வியாழன், 3 ஆகஸ்ட், 2017

எடப்பாடி கும்பல் சசிகலா கும்பலை அல்லது மோடி கும்பலை சந்திப்பது இயற்கையே ... குற்றவாளிகளே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி ... யார் யார் யாரெல்லாம் காரணம்?

தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமையில் அ.தி.மு.க கும்பல் நெளிகிறது. ஏ 1 இறந்த உடனேயே மன்னார்குடி கும்பல் சார்பாக சசிகலா இறக்கப்பட்டார். பிறகு காவிக் கும்பலின் ஆணைக்கிணங்க ஓபிஎஸ் கும்பல் தியானத்தோடு முக்கியது. பிறகு தினகரனை முன்னிறுத்தி எடப்பாடி பழனிச்சாமியை அரியணை ஏற்றினார்கள். அடுத்து ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது மூலம் தினகரன் கனவு கலைந்து திகாரில் சப்பாத்தி சாப்பிடச் சென்றார்.
இந்த களேபரத்தை வைத்து இரு அணிகள் இணைப்பு என்ற உப்புச் சப்பில்லாத ஊசிப்போன விவகாரத்தை வைத்து ஊடகங்கள் வாரக்கணக்கில் அரட்டை மன்றங்களை நடத்தின. தினகரன் உள்ளே போனது நல்லதே என்றிருந்த திவாகரன் கும்பல் ஏதும் கிடைக்குமா என்று அலைந்தது.
சிறையில் தனக்கு கிடைத்த வசதிகளோடு அ.தி.மு.க கும்பலை கட்டுக்கு கொண்டு வர சசிகலா முயலும் நேரத்தில் அவரது சிறை ஊழல் வெளியே வந்தது. இதற்கிடையில் அ.தி.மு.க கோஷ்டிகள் அனைத்தும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தாமரைக்கு கொடி பிடித்தன. ஓபிஎஸ், ஏபிஸ் கோஷ்டிகள் மாறி மாறி மோடியை தரிசித்து தாம்தான் பெரிய அடிமை என்பதை பீற்றினார்கள்.

வெளியே வந்த தினகரன் கும்பல் திவாகரன் கும்பலோடு ஒரு இழவு வீட்டில் ஒப்பந்தம் போட்டது. அதை ஏ 2 சசிகலா கும்பலிடம் ஒப்பதல் வாங்கி அடுத்த சுற்று ஆட்சிப் பிடிப்பு ஆட்டத்தை ஆரம்பித்தது. கமலஹாசனோடு மல்லுக்கட்டிய அமைச்சர்கள் கூடவே எடப்பாடி தலைமையில் செட்டிலாக கடும் பிரயத்தனம் செய்தார்கள்.
யார் சண்டை போட்டாலும் தினமும் கமலாலயத்திற்கு ஃபோன் போட்டு உள்ளேன் ஐயா சொல்லித்தான் வருகிறார்கள். இரட்டை இலைக்காக இக்கும்பல்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு பா.ஜ.கவும் நாக்கைத் தொங்கப் போட்டு காத்துக் கொண்டிருக்கிறது.
பணம்,போட்டி, ஊழல், குற்றம் அனைத்தும் ஒரே அலைவரிசையில் அணிவகுத்து நடக்கும் இப்பாரதப் போரில் எவர் வெல்வார்? எடப்பாடி அணியோ ஓபிஎஸ்ஸோடு ஏதோ ஒரு சுமூக உடன்பாடு வைத்துக் கொண்டு மன்னார்குடியை அடக்கவாசிக்க வைக்க முடியுமா என்று ஏங்கியது.
ஆக 5-க்குள் இணைப்பு இல்லையென்றால் தலைமை அலுவலகம் வந்து குந்துவேன் என்று தினகரன் கொக்கரிக்கிறார். இறுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், செல்லூர் ராஜு, திண்டுக்கள் சீனிவாசன் ஆகியோர் ஏ 2 குற்றவாளி சசிகலாவை சந்தித்து ஏதோ கொஞ்சம் பிரச்சினை ஆகியிருக்கிறது.
சிறையில் உள்ள சசிகலாவிடம் தமிழக முதலவரும், அமைச்சர்களும் ஆலோசனை கேட்டது, ரகசியக் காப்பு பிரமாணத்துக்கு எதிரானது என்றும் அதை தடை செய்ய வேண்டும், முதல்வர் – அமைச்சர்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் காலஞ்சென்ற கும்மாங்குத்து புகழ் தாமரைக்கனியின் மகன் ஆணழகன் வழக்கு தொடுத்தார்.
இம்மனு இன்று 2017 ஆகஸ்டு 3 அன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக முதல்வரும், சம்பந்தப்பட்ட அமைச்சர்க்ளும் பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசியலைமைப்புச் சட்டத்தின் படி பதவி ஏற்ற ஒரு முதல்வர் ரகசியக் காப்பு பிரமாணத்தை மீறுவது இருக்கட்டும். ஒரு ஊழல் குற்றவாளியை சந்திக்கச் செல்கிறார் என்பதே மாபெரும் தவறில்லையா? இன்னும் ஏ 1 குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தையும், பெயரையும் பல்வேறு அலுவலக மற்றும் நலத்திட்டங்களில் வைத்திருக்கிறார்களே அதன்படி பார்த்தால் இது என்ன ஏதோ பெட்டி கேஸ் போன்றதொரு தவறா?
ஏ 1 இறந்த போது பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள், மாநில முதலவர்கள் அனைவரும் வந்தார்களே, இதுவும் தார்மீக அடிப்படையில் பெரும் தவறில்லையா? ஏ 1 உயிரோடு இருந்த போது குன்ஹா தீர்ப்பு வந்த பிறகும் கூட பாஜக தலைவர்கள் பலர் போயஸ் தோட்டத்திற்கு வந்து பால்பாயாசம் சாப்பிட்டு சென்றார்களே அது தவறில்லையா? எடப்பாடிக்கு ஒரு நீதி, மோடிக்கு ஒரு நீதியா? இரண்டுமே அநீதிகள் எனும் போது இதில் என்னய்யா ரகசியம் காப்பு பிரமாணம் பிடுங்கல் எல்லாம்?
சசிகலா பொதுச்செயலாளர் ஆன பிறகு பல்வேறு அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், ஊடக முதலாளிகள், தொழில் செய்யும் முதலாளிகள் அனைவரும் அணிவகுத்து சென்று பொக்கே கொடுத்து விசமச் சிரிப்போடு போஸ் கொடுத்தார்களே அதன் பொருள் என்ன?
இது என்ன நாடு? இங்கு சட்டத்திற்கு என்ன மரியாதை? ஊழல் குற்றவாளிகளே கட்சிகளையும், மாநிலத்தையும் ஆளலாம் அதை அனைவரும் அங்கீகரிப்பார்கள் என்றால் இந்த நாட்டையே அதாவது இந்த அமைப்பு முறையையே தூக்கி எறிய வேண்டாமா?
ஊழல் குற்றவாளிகளை இந்த அமைப்பு முறை அரவணைக்கிறது. ஆராதிக்கிறது, பாதுகாக்கிறது. ஏ1, ஏ2 குற்றவாளிகளின் செல்வாக்கில் இருக்கும் அதிமுக கொள்ளைக் கூட்டத்தை தண்டிக்க வேண்டுமென்றால் அது நீதிமன்றத்தால் ஆகிற காரியமா?
மெரினா போன்றதொரு எழுச்சி இல்லாமல் இவர்களை எப்படி தண்டிப்பது யுவர் ஆனர்?
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

கருத்துகள் இல்லை: