செவ்வாய், 1 அக்டோபர், 2019

பேராசிரியை கடத்திய அதிமுகவின் வணக்கம் சோமு.. மலைக்கோட்டை பகுதி பொருளாளர்

தினகரன் :சென்னை: திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வணக்கம் சோமு அதிமுக கட்சியில் இருந்து நீக்கி ஓ.பி.எஸ்., ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். அதிமுகவிற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால் அதிமுக தலைமை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஓ.பி.எஸ்., ஈபிஎஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டை எஸ்.ஆர்.சி. ரோட்டை சேர்ந்தவர் சோமசுந்தரம் (எ) வணக்கம் சோமு (40), திருமணமாகி மகள், மகன் உள்ளனர். தற்போது  மனைவியை பிரிந்து மகள், மகனுடன் வசித்து வருகிறார்.
இவர் திருச்சி அமராவதி கூட்டுறவு வங்கி இயக்குநராகவும், மலைக்கோட்டை பகுதி  அதிமுக பொருளாளராகவும் உள்ளார்.
மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண், திருச்சியில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணமாகாதவர். இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், சோமு அடிக்கடி அவரை பார்த்துள்ளார். பேராசிரியையை பார்க்கும்போது அவரை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சோமுவுக்கு ஆசை வந்துள்ளது. இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்.


ஆனால், உறவினர்கள் அவருக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் சோமு அவரை ஒருதலையாக காதலித்து வந்தார். அவ்வப்போது பேராசிரியை கல்லூரிக்கு நடந்து செல்லும்போது, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு பேராசிரியை தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு  ஆம்புலன்ஸ் அவர் முன் நின்றது. அதில் இருந்து 4 பேர் கீழே இறங்கினர்.

அவர்கள் பேராசிரியையின் வாயை பொத்தி ஆம்புலன்சுக்குள் இழுத்து போட்டனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் பறந்தது. இந்த காட்சியை அவ்வழியே சென்ற பொதுமக்கள், சினிமா போல சம்பவம் நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சிலர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆம்புலன்சை விரட்டி சென்றனர். போலீசார் வருவதை கண்ட அந்த கும்பல், திருச்சி மாவட்ட எல்லையான துவரங்குறிச்சியில்  பேராசிரியையை இறக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

கடத்தி சென்ற வேனில் சோமு உள்பட 6 பேர் இருந்ததாகவும் , சோமுவின் குலதெய்வ கோயிலுக்கு கொண்டு  சென்று கட்டாய தாலி கட்ட ஏற்பாடு செய்திருந்ததாகவும் பேராசிரியை போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சோமு உள்பட 6 பேரை தேடி வருகிறார்கள். இதனிடையே கட்சிக்கு அவப்பெயரும் களங்கம் ஏற்படுத்தியதாக கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து வணக்கம் சோமுவை நீக்கி ஓ.பி.எஸ்., ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: