ஞாயிறு, 10 டிசம்பர், 2017

ஜெயலலிதாவின் வாழ்க்கை அவரது திரைப்படங்களை விட கதையம்சம் நிறைந்தது ... கொஞ்சம் உண்மை கொஞ்சம் பொய் !

நக்கீரன் :அம்ருதா திடீரென உரிமை கொண்டாடினாலும் அவர் ஜெ.வுக்குப் பிறக்கவில்லை என்பதை கடந்த இதழில், அவரது குடும்பப் பின்னணியையும் பிறப்புச் சான்றிதழையும் முன்வைத்து விரிவாக எழுதியிருந்தது நக்கீரன். அப்படியென்றால், ஜெ.வுக்கு மகள் என வேறு யாரேனும் இருக்கிறார்களா என்னும் கேள்விக்கு 1990-ஆம் ஆண்டே நக்கீரன் வெளியிட்ட கவர் ஸ்டோரியும், ஷோபனா வேதவள்ளி என்கிற அந்தப் பெண் குறித்து ஜெ. எந்த விளக்கமும் தராமல், நக்கீரன் மீது வழக்கும் போடாமல் இருந்ததும் கவனத்திற்குரியது.
சோபன்பாபு-ஜெ. இடையிலான "கோயிங் ஸ்டெடி' வாழ்க்கையில் பிறந்த மகளைப் பற்றி நக்கீரனில் வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் விரிவான பல தகவல்களைத் தந்துள்ளார். அதிலிருந்து...
;1973-ல் "டாக்டர் பாபு' என்கிற படத்தில் சோபன்பாபுவோடு ஜெயலலிதா சேர்ந்து நடித்த  போதுதான், அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. சோபன்பாபுவிற்கு ஹைதராபாத், விசாகப்பட்டினம், ராஜமுந்திரி போன்ற இடங்களில் கோடிக்கணக்கில் சொத்துகள்  இருந்ததாக ஜெயலலிதா அறியவந்தார். சோபன்பாபுவுடன் பழகத் தொடங்கிய உடனேயே எப்படியாவது அவரைத் திருமணம் பண்ணிக் கொள்ள நினைத்தார். ஆனால் தமது மனைவியை அளவுக்கதிகமாக நேசித்த சோபன்பாபு ஜெ.வைத் திருமணம் செய்யத் தயாராக இல்லை. பொறுமையோடு காத்திருந்த ஜெயலலிதா, சோபன்பாபுவால் ஒரு குழந்தைக்குத் தாயாகிற சூழ்நிலை வந்தது.
<இவற்றையெல்லாம் எட்ட இருந்து பார்த்த எம்.ஜி.ஆர். எடுத்துச் சொன்னால் கேட்காத இந்தப் பெண்பிறவி, பட்டு அனுபவித்தாவது பாடம் படித்துக் கொள்ளட்டும் என்றுதான் மௌனமாக இருந்தார். சோபன்பாபுவை மிரட்டுவதற்கு விருப்பப்படாத எம்.ஜி.ஆர்., "சொத்துகளை ஜெயலலிதாவிடம் கொடுத்து விடாதே' என்று அவ்வப்போது எச்சரித்து வந்தார்..... 
 
1974-வது ஆண்டு தெலுங்கில் சிறந்த நடிகருக்கான பிலிம்ஃபேர் பரிசை சோபன்பாபு பெற்றார். சோபன்பாபு பம்பாய்க்குப் பறந்தபோது ஜெயலலிதாவும் உடன்சென்றார். ஒரே ஹோட்டலில் ஒரே சூட்டில் இருவரும் தங்கியிருந்தார்கள். விழாவில் இருவரும் கணவனும்-மனைவியும் போலவே தங்களைக் காட்டிக்கொண்டார்கள். ஜெயலலிதாவிற்கும், சோபன்பாபுவிற்கும் இந்த இறுக்கமான உறவு நீடித்த ஏழு ஆண்டுகாலத்தில் சோபன்பாபு, படப்பிடிப்பு எங்கே நடந்தாலும் நண்பகல் 1 மணியிலிருந்து 3 மணிக்குள் மதிய உணவிற்கு ஜெயலலிதாவிடம் வந்துவிடுவார். பிறகு ஓய்வு கொள்வார். இந்த இல்லற வாழ்க்கையின் விளைவாக ஜெயலலிதா கர்ப்பமானார். சோபன்பாபு கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்லிப் போராடினார். அதன் விளைவாக ஜெயலலிதாவிற்கும் சோபன்பாபுவிற்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

தனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்கிற விவகாரத்தை முடிந்தவரை ஜெயலலிதா மறைத்தார்.  

 

ஜெயலலிதாவின் கர்ப்பம் உறுதியாக்கப்பட்டதிலிருந்து பத்து மாதங்கள் ஜெயலலிதா தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். சென்னையில் கே.ஜே. மருத்துவமனையில் ஜே.லலிதா என்கிற பெயரில் தங்கினார். பெண் குழந்தை ஒன்று பிறந்தது.  ஆரம்பத்தில் எம்.ஜி.ஆரும் இதை அறியாமல்தான் இருந்தார். ஜெயலலிதாவிற்கு ஒரு பெண் குழந்தை இருப்பது பற்றிய தகவல்கள் எம்.ஜி.ஆரைக் கொஞ்சம் கொஞ்சமாக எட்டியது. ஜெயலலிதாவிற்கு பிரசவம் பார்த்த டாக்டரையே அழைத்துக் கேட்டுவிட்டார். 

எந்தப் பெயரில் பிரசவத்திற்காக ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தார். எப்போது பிரசவம் ஆனது. குழந்தையின் நட்சத்திரம், அது இப்போது எங்கே இருக்கிறது போன்ற எல்லா விவரங்களையும் எம்.ஜி.ஆர். சேகரித்தார்.ஜெயலலிதாவின் குழந்தை தொடக்க காலத்தில் சோபன்பாபுவின் ஒன்றுவிட்ட சித்தி ஒருவரின் கவனிப்பில் இருந்தது. ஹைதராபாத்தில்தான் படித்தது என்றாலும் சோபன்பாபுவோடு, தான் பெற்றுக் கொண்ட குழந்தையை சோபன்பாபுவின் குழந்தை என்றோ, தனது குழந்தை என்றோ ஜெயலலிதா சொல்லிக்கொண்டதில்லை.

இதே காலகட்டத்தில் "குமுதம்' வார இதழில் ஜெயலலிதா எழுதிய தொடர் கட்டுரையில் "சோபன்பாபுவோடு அழுத்தமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன்' என்று எழுதினார். இந்தக் கட்டுரைத் தொடர் வந்துகொண்டிருந்தபொழுது எம்.ஜி.ஆருக்கு வேண்டிய ஒரு பத்திரிகையாளர் அவரை அணுகி "ஜெயலலிதா அடுத்து உங்களைப் பற்றித்தான் எழுதப்போகிறார்' என்று அவரிடத்தில் எச்சரித்தார். 

 

வானொலியில் வேலை செய்கிற ஜெயலலிதாவின் தோழி ஒருவரைப் பயன்படுத்தி ஜெயலலிதா அப்படி என்னதான் எழுதிவிடப்போகிறார் என்பதை அறிய அவர் முயற்சித்தார். அப்போது "மாடி வீட்டு ஏழை' என்ற படத்திற்காக சிரிப்பு நடிகர் சந்திரபாபு கொடுத்த பணத்தை எம்.ஜி.ஆர். திருப்பித் தரவில்லை என்றும், அதன் காரணமாகவே சந்திரபாபுவின் வீடு ஏலத்தில் போனது என்றும், கோயம்புத்தூரில் ஆடைகள் தைப்பவராக இருந்த ஒருவர் எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுத்து திவாலாகிவிட்டார் என்றும், கவியரசர் கண்ணதாசனின் "ஒரு பெண்ணின் கதை' என்கிற திரைக்கதைக்காக தருவதாக வாக்குக் கொடுத்த மூன்றில் இரண்டு பங்கு பணத்தை எம்.ஜி.ஆர். கண்ணதாசனுக்கு  தரவில்லை என்றும் பலதரப்பட்ட விவரங்களைப் பற்றி ஜெயலலிதா எழுதப்போகிறார் என்பதை எம்.ஜி.ஆர். அறிந்து கொண்டார்.

 

இவைகளுக்கெல்லாம் ஆதாரமாக, "எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும்' என்று கவியரசர் கண்ணதாசன் எழுதி 1974 மே மாதம் வெளிவந்த புத்தகத்தை ஜெயலலிதா கூடவே வைத்திருக்கிறார் என்று அந்தத் தோழி எம்.ஜி.ஆரிடம் சொன்னார். அதன்பிறகுதான் இருவருக்கும் மீண்டும் சமாதானம் ஏற்பட்டது. அ.தி.மு.க.வில் சேர்ந்தார் ஜெ. அவரை எம்.ஜி.ஆர். ராஜ்யசபா எம்.பி.யாக்கினார். எம்.ஜி.ஆருக்குத் தெரியாமல் சோபன்பாபு வீட்டுத் திருமணத்தில் ஜெ. கலந்துகொண்டார். இது எம்.ஜி.ஆரை அதிர வைத்தது. திட்டம் தீட்டுவதில் கிருஷ்ணபகவானுக்கே பாடம் நடத்துகிற பக்குவம் உள்ளவரல்லவா எம்.ஜி.ஆர். "உன் பெண் குழந்தையை நான் தத்து எடுக்கப்போகிறேன், அதற்கு நீ சம்மதிக்க வேண்டும்' என்று எம்.ஜி.ஆர். ஒரு போடு போட்டார். ஜெயலலிதா ஒரு நிபந்தனை விதித்தார்.& 

 

எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாளின் உறவுக்காரப் பெண்களையும், அப்பு என்கிற வளர்ப்பு மகனையும் தத்து எடுத்திருந்தார். "அவர்களெல்லாம் எனது மகளுக்கு எதிராக வந்துவிடுவார்கள்' என்றார் ஜெ. ஜானகி அம்மாளின் உறவுக்காரர்களை எம்.ஜி.ஆர். தத்து எடுத்தபோது சட்டப்படி எழுத்து மூலமாக தத்து எடுக்கவில்லை. பிறகு தனது குழந்தையை மாத்திரம் சட்டப்படி எழுத்தின் மூலமாக தத்து எடுத்தால் அவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று தட்டிக் கழித்தார். தனது  மகளைத் தத்தெடுப்பேன் என்று தானாகவே எம்.ஜி.ஆர். முன்வந்தபோதும் ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் திட்டத்தை உடைத்துப் போட்டதற்கு அடிப்படையான காரணம் உண்டு. தத்தெடுக்கிறேன் என்று சொல்லி, தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதை உலகத்திற்கு அறிவித்து தன்னைப் பலவீனப்படுத்தவே எம்.ஜி.ஆர். முயற்சிக்கிறார் என்கிற இறுதியான முடிவிற்கு வந்தார் ஜெயலலிதா. ஆகவே ஜெயலலிதாவின் மகளை எம்.ஜி.ஆர். தத்தெடுக்கிற விவகாரம் அத்தோடு அடிபட்டுப் போனது. ஜெயலலிதாவின் மகள் வளர்ந்து திருமணமாகி அமெரிக்காவில் சகல வசதிகளோடும் வாழ்ந்த காலத்திலும், தனது அம்மாவை இவர்தான் அம்மா என்று சொல்லிக் காட்டமுடியாத சூழ்நிலை  -என்று விவரிக்கிறார் வலம்புரிஜான்.

 

எப்போதேனும், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் போயஸ் கார்டனுக்கு ரகசியமாக வந்து செல்லும் அந்தத் தம்பதியினர் அநேகமாக ஜெ.வின் மகளும் அவரது கணவருமாக இருக்கலாம் என்பதை அ.தி.மு.க.வின் சீனியர்கள் மூலம் அறிந்து நக்கீரன் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. "செல்வி' என்கிற பிம்பம் உடைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் ஜெ. அதனால்தான் தன்னுடைய மகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும், செட்டில்மெண்ட்டுகளையும் செய்து கொடுத்து, தாய்-மகள் உறவு வெளியே தெரியாதபடி இருக்கச் செய்தார் என்கிறார்கள் எம்.ஜி.ஆர். காலத்துக் கட்சிக்காரர்கள். இந்தப் பின்னணிகள் அனைத்தும் அறிந்தவர் சசிகலா மட்டும்தான். அவருக்குத்தான் ஜெ. மகளின் தற்போதைய நிலை குறித்து தெரியும் என்றும் அழுத்தமாகச் சொல்கிறார்கள்.-கீரன்<

கருத்துகள் இல்லை: