திங்கள், 11 டிசம்பர், 2017

மன்மோகன் சிங்: மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் ... குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் மீது வீண் பழி

தினத்தந்தி :பாகிஸ்தானுடன் சேர்ந்து காங்கிரஸ் சதிதிட்டமிடுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும் என மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார். புதுடெல்லி, காங்கிரஸை மையப்படுத்தி குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுவதாக பிரதமர் மோடி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தது பெரும் சர்ச்சையாகி உள்ளது.;நேற்று பனஸ்கந்தாவில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி பேசுகையில், அண்மையில் மணிசங்கர் அய்யர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு மந்திரி, இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை அழைத்து ரகசியமாக பேசியதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு 3 மணி நேரம் நடந்து இருக்கிறது.இதைத் தொடர்ந்துதான் மறுநாள் அவர் என்னை இழிபிறவி என்று அவமதித்தார். இது மிகவும் தீவிரமானதொரு வி‌ஷயம். 


மணிசங்கர் அய்யர் பக்கத்து நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் விளக்கம் அளிக்கவேண்டும்.  இதேபோல் பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் சர்தார் அர்‌ஷத் ரபிக், குஜராத் மாநில முதல்–மந்திரியாக அகமது பட்டேலை நியமிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். வேறொரு நாட்டு ராணுவத்தின் உளவு பிரிவில் முக்கிய பதவி வகித்தவர்கள் அகமது பட்டேலை முதல்–மந்திரியாக நியமிக்கவேண்டும் என்று ஏன் கூறுகின்றனர்?...என்றார். 

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி நடக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. பிரதமர் மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள மன்மோகன் சிங், மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.  பிரதமரின் குற்றச்சாட்டால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன் என கூறிஉள்ள மன்மோகன் சிங், பிரதமர் மோடியின் மறைமுக குற்றச்சாட்டு, பொய்யான தகவல்களை மறுக்கின்றேன். 

மோடி கூறுவது போல் மணிசங்கர் அய்யர் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் குஜராத் சட்டசபை தேர்தல் குறித்து யாரிடமும் நான் விவாதிக்கவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யாரும் தேச விரோத நடவடிக்கைகள் எதையும் தூண்டிவிட்டவர்களும் அல்ல என தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். 

மேலும், குஜராத் தேர்தலில் தோல்வி என்ற பயத்தின் காரணமாக விரக்தியில் இதுபோல் குற்றச்சாட்டுகளை மோடி சுமத்துகிறார். இது மிகவும் வேதனைக்குரியது. தனது குற்றச்சாட்டுகள் மூலம் பிரதமர் மற்றும் ராணுவ தலைவர் உள்ளிட்ட ஒவ்வொரு அரசியலமைப்பு அலுவலகத்தின் மீதும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முன் உதாரணத்தை மோடி ஏற்படுத்தி உள்ளார். பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் சமரச போக்கை கொண்டுள்ள ஒரு கட்சி மற்றும் பிரதமரிடம் இருந்து காங்கிரசுக்கு தேசபக்தி குறித்த அறிவுரை எதுவும் தேவையில்லை.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய போது, அதே நாட்டின் உளவுத்துறையை விமானப்படை தளத்தில் விசாரிக்க அனுமதி அளித்தது ஏன்? என்பதை பிரதமர் மோடி மக்களுக்கு முதலில் விளக்கவேண்டும். 

என்னுடைய 50 ஆண்டுகால பொது சேவையின் பதவுகளை அனைவரும் அறிந்ததே. இழந்த அரசியல் லாபத்தை சரிசெய்ய மோடி உள்ளிட்ட யாரும் நொண்டிச் சாக்கான கேள்விகளை என் மீது எழுப்ப முடியாது. மோசமான மற்றும் வரம்பு மீறிய சிந்தனைகளை வெளிப்படுத்திய பிரதமர் மோடி, தான் வகிக்கும் பதவியின் கண்ணியத்தை மீட்கும் வகையில், மக்களிடம் மன்னிப்பு கேட்பார் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டு உள்ளார் மன்மோகன் சிங்

கருத்துகள் இல்லை: