புதன், 13 டிசம்பர், 2017

ஸ்டீராய்டு' மருந்துகளால் ஜெ., உடல்நலம் பாதிப்பு ஜெ.,க்கு சிகிச்சை அளித்த டாக்டர் தகவல்

தினமலர் :சென்னை : ''நான் சிகிச்சை அளித்த போது, ஜெ., நன்கு குணமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, என்னை அழைக்கவில்லை. 'ஸ்டீராய்டு' மருந்து அதிகளவில் எடுத்த காரணத்தால், ஜெ., உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது,'' என, ஜெ.,க்கு, 'அக்குபங்சர்' சிகிச்சை அளித்த டாக்டர், சங்கர் தெரிவித்தார்.>ஜெ., மரணம் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. நேற்று ஜெ.,க்கு, அக்குபங்சர் சிகிச்சை அளித்த, சென்னையை சேர்ந்த, டாக்டர் சங்கர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
விசாரணை முடிந்த பின், அவர் கூறியதாவது:சிறையிலிருந்து ஜெ., வெளியில் வந்த பின், நடக்க முடியாமல் இருந்தார். அவருக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்னை போன்றவை இருந்தது. அப்போது, டாக்டர் சிவக்குமார், என்னை, போயஸ் கார்டனுக்கு அழைத்து சென்றார்.


'மருந்தில்லா மருத்துவம்' என்ற அடிப்படையில், அக்குபங்சர் முறையில், ஜெ.,க்கு சிகிச்சை அளித்தேன். அவர், நன்கு குணமடைந்தார். ஆர்.கே.நகர் தேர்தலில், வேகமாக நடக்க துவங்கினார்; என்னை வெகுவாக பாராட்டினார். அப்போது, பிரசவ லேகியத்தின் மகத்துவம் குறித்து, அவரிடம் எடுத்துரைத்தேன். இதையடுத்து, அதை மருத்துவ பெட்டகத்தில் சேர்க்க உத்தரவிட்டார்.
விசாரணை கமிஷன் நீதிபதி, ஜெ.,க்கு அளித்த சிகிச்சை முறை குறித்த விபரங்களை கேட்டார்; அதை தெரிவித்தேன். ஜெ.,க்கு அதிக அளவில், ஸ்டீராய்டு மருந்து கொடுத்ததால், உடல் நலம் அதிகம் பாதிக்கப்பட்டது என்ற, விபரத்தையும் கூறினேன்.

நான் சிகிச்சை அளித்த போது, நன்றாக நடக்க துவங்கிய ஜெ., 2016 செப்., 21ல் நடந்த, மெட்ரோ ரயில் துவக்க நிகழ்ச்சியில், நிற்க முடியாமல் சிரமப்பட்டார். இது குறித்து, ஜெ.,வுடன் இருந்தவர்களை கேட்டபோது, பதில் எதுவும் கூறாமல் மழுப்பி விட்டனர்.

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்ட பின், என்னை அழைக்கவில்லை. நான் டாக்டர் சிவக்குமாரை தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. ஜெ.,க்கு சிகிச்சை அளித்தபோது, அவர்கள் காரில் அழைத்து சென்று, அதே காரில், மீண்டும் அழைத்து வந்து விடுவர்.

ஜெ.,க்கு சிகிச்சை அளித்த போது, சசிகலா,டாக்டர் சிவக்குமார் ஆகியோர் மட்டும் உடனிருந்தனர். அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்ட பின், 'உங்களை ஏன் அழைக்கவில்லை' என, நீதிபதி கேட்டார். இது குறித்து, அவர்களிடம் கேளுங்கள் என, தெரிவித்தேன்.இவ்வாறு சங்கர் கூறினார்.

கருத்துகள் இல்லை: