங்களுக்கு ஏற்பாடு செய்ய பெரும்பாலான மதகுருமார்கள் தயாராக இருந்தது தெரிய வந்தது. சில நேரங்களில் அது ஒரு மணி நேர உறவாக, உடலுறவு அளிப்பதற்கான அவகாசமாகவும் இருந்தது தெரிய வந்தது. ஒன்பது வயது மட்டுமே ஆன சிறுமிகளையும் கூட இந்த, குறித்த காலம் வரையிலான திருமணங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கும் சிலர் தயாராக இருந்தனர்.

உடல் சுகத்துக்கான திருமணங்களுக்குப் பெண்களையும், வயது குறைந்த சிறுமிகளையும் மணமகள்களாக ஏற்பாடு செய்ய அவர்கள் முன்வந்தனர்.
மதகுருமார்கள் பாலியல் தரகு வேலை பார்ப்பதும், குழந்தைகளை பாலியல் அத்துமீறலுக்கு ஆளாக்குவதற்கு மத ரீதியிலான ஆசி வழங்குவதும் ஆவணப்படத்தில் தெரிய வருகிறது.

உடல் சுகத்துக்கான திருமணம் ! உடல் சுகத்துக்கான திருமணம் - நிக்கா முட்டாஹ் - என்பது ஷியா முஸ்லிம்களிடம் வழக்கத்தில் உள்ள சர்ச்சைக்குரிய மத நடைமுறையாக உள்ளது. இந்தத் தற்காலிக திருமணத்துக்கு பெண்களுக்குப் பணம் தரப்படுகிறது. சன்னி பிரிவினர் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் `மிஸ்யாஹ்' என்ற திருமணம் இதேபோன்ற செயல்பாட்டைப் பூர்த்தி செய்கிறது.
பயணத்தின் போது மனைவி ஒருவரை உடன் அழைத்துச் செல்வதாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது குறிப்பிட்ட காலத்துக்கு ஓர் ஆணும், ஒரு பெண்ணும் பாலியல் உறவு வைத்துக் கொள்ள அனுமதிப்பதாக இது மாறியுள்ளது. இந்த நடைமுறை முஸ்லிம் அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துகளை உருவாக்கியுள்ளது. விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக ஆக்குவதாக இது உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். ஒரு திருமணம் என்பது எவ்வளவு குறுகிய காலத்துக்கானதாக இருக்கலாம் என்பது பற்றி விவாதமும் நடைபெறுகிறது.

பிபிசியின் இராக் மற்றும் பிரிட்டிஷ் குழுக்கள் 11 மாத காலம் புலனாய்வு செய்து, மதகுருமார்களின் திரைமறைவு செயல்பாடுகள் பற்றி வீடியோக்கள் எடுத்துள்ளன. பாலியல் ரீதியில் சுரண்டலுக்கு ஆளாக்கப்படும் பெண்களுடனும், `உடல் சுகத்துக்கான மணமக்களை' ஏற்பாடு செய்து தரும் மத குருமார்களுக்குப் பணம் கொடுத்த ஆண்களிடமும் இந்தக் குழுக்கள் கருத்துகளை கேட்டறிந்தது.

15 ஆண்டு கால போருக்குப் பிறகு, இராக்கில் ஒரு மில்லியன் பெண்கள் விதவைகளாகிவிட்டனர் என்றும், மேலும் பலர் குடிபெயர்ந்துள்ளனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. வறுமை காரணமாக, உடல் சுகத்துக்கான திருமண ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பல பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஏற்பட்டிருப்பதாக பிபிசி குழு கண்டறிந்துள்ளது.

பரவலாகக் காணப்படுகிறது

இராக்கில் மிகவும் புனிதமான இரண்டு வழிபாட்டுத் தல பகுதிகளில், உடல் சுகத்துக்கான திருமண ஏற்பாடுகள் நடப்பதற்கான ஆதாரங்களை, ஆவணப்படக் குழு கண்டறிந்துள்ளது.
உதாரணமாக, பாக்தாத் காடிமியாவில் 10 மதகுருமார்களை அவர்கள் அணுகினர். ஷியா முஸ்லிம்களின் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அவர்களில் எட்டு பேர் உடல்சுகத்துக்கான திருமண ஏற்பாடு செய்வதாக முன்வந்தனர்; 12 அல்லது 13 வயது சிறுமியுடன் உடல் சுகத்துக்கான திருமண ஏற்பாடு செய்வதாகப் பாதி பேர் கூறினர்.
உலகில் ஷியா முஸ்லிம்களின் மிகப் பெரிய புனித யாத்திரை தலமான கர்பாலாவில் நான்கு மதகுருமார்களை இந்தக் குழு அணுகியது. இளம் சிறுமிகளுடன் உடல் சுகத்துக்கான திருமணம் செய்து வைக்க இரண்டு பேர் ஒப்புக்கொண்டனர்.

நான்கு மதகுருமார்களை ரகசியமாக படம் பிடித்தனர். பெண்களை ஏற்பாடு செய்வதாக மூன்று பேர் கூறினர். நான்கில் இரண்டு பேர், இளம் சிறுமிகளை ஏற்பாடு செய்வதாகக் கூறினர்.
பாக்தாத் நகரைச் சேர்ந்த சய்யித் ராட் என்ற மதகுரு, பிபிசியின் திரைமறைவுக் குழு நிருபரிடம் பேசியபோது, உடல் சுகத்துக்கான திருமணத்துக்குக் கால வரம்பு எதையும் ஷரியத் சட்டம் நிர்ணயிக்கவில்லை என்று கூறினார். ``ஓர் ஆண் தனக்கு விருப்பமான எண்ணிக்கையில் திருமணம் செய்து கொள்ளலாம். ஒரு சிறுமியை அரை மணி நேரத்துக்கு நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். அது முடிந்ததும் வேறொருவரைத் திருமணம் செய்து கொள்ளலாம்'' என்று அவர் தெரிவித்தார்.
;சிறுமியருடன் உடல் சுகத்துக்கான திருமணம் செய்து கொள்வது சரிதானா என்று சய்யித் ராட்டிடம் புலனாய்வு நிருபர் கேட்டதற்கு, ``தன்னுடைய கன்னித்தன்மையை சிறுமி இழப்பதில்லை என்பதில் கவனமாக இருக்க வேண்டும்'' என்று அவர் பதிலளித்தார்.
``உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகளை அந்தச் சிறுமியுடன் செய்யலாம், உடலை, மார்பகங்களைத் தொடலாம். பிறப்புறுப்பு வழியாக நீங்கள் பாலுறவு கொள்ள முடியாது. ஆனால் ஆசனவாய் வழியாக செய்யலாம்'' என்று அவர் கூறினார். ``சிறுமிக்கு காயம் ஏற்பட்டால் என்னவாகும்'' என்று கேட்டதற்கு, ``அது உங்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையிலான விஷயம். அவளால் வலியைத் தாங்க முடியுமா, முடியாதா என்பதைப் பொருத்த விஷயம்'' என்று சாதாரணமாக பதிலளித்தார்.
முட்டாஹ்-வுக்கு 12 வயது சிறுமியை ஏற்பாடு செய்வது சரிதானா என்று கர்பாலாவில் மதகுரு ஷேக் சலாவி என்பவரிடம் புலனாய்வு நிருபர் கேட்டார். ``ஆம், ஒன்பது வயதைத் தாண்டியவர்களுக்கு - பிரச்சினை எதுவும் இல்லை. ஷரியா படி எந்தப் பிரச்சினையும் இல்லை'' என்று அவர் கூறினார்.
அந்தச் சிறுமி கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா என்பது தான் முக்கியம் என்று சய்யித் ராட் போல இவரும் கூறினார். உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகளும், மைனர் பெண் ஒப்புக்கொண்டால் ஆசனவாய் வழியான உறவும் அனுமதிக்கப்பட்டது என்று கூறிய அவர், ``உங்கள் விருப்பத்தின்படி செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டார். / <

கருத்துகள் இல்லை: