சனி, 16 டிசம்பர், 2017

பாஜக ஹெச்.ராஜா கைது! திருமாவளனுக்கு எதிராக விஷம பிரசாரம்

ஹெச்.ராஜா கைது!minnambalam :அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவை நாகை மாவட்ட காவல்துறையினர் வாஞ்சியூரில் கைது செய்தனர்.
கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், கோயில்களை இடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியது. ஆனால் தன்னுடைய கருத்து திரித்து வெளியிடப்பட்டு விட்டதாக திருமாவளவன் முழு விளக்கம் அளித்துவிட்டார். ஆனால் திருமாவளவனுக்கு எதிராக தொடர்ந்து பாஜகவினரும், இந்து அமைப்பினரும் ஆர்பாட்டம் நடத்தி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு காரைக்குடியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா, "திருமாவளவன் என்ன பெரிய ரவுடியா, வேட்டியை மடித்துக் கட்டினால் நானும் ரவுடிதான் என்று பேசினார்" இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் திருமாவளவனை எதிர்த்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறை இதற்கு அனுமதி மறுத்தது. ஆனாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஹெச்.ராஜா, நாகப்பட்டினத்திற்கு காரில் சென்றார். இவருக்கு நாகையில் கறுப்புக்கொடி காட்டுவதற்காக விசிகவினரும் தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் நாகைக்கு முன்னதாக வாஞ்சியூரில் ஹெச்.ராஜாவின் காரை மறித்த காவல்துறையினர், அவரைக் கைது செய்தனர். அவருடன் சேர்த்து பாஜகவினரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். ஏற்கனவே மயிலாடுதுறையில் நடைபெற்றது போல பாஜக-விசிக இடையே மோதல் ஏற்படக்கூடாது என்பதற்காக கைது செய்யப்பட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கைதுக்குப் பிறகு வேனில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய ராஜா, " தமிழ்நாடு காவல்துறையினர் தொடை நடுங்கியாக இருக்கிறார்கள், ஜனநாயக உரிமைப்படி நாங்கள் போராட முடிவதில்லை" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: