வியாழன், 3 ஆகஸ்ட், 2017

தயாரிப்பாளர் Vs தொழிலாளர்: திரை மறைவில் திடீர் யுத்தம்!

tamilthehindu : 1967 – ம் ஆண்டில் திரைப்படத் தொழிலாளர்களுடைய நலனுக்காக தொடங்கப்பட்டதுதான் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி). இந்த அமைப்பு 50 – வது ஆண்டு கொண்டாட்டத்துக்குத் தயாராக வேண்டிய நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கம் – பெப்சி தொழிலாளர்களுக்கு இடையே சம்பளப் பிரச்சினை தொடர்பாக வேலைநிறுத்தம் என்கிற நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.
திரைப்படத்துறையில் சங்கங்கள் உருவான பிறகு,கடந்த 25 ஆண்டுகளில் அவ்வப்போது பிரச்சினை எழுவதும், அது தொடர்பான வேலைநிறுத்தமும், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதும் தவிர்க்க முடியாததாகவே ஆகிவிட்டது.

முன்பு ‘ராமன் அப்துல்லா’படப்பிடிப்பு சமயத்தில் ‘பெப்சி’ தொழிலாளர்கள் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததை திரைப்பட உலகம் மறந்திருக்காது. அப்போது இயக்குநர், ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா ‘ராமன் அப்துல்லா’படப்பிடிப்பில் புகைப்படம் எடுத்தது பெரும் புகைச்சலாகி, அதைத் தொடர்ந்து உருவான 8 மாத திரைத்துறை வேலைநிறுத்தத்துக்குப் பிறகு, பெரிய அளவில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. அப்படியே சிறு சிறு பிரச்சினை முளைத்தாலும் அதையெல்லாம் ஊதி பெரிசாக்காமல், சுமுகமான தீர்வை எடுத்து தமிழ் திரையுலகம் எந்தப் பிரச்சினையுமின்றி போய்க்கொண்டிருந்தது.
இப்படியான ஒரு சூழலில்தான், இந்தமுறை சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற ‘பில்லா பாண்டி’என்ற படத்தின் படப்பிடிப்பில் கேமரா டெக்னீஷியன்கள் சம்பளம் தொடர்பாக எழுந்த சிறுபொறிதான், இன்று பெரிய அளவில் பிரச்சினை பூதமாக வடிவெடுத்துள்ளது.
தற்போது எழுந்துள்ள ‘பெப்சி’ தொழிலாளர்கள் சம்பள உயர்வு பிரச்சினைத் தொடர்பாக நேற்று ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘தயாரிப்பாளர்கள் சங்கமும், ‘பெப்சி’ சம்மேளனமும் கலந்து பேசி சுமூகமாக நல்லதொரு முடிவு காண வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ரஜினிகாந்தைப் போலவே திரையுலகம் எப்போதும் போல செழிப்போடும், பிரச்சினையின்றி இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இரண்டு பக்கங்களிலும் இருக்கத்தான் செய்கின்றனர். இருந்தாலும் இரு தரப்பினரின் காதுகளிலும் நலம்விரும்பிகளின் நல்வார்த்தைகள் புகவே இல்லை.

பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால், பிரகாஷ்ராஜ், ஆர்.கே.செல்வமணி
எந்தவிதமான சுமூக பேச்சுவார்த்தைக்கும் உடன்படாமல் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக விஷால், ‘பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலேயே எந்த இடையூறும் இன்றி படப்பிடிப்பை நடத்துவோம். அவ்வாறே படப்பிடிப்பு நடந்து வருகிறது’ என்று அறிக்கை விடுத்துள்ளார். மற்றொருபுறம் ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி, ‘ஒப்புக்கொண்ட சம்பளத்தை குறைக்கக்கூடாது. அரசிடம் முறையிட உள்ளோம்’ என்று பேட்டி அளித்துள்ளார்.
இப்படி இரு அமைப்பினரும் மாறி மாறி அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கும்வேளையில் நேற்று முன்தினம் முதல் திரைப்பட தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் தொடங்கியுள்ளது. இரு அமைப்புக்குள் நடக்கும் பிரதான பிரச்சினைகள்தான் என்ன?
பெப்சி அமைப்பின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கூறியதாவது :
பெரும்பாலான தமிழ்ப் பட நடிகைகள் மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்துதான் வரவழைக்கப்படுகிறார்கள். அவர்களிடம் சம்பளத்தைக் குறைப்பது பற்றி எந்தத் தயாரிப்பாளரும் பேசுவதில்லை. ஆனால், தினப்படி பெறும் ‘பெப்சி’ தொழிலாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். ஒருநாள் படப்பிடிப்பு நிற்பதால் ஒரு தயாரிப்பாளருக்கு ரூ.10 லட்சம் நஷ்டம் ஏற்படுகிறது. அதைப் பற்றிக்கூட கவலைப்படாமல் ‘பெப்சி’ தொழிலாளர்கள் எதிரி என்ற போர்வையில் வேலை பார்த்து வருகின்றனர்’’ என்றவர்,
‘‘ஒரு படத்தின் பிசினஸ் நிலையை வைத்து முன்னணி ஹீரோ ஒருவர் சம்பளத்தை தயாரிப்பாளர்களாகிய நாங்கள்தான் நிர்ணயிக்கிறோம் என்கிறார்கள். அதேபோல முன்னணி ஹீரோ ஒருவருடைய படத்தில் ஒரு கேமரா அசிஸ்டெண்ட் ஊழியர் செய்யும் ஜிம்மி ஜிப் வேலை நன்றாக இருந்தால் அடுத்தடுத்த படங்களுக்கும் அவரையே கூப்பிடுகிறார்கள். அந்த ஊழியர் தனது சம்பளத்தை உயர்த்தி கேட்டால், அது கூடாது என்கிறார்கள். என்ன நியாயம் இது? கடந்த ஆண்டில் படப்பிடிப்பு நடந்த 150 படங்களில் 110 படங்களுக்கு மட்டும்தான் ‘பெப்சி’ ஊழியர்கள் வேலை பார்த்தோம். மற்ற படங்களுக்கு வெளி ஆட்கள்தான் வேலை பார்த்துள்ளனர்.

விஷால்   -  The Hindu
ஸ்டுடியோவுக்குள்ளேயே படப்பிடிப்பு நடந்த காலகட்டம் இன்று இல்லை. காட்டிலும், தெருக்களிலும், நீரிலும், யாருக்குமே தெரியாத பல இடங்களிலும் ‘பெப்சி’ தொழிலாளர்கள் ஒருவர்கூட இல்லாமலும் சில இடங்களில் படப்பிடிப்பு நடக்கத்தான் செய்கிறது. அவற்றையெல்லாம் நாங்களும் பெரிதுபடுத்துவதில்லை. குறிப்பாக சமீபத்தில் வந்த ‘கோலிசோடா’, ‘காக்கா முட்டை’ மாதிரியான படங்கள் ‘பெப்சி’ தொழிலாளர்கள் இல்லாமலேயே படப்பிடிப்பு நடந்தது. ஆனால், அதை யாரும் தடுக்கவில்லை. ரூ.35 கோடி வாங்கும் ஒரு ஹீரோ தனது சம்பளத்தில் ரூ.2 கோடியை விட்டுக்கொடுப்பதால் கெட்டுப்போவதில்லை. அந்த 2 கோடி ரூபாய் இருந்தாலே அந்தப் படத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நிறைவான சம்பளத்தை கொடுக்கலாம். அதை ஹீரோவும் நினைப்பதில்லை. அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் நினைப்பதில்லை என்பதுதான் இங்கே வேதனை!’’ என்றார்.
மேக்கப் தேவையில்லாத படங்களுக்கும்கூட மேக்கப் மேன் யூனியன் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் ‘பெப்சி’ ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கிறதே என்று மேக்கப் யூனியன் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது,
‘‘ஒரு படத்தில் நடிக்கும் முன்னணி ஹீரோ அல்லது ஹீரோயின் தங்களுக்கு உதவியாளர்கள் என்ற பெயரில் 3 முதல் 4 பேரை அமர்த்திக்கொள்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தினப்படி வீதம் ரூ.7,000 முதல் ரூ.15,000 வரை தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து சம்பளமாக பெறுகிறார்கள். அதைப்பற்றி எந்தத் தயாரிப்பாளர்களும் கேட்பதில்லை. காரணம், ஹீரோ, ஹீரோயின் கால்ஷீட் பிரச்சினை ஏற்படுத்திவிடுவார்கள் என்பதற்காக. இந்த இடத்தில் தொழிலாளர்களை மட்டும் அவர்கள் எப்படி வதைக்கலாம் என்றும் சில பெப்சி நிர்வாகிகள் கேட்கிறார்கள்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த முன்னணி திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது,‘‘செடிக்கும் அதனூடே வளரும் கொடிக்கும் பிரச்சினை என்றால் என்ன செய்ய முடியும். அப்படித்தான் தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி அமைப்புக்கும் இடையே நடக்கும் பிரச்சினையும். தயாரிப்பாளர்கள்தான் முதலாளி. முதலாளிகள் இல்லாமல் தொழிலாளிகள் இல்லை. படப்பிடிப்பில் இருக்கும் ஒரு படத்தை நிறுத்துவது தவறு. எதற்காக சங்கம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதை தொழிலாளர்கள் உணர வேண்டும். தொழிலாளர்கள் பிரச்சினை, தேவைக்குக் குரல் கொடுக்கும்விதமாகவே தொடங்கப்பட்ட ஒரு அமைப்பு, இன்று வேறு திசையை நோக்கி செல்கிறது என்றார் அந்தத் தயாரிப்பாளர்.
திரைப்பட மக்கள் தொடர்பாளரும், எழுத்தாளருமான சுரா கூரும்போது, ’’பாரதிராஜா இயக்குநர் சங்கத்தின் பொறுப்பில் இருந்த காலகட்டம் அது. படப்பிடிப்புக்கு வரும்போது அந்தப்பட நாயகியின் காரை ஓட்டி வந்த டிரைவர் ஏதோ பிரச்சினையில் ஈடுபடுகிறார். படக்குழுவினரிடம் வந்து அந்த நாயகி அதை தெரிவிக்கிறார். உடனடியாக அந்த கார் டிரைவர் கண்டிக்கப்படுகிறார். தனது சங்கத்திடம் போய் அந்த டிரைவர் இதை முறையிட்டு ஒரு நாள் படப்பிடிப்பை நிறுத்தும் சூழலை உருவாக்குகிறார். இயக்குநர் பாரதிராஜாவுக்கு எதிராக அந்த சங்கத்தினர் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். இப்படி பிரச்சினையை உருவாக்கும் ஒரு ஊழியர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பது சரியா? சமீபத்தில் நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட சம்பவத்தில்கூட, ‘நான் திரைப்பட யூனியனைச் சேர்ந்த ஓட்டுநர்’ என்று சொன்ன ஒரு ஊழியர்தானே. இதுபோன்ற ஊழியர்கள் அடங்கிய சங்கம் எதற்கு?

ஸ்டண்ட் சங்கம் பிரச்சினை

அதேபோல, ‘கிழக்குச்சீமையிலே’ படப்பிடிப்பு நடக்கும்போது மாட்டு வண்டியில் ஒரு பாடலை படமாக்கினார்கள். அப்போது இருந்த ‘பெப்சி’ அமைப்பினர் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று, ‘இதுக்கு ஸ்டண்ட் யூனியன் ஆட்கள்தானே வேலை பார்க்கணும்’ என்று பிரச்சினை செய்தார்கள். ‘இது பாடல் காட்சி. அதுவும் மாட்டு வண்டியை வைத்து எடுப்பதற்கு ஸ்டண்ட் கலைஞர்கள் அவசியமே இல்லை’ என்று பாரதிராஜா தரப்பில் கூறினார்கள். ஆனால், தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபடவே செய்தனர். இந்தமாதியான சூழ்நிலைகளை எல்லாம் திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உருவாக்கக்கூடாது. ஆகவே, சங்கங்கள் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளும் விதமாகவும், நல்ல விதமான கோரிக்கைகளுக்காகவும் செயல்பட வேண்டுமே தவிர அராஜகங்களில் ஈடுபட அல்ல’’ என்றவர்,

முன்மாதிரியான கேரளா

‘‘இன்றைக்கும் கேரளாவில் ஆண்டுக்கு 20 சதவீத படங்கள்தான் தோல்வி படங்கள் என்ற பட்டியலுக்கு செல்கிறது. காரணம் இயக்குநர், கேமராமேன், எடிட்டர் தொடங்கி மேக்கப் மேன், காஸ்டியூம் அசிஸ்டெண்ட் வரைக்கும் வேலை தெரிந்தவர்களாக இருந்தால் மட்டுமே அங்கு வேலை செய்ய முடியும். அனுபவம் அங்கே ரொம்ப முக்கியம். தொழில் தெரியாதவர்கள் யாரும் உள்ளே வரவே முடியாது. ஆனால், இங்கே ரூ. 1 லட்சம் பணத்தை கொடுத்து உறுப்பினர்களாகிவிடுகிறார்கள். பிரச்சினை என்று வரும்போது கேட்டால், ‘நான் சங்கத்துக்கு ஆளு’ என்று மிரட்டுகிறார்கள்.
ஆரோக்கியமான சூழ்நிலை இன்றைய தமிழ் சினிமாவில் இல்லை. அதற்கு முக்கிய காரணம் அனுபவம் வாய்ந்த திரைப்பட முதலாளிகள், தொழிலாளிகளின் வரவு குறைந்ததே. சினிமாவை சூதாட்டமாக பார்க்கும் சூழலும் அதிகரித்துள்ளது. சினிமாவில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள், டெக்னீஷியன்கள், ஊழியர்களின் வருகை குறைந்ததும் இன்றைய பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாக உள்ளது!’’ என்றார்.
மேக்கப் பிரச்சினை
மேக்கப் தேவையில்லாத படங்களுக்கும்கூட மேக்கப் மேன் யூனியன் தங்கள் ஊழியர்களுக்கு  சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் பெப்சி ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கிறதே?  என்று மேக்கப் யூனியன் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது,
‘‘மேக்கப், காஸ்டியூம்ஸ் இல்லாத படம் இது என்று படப்பிடிப்புக்கு முன்பே தயாரிப்பாளர்கள் சங்கம் வழியே கடிதம் கொடுத்தால் நாங்களே அவற்றை தவிர்த்துவிடுவோம்.  ஆனால், இவர்கள் 3 நாட்கள் மேக்கப் இல்லாமல் படப்பிடிப்பை நடந்திவிட்டு  4 - வது நாள் அருகே உள்ள பியூட்டி பார்லர் ஆட்களை வைத்து மேக்கப் போட்டுக்கொள்கிறார்கள். அது தெரியவந்ததும்தான் நிர்வாகம் தலையிட வேண்டியுள்ளது!’’ என்றார்.
3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு
பெப்சி அமைப்பை சேர்ந்த கலை இயக்குநர் சங்கத்தின் செயலாளர் வீரசமர் கூறுகையில்,
‘இன்றைக்கு ஒளிப்பதிவாளர் சங்கம், நடன சங்கம், ஸ்டண்ட் சங்கம் மூன்றும் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பதாக செவி வழி செய்தியாக வருகிறது. இதேபோல நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமீர், ஜி.சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில்  இதேபோல பெப்சி, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இடையே பிரச்சினை நடந்தது. அப்போது பெப்சி அமைப்பின் கலை இயக்குநர் சங்கத்தில் உறுப்பினர் என்ற முறையில் நான் ஒருவன் மட்டும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஆதரவாக போனேன். அந்த பிரச்சினை முடிந்ததும் பெப்சி அமைப்பில் எனக்கு   ‘ரெட் கார்டு’ போட்டு வேலை செய்ய முடியாத சூழலை ஏற்படுத்தினார்கள். அந்த நேரத்தில் நான் ஆதரவாக போய் நின்ற தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த உதவியும் செய்யவில்லை. அவர்களில் சிலரது படங்களுக்குக்கூட என்னை கலை இயக்குநராக நியமிக்க யோசித்தார்கள். அதையெல்லாம் கடந்து  பல அடிதடி போராட்டங்களை நடத்தி ஒருவழியாக ‘கொம்பன்’ படத்தின் மூலம் மீண்டும் திரைத் தொழிலாளனாக உள்ளே வந்தேன். தற்போது கலை இயக்குநர் சங்கத்தின் செயலாளராக உள்ளேன். இந்தமாதிரியான சூழலில்தான் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்று தெரியாமல் இங்கே பல தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.  தொழிலாளர்களுக்கு நல்லது நடக்க வேண்டும். அவர்கள் வேலையில்லாமல் இருக்கக்கூடாது’’ என்றார்.
அவரே, ‘‘பெப்சி அமைப்புக்கு தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் யார் வந்தாலும்  மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை இவ்வளவு ஊதிய உயர்வு என்ற ஒரு நிலைப்பாட்டை எடுக்கலாம். அதைவிட்டுவிட்டு ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது ஒவ்வொருவர் பொறுப்புக்கு வருகிறார்கள். வந்ததும் அவர்களுக்கு முன்பிருந்த நிலைப்பட்டை மாற்ற முயற்சிக்கிறார்கள். புதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த நினைக்கிறார்கள் அதனால் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சில சங்கங்களிடம் அவ்வபோது கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில்,
‘‘தங்கள் படத்திற்கு யார் வேலை பார்க்க வேண்டும் என்று ஒரு தயாரிப்பாளரே முடிவெடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.  அவர்கள் சொல்லும் மேக்கப் மேன் விஷயத்திலும் அதுதான். நாங்கள் விரும்பிய மேக்கப்மேன்களை வேலைக்கு வைத்துக்கொள்ள எங்களுக்கு உரிமை உண்டு.  பெரிய நடிகர்களின்  சம்பளம் இவ்வளவு, அவ்வளவு என்று அவர்கள் பார்க்கத்தேவையில்லை.   பெரிய நடிகர்களின் உதவியாளர் சம்பள விஷயத்தை பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தங்களது உழைப்புக்கான ஊதியம் சரியாக் கிடைக்கிறதா? என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். கோலிசோடா, காக்காமுட்டை மாதிரியான படங்கள் பெப்சி தொழிலாளர்கள் இல்லாமல் வேலை பார்த்தபோது அனுமதித்திருக்கிறோம் என்கிறார்கள். அதையேத்தான் இப்போதும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்கிறோம். அவர்கள் செய்யும் வேலைக்கு கண்டிப்பாக ஊதியம் அளிக்க தயாராகவே இருக்கிறோம். செய்யாத நேரத்துக்கும் ஊதியம் அளிக்க தயாராக இல்லை. குறிப்பாக பெப்சி ஊழியர்கள் வேலை செய்யும் நேரத்துக்கு வாங்கும் ஊதியத்தைவிட வேலை செய்யாத நேரத்துக்கு வாங்கும் ஊதியம் அதிகமாக உள்ளது. அதை தவிக்க வேண்டும் என்று கூறுகிறோம். அதுக்கு அவர்கள் உடன்படவில்லை. அவர்கள் சங்கத்தை சேர்ந்த பல அமைப்பினர் இந்த விஷயத்தை புரிந்துகொண்டு அவர்களிடமிருந்து விலகியே நிற்கிறார்கள். சிலர் நடுநிலையும் வகிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: