ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

தி.மு.க., - கம்யூ., கூட்டணி, எந்த நேரத்திலும் முறியலாம் என தினமலர் நாளிதழ் எதிர் பார்க்கிறது.

 தினமலர் :  தேர்தல் செலவுக்கு பணம் வாங்கியதை, தி.மு.க., காட்டிக் கொடுத்ததால், கம்யூனிஸ்ட்கட்சிகள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன. இந்த விவகாரத்தால், தி.மு.க., - கம்யூ., கூட்டணி, எந்த நேரத்திலும் முறியலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஆலோசனையில்,கம்யூனிஸ்ட் கட்சிகளின், தேசிய தலைமை ஈடுபட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.லோக்சபா தேர்தல் முடிந்த பின், அனைத்து கட்சிகளும், தேர்தல் செலவு கணக்கை, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தன. அந்த வகையில், தி.மு.க., சார்பிலும், தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது.அதன்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது, தி.மு.க.,விடம், 148.50 கோடி ரூபாய் இருப்பு இருந்தது. நன்கொடையாக, 50.30 லட்சம் ரூபாய் பெறப்பட்டது. அதிலிருந்து, 79.26 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு, தலா, 15 கோடி ரூபாய்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 10 கோடி ரூபாய், நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது என, தி.மு.க., தலைமை தெரிவித்துள்ளது.தேர்தலில், அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதும், கோடிக்கணக்கில் செலவிடுவதும் வழக்கமானது. அதேபோல், பெரிய கட்சிகள், தங்களுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு, தேர்தல் செலவுக்காக, பெரும் தொகையை வழங்கும்.


சில கட்சிகள், கூட்டணி பேச்சின் போதே, 'சீட்' பெறுவதோடு, எவ்வளவு தொகை என, கேட்டு பெறுவது உண்டு.ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள், இதுவரை, கூட்டணி சேர பணம் பெறுவது இல்லை என, கூறி வந்தன. அது, தவறானது என்பதை, தி.மு.க., தாக்கல் செய்துள்ள, வரவு - செலவு கணக்கு வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.மேலும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், தலா, இரண்டு இடங்களில் மட்டுமே போட்டியிட்டன. அதிலும், ஒரு கட்சி, 15 கோடி ரூபாயும், மற்றொரு கட்சி, 10 கோடி ரூபாயும் பெற்றுள்ளன.

அ.தி.மு.க.,வும், கூட்டணி கட்சிகளுக்கு, பெரும் தொகை வழங்கியதாக, புகார் எழுந்தது. ஆனால், அக்கட்சி தாக்கல் செய்துள்ள கணக்கில், எதையும் சொல்லவில்லை.தி.மு.க., வெளிப்படையாக தெரிவித்தது, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளதால், கூட்டணியை முறிப்பது குறித்து, அக்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.

இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் போது, எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில், அவர்கள் கட்சியினரின் தேர்தல் செலவுக்கான பணம், எங்களிடம் தரப்படுவது வழக்கம். அந்த பணத்தை, அவர்கள் கட்சியினரிடமே வழங்கும்படி கூறினால், இரு கட்சிகளின் தலைமையும் ஏற்பதில்லை. 'எங்கள் கட்சிக்காரர்கள் செலவழிக்காமல், அமுக்கி விடுவர்' என, காரணம் கூறுவது வழக்கம்

அதேபோல், அக்கட்சிகள் வழங்கும் பணத்தை, எங்கள் கட்சி தவிர்த்து, கூட்டணி கட்சியினருக்கு, அனைவர் முன்னிலையிலும், பிரித்து வழங்கி விடுவோம். இதுவரை, தி.மு.க.,வில், நேரடியாக பணம் தந்து வந்தனர். இம்முறை, 'ஆன்லைன்' வழியே பணத்தை வழங்கினர்; அப்படி செய்திருக்க கூடாது.நாங்கள், அந்த பணத்தை, தி.மு.க., மாவட்ட செயலர்களிடம் வழங்கும்படி கூறினோம். அதையும் ஏற்க மறுத்து, எங்களிடம் திணித்து விட்டனர்.

நாங்கள், தி.மு.க., மாவட்ட செயலர்கள் உதவியுடன், அவர்கள் கட்சியினர் செலவுக்கு தான், அந்த பணத்தை வழங்கினோம். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, தேர்தல் நன்கொடை அளித்ததாக, தேர்தல் ஆணையத்திடம், தி.மு.க., கணக்கு காட்டி விட்டது. இது, எங்கள் மீது களங்கத்தை ஏற்படுத்தி விட்டது. அதனால், மக்களிடம், நீண்ட விளக்கம் சொல்ல வேண்டிய நெருக்கடியும், ஏற்பட்டு விட்டது. கூட்டணி உறவில், இது, உரசலை ஏற்படுத்தி இருப்பது உண்மை. எங்களின் தேசிய தலைமை, விரைவில் முடிவெடுக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: