சனி, 5 ஆகஸ்ட், 2017

BBC : டிடிவி தினகரன் நியமனத்தை ஏற்க மறுக்கும் அதிமுக நிர்வாகிகள்

அ.தி.மு.க. அம்மா அணிக்குள் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தும் விதமாக புதிய நிர்வாகிகள் பட்டியலை டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டார். ஆனால், அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்துள்ளனர். சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், அ.தி.மு.க. அம்மா அணியில் காலியாக உள்ள பொறுப்புகளுக்கும் கூடுதல் பொறுப்புகளுக்கும் சிலரை நியமனம் செய்து அறிவித்தார். இந்தப் பட்டியலில் அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர்களுமான பி. பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன், ஏ.கே. போஸ், சத்யா பன்னீர்செல்வம், பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. வி.கே. சசிகலாவின் ஒப்புதலுடன் அந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த சிலர் டிடிவி தினகரன் அறிவித்த பொறுப்புகளை ஏற்க மறுத்துள்ளனர். மதுரையில் சனிக்கிழமை காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருப்பரங்குன்றம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், ஏ.கே. போஸ் தான் பதவியேதும் கேட்கவில்லையென்றும் தன்னைக் கேட்காமலேயே தனக்கு விவசாயப் பிரிவின் இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் தனக்கு அது தேவையில்லை என்றும் கூறினார்.


புரட்சித் தலைவி அம்மா பேரவையின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பழனி, தன்னைக் கேட்காமலேயே இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதேபோல, மகளிர் அணியின் இணைச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்யா, தான் எடப்பாடி பழனிச்சாமியின் கீழ்தான் செயல்பட விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். டிடிவி தினகரனின் இந்த அறிவிப்பு அ.தி.மு.க. அம்மா அணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுகுறித்து அ.தி.மு.க. அமைச்சர்கள் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இது கட்சியினரிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் என குற்றம் சாட்டியிருக்கும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி. உதயகுமார், பொதுமக்களிடம் இந்தச் செயல் நகைப்பிற்குள்ளாகியிருப்பதாகவும் கூறினார். டிடிவி தினகரனுக்கு எதிரான வகையில் ஆரம்பம் முதலே கருத்துக்களைத் தெரிவித்துவரும் நிதியமைச்சர் ஜெயகுமார், பொதுச் செயலாளரின் நியமனமே நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் விவாதத்தில் இருக்கும் நிலையில், டிடிவி தினகரனின் துணைப் பொதுச் செயலாளர் பதவியும் அவர் நியமித்த நிர்வாகிகளின் நியமனமும் கேள்விக்குரியது என்று கூறியுள்ளார். தாங்கள் அறிவித்த நிர்வாகிகள் சிலர், அந்தப் பதவியை மறுத்திருப்பதால் டிடிவி தினகரன் தரப்பு அதிர்ச்சியடைந்திருக்கிறது.

இந்த சேதத்தை சரிசெய்யும்விதமாக செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன், சத்யா, பழனி ஆகியோரிடம் தொலைபேசியில் கேட்டு ஒப்புதல் பெற்ற பிறகே பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். தாங்கள் பொறுப்புகள் வழங்கிய பிறகு, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவர்களுக்கு எதிர் தரப்பு ஆசை வார்த்தை கூறுவதாக தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான வெற்றிவேல் குற்றம்சாட்டினார். ஆனால், அமைச்சர்கள் பேசுவதற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தொடர்பு இருப்பதாகத் தான் கருதவில்லையென்றும் அவர் கூறினார்.

கட்சிக்குள் தனது பிடியை வலுப்படுத்த நினைக்கும் டிடிவி தினகரன், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை அறிவித்திருக்கிறார். மாநில அரசின் செயல்பாடு குறித்த தனது கருத்தை, இந்தக் கூட்டங்களில் தெரிவிக்கப்போவதாக முன்பே தினகரன் தெரிவித்திருந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் அணியும் தமிழக அரசைக் கண்டித்து வரும் 10ஆம் தேதி தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை அறிவித்திருக்கின்றனர். இதனால், இரு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பைச் சந்திக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தர்மசங்கடமான நிலையை எதிர்கொண்டிருக்கிறார். முதலமைச்சர் பழனிச்சாமியைப் பொறுத்தவரை இதுவரை வெளிப்படையாக தினகரனுக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவிக்கவில்லையென்றாலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதைப் போல மாநிலம் முழுவதும் பொதுமக்களைச் சந்தித்து வருகிறார்.

"அ.தி.மு.கவின் இரு அணிகளுமே பா.ஜ.கவுக்கு மிகத் தீவிரமான ஆதரவைத் தெரிவித்துவரும் நிலையில், தினகரன் சிறிய அளவிலாவது அக்கட்சிக்கு எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறார். இது அவருக்கு தொண்டர்களிடம் ஆதரவைப் பெற்றுத்தரலாம். தொடர்ந்து வெளிப்படையாகவும் நேரடியாகவும் தினகரன் கருத்துக்களைத் தெரிவித்துவருவதும் பலரைக் கவனிக்க வைத்திருக்கிறது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான மணி. தினகரன் கட்டுப்பாட்டில் உள்ள நமது எம்.ஜி.ஆரில் பா.ஜ.கவுக்கு எதிரான கருத்துகள் அவ்வப்போது இடம்பெற்று வருவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், இதன் காரணமாக ஆட்சி கவிழ்ந்துவிடும் என எதிர்பார்க்க முடியாது என்கிறார் அவர். ஆட்சி கவிழந்தால், அ.தி.மு.கவின் மூன்று அணிகள், பா.ஜ.க. என யாருக்குமே அது சாதகமாக இருக்காது என்கிறார் அவர்.

கட்சி அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழையப்போவதில்லை என தினகரன் அறிவித்துவிட்ட நிலையில், மதுரை மாவட்டம் மேலூரில் தினகரன் தனது முதல் கூட்டத்தை நடத்தும்போது அவருக்குக் கிடைக்கும் வரவேற்பு, இந்த மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம். அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர்., ஜெயா தொலைக்காட்சி ஆகியவை தினகரன் தரப்பின் வசம் இருக்கும் நிலையில், அ.தி.மு.க. தொண்டர்களை எளிதில் அணுகும் வாய்ப்பு தினகரனுக்கே இருக்கிறது. வரும்காலத்தில் தன்னுடைய பண பலத்தையும் தினகரன் பெரிய அளவில் பயன்படுத்தக்கூடும். இதையெல்லாம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது இதுவரை தெளிவாகவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, உடனடியாக ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனால், ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்ற பிறகு, முதலமைச்சர் பதவியையும் அடையும் முயற்சிகளில் ஈடுபட்டார். இதையடுத்து பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்தார். அவருக்கு சில சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்தது. இதனால் பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்பட ஆரம்பித்தார். முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் அழைப்பிற்காக சசிகலா காத்திருந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியும் அறிவிக்கப்பட்டனர்.

இதற்குப் பிறகு, ஜெயலலிதா இறந்ததால் காலியான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதற்குப் பிறகு, அச்சின்னத்தை மீட்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு டிடிவி தினகரன், கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான விசாரணைகள் நடந்துவரும் நிலையிலேயே அவரை கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கிவைப்பதாக தமிழக அமைச்சர்கள் அறிவித்தனர். சிறையிலிருந்து வெளியிவந்த டிடிவி தினகரன், இரு மாதங்களுக்குப் பின் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார். அதன்படியே தற்போது புதிய நிர்வாகிகளை அறிவித்திருப்பதோடு, பொதுக் கூட்டங்களையும் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: