புதன், 13 டிசம்பர், 2017

கோவையில் வடமாநில ஏ.டி.எம் கொள்ளையர்கள்

ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள்!மின்னம்பலம் :கோவையில் ஏ.டி.எம்களில் தொடர்ந்து கைவரிசையில் ஈடுபட்டுவந்த வடமாநில கொள்ளையர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
கோவையில் கடந்த 24 நாள்களாகத் தொடர்ந்து ஏ.டி.எம்களில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஏடிஎம்களில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களா, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக எனக் கண்டறிய ஏழு தனிப்படை அமைத்து கோவை மாநகரக் காவல் துறை ஆணையர் பெரியய்யா உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி அதிகாலையில் கோவை பீளமேடு தண்ணீர்ப்பந்தல் சாலை, டைடல் பார்க் அருகே உள்ள ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம்மை உடைத்து ரூ.26 லட்சத்து 70 ஆயிரத்து 200-ஐ கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு ஏ.டி.எம். மையத்தின் மெயின் ஷட்டரை பூட்டிவிட்டுத் தப்பி சென்றுள்ளனர்.

பழுதின் காரணமாக ஏ.டி.எம். பூட்டியிருப்பதாக வந்த புகாரின்பேரில் நேற்று முன்தினம் (டிசம்பர் 11) மாலை வங்கி அதிகாரிகள் சென்று பார்க்கும்போது கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் பிறகு காவல் துறையில் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகரக் காவல் துறை ஆணையர் பெரியய்யா மற்றும் துணை ஆணையர் பெருமாள் தலைமையில் விசாரணை நடந்தது.
ஏ.டி.எம். அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும்போது அதில் அதிகாலை 2 மணிக்கு மூன்று பேர் கொண்ட கும்பல் காரில் வந்து ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைவதும், அரை மணி நேரம் கழித்து பணத்துடன் வெளியேறுவதும் தெரியவந்துள்ளது.
இதேபோல் பீளமேட்டில் தனியார் கல்லூரி அருகே உள்ள ஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம்மிலும் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தைக் கண்டறியக் கண்காணிப்பு கேமராவைப் பரிசோதித்துப் பார்க்கும்போது அதே கும்பல்தான் இந்தச் சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுபோல் கோவையில் நடந்த தொடர் கொள்ளைச் சம்பவங்களில் இந்தக் கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது.
ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உருவப்படம் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கிடைத்துள்ளது. இவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பெரியய்யா கூறும்போது, “தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலும் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இவை அனைத்திலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். இதற்காக அங்குக் கிடைத்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைச் சேகரித்து வருகிறோம். ஏ.டி.எம். தொழில்நுட்பத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் இந்தக் கும்பலில் இருக்கலாம் எனத் தெரிகிறது.
ஏ.டி.எம்மில் பணம் நிரப்பி உள்ள தகவல் அறிந்துகொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதால் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்” எனக் கூறினார்.
இதுபோன்ற தொடர் கொள்ளை சம்பவங்களால் பணி முடிந்து வீடு திரும்பும்போது அச்சமாக இருப்பதாகவும், இதனால் இரவு நேரங்களில் ரோந்து பணியைத் தீவிர படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: