திங்கள், 11 டிசம்பர், 2017

மாயாவதி : தலித் மீதான் அட்டுழியங்கள் தொடர்ந்தால் பவுத்த மதத்துக்கு மாறுவோம்!

மின்னம்பலம்: தலித்கள் மீதான அட்டூழியங்களை பாஜகவும் சங்க அமைப்புகளும் நிறுத்தவில்லை என்றால், அனைவரும் பவுத்த மதத்துக்கு மாறிவிடுவோம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவின் நாகபுரி நகரில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நேற்று (டிசம்பர் 10) பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தலைவர் மாயாவதி, “தன்னை நேர்மையான, வெளிப்படையான கட்சி என்று பாஜக நினைக்குமானால் இனி நாட்டில் நடைபெறவுள்ள அனைத்துத் தேர்தல்களையும் வாக்குச்சீட்டு மூலம் மட்டுமே நடத்த வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு தேவையில்லை” என்று கூறினார். “அம்பேத்கர்  1935ஆம் ஆண்டில். ‘நான் இந்துவாகப் பிறந்தாலும், இந்துவாக இறக்க மாட்டேன்’ என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்து மதத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள இந்து மதத் தலைவர்களுக்கு 21 ஆண்டுகள் அவகாசத்தையும் அவர் அளித்தார். எந்த மாற்றமும் நிகழாததால் 1956ஆம் ஆண்டு பவுத்த மதத்துக்கு மாறினார்” என்று குறிப்பிட்ட மாயாவதி, இதற்குப் பிறகாவது இந்து மதத்தின் பாதுகாவலர்கள் தலித் மற்றும் பின் தங்கிய மக்களுக்கு மரியாதை கொடுப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் சுரண்டல் இன்றும் தொடர்கிறது என வேதனை தெரிவித்தார்.

“தலித் இன மக்களை அவமதிக்கும் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளாவிட்டால் நானும் எனது கோடிக்கணக்கான தொண்டர்களும் இந்து மதத்திலிருந்து விலகி புத்த மதத்தைத் தழுவுவோம்” என பாஜக தலைவர்களுக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்த அவர், இது தொடர்பாகச் சிறிது கால அவகாசம் வழங்குவதாகவும் அதற்குள் இந்து மதத் தலைவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: