வியாழன், 3 ஆகஸ்ட், 2017

நீதி கேட்டு தர்ணா போராட்டம் நடத்துகிறார் ஒரு நீதிபதி !

அனைத்து விதமான சட்டரீதியான போராட்டங்களைக் கையில் எடுத்துப் பார்த்து விட்டு கடைசியில் எவ்விதப்பலனும் இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, நீதிபதி ஸ்ரீவாஸுக்கு. கடைசியில் தற்போது வீதியில் இறங்கியிருக்கிறார் நீதிபதி ஆர்.கே.ஸ்ரீவாஸ்
/மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள உயர்நீதிமன்ற வாயிலில் தர்ணா போராட்டத்தை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடங்கினார் மாவட்டக் கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஆர்.கே.ஸ்ரீவாஸ்.
கடந்த 15 மாதங்களுக்குள், தமக்கு நான்காவது முறை பணியிட மாற்றம் அளிக்கப்பட்டதைக் கண்டித்து இந்தத் தர்ணா போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் ஸ்ரீவாஸ். பதினைந்து மாதங்களுக்கு முன்பு மத்தியப்பிரதேசத்தின் தார் பகுதியில் பணியாற்றி வந்த ஸ்ரீவாஸுக்கு ஷாடொல் பகுதிக்கு இடமாற்றம் கொடுக்கப்பட்டது. சில மாதங்களுக்குள்ளாகவே அங்கிருந்து ஷோராவுக்கும், அடுத்த சில மாதங்களில் அங்கிருந்து ஜபல்பூருக்கும் மாற்றப்பட்டுள்ளார். இத்தகைய தொடர் பணிமாற்றத்தால் இவரது வாரிசுகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நகரில் படித்துவரும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

தற்போது ஜபல்பூர் உயர்நீதிமன்றத்தில் சிறப்புப் பணிக்கான அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இச்சூழலில் இங்கிருந்து ’நீமச்’-க்கு பணியிடமாற்றம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை தான் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் அந்த வழிகாட்டுதலை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை எனக் கொந்தளிக்கிறார் ஸ்ரீவாஸ். இது குறித்து உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதோடு உயர்நீதிமன்றப் பதிவாளரிடமும் முறையிட்டுள்ளார். ஆனால் எந்தப் பலனும், பதிலும் இல்லை.
அனைத்து விதமான சட்டரீதியான போராட்டங்களைக் கையில் எடுத்துப் பார்த்து விட்டு கடைசியில் எவ்விதப்பலனும் இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது நீதிபதி ஸ்ரீவாஸுக்கு.
கடைசியில் வீதியில் இறங்கியிருக்கிறார். ஜபல்பூர் உயர்நீதிமன்ற வாயிலில், இதற்கு எதிராகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். நீதிபதியாகப் பணியாற்றியவர் அல்லவா, இந்த அரசுக் கட்டமைப்பில் தீர்வு பெற எது வழி என்பதைத் தெரிந்திருப்பதோடு, அதனால் ஏற்படவிருக்கும் பின் விளைவுகளைப் பற்றியும் அவர் அறிந்தே வைத்திருக்கிறார்.
அது குறித்துப் பின் வருமாறு அவரே கூறியிருக்கிறார்.
“உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளைப் பின்பற்ற வேண்டியது தான் முறையானது. ஆனால் அது இங்கு நடைபெறவில்லை. அதற்கான எனது போராட்டத்தினால் என் வேலைக்கு நெருக்கடி ஏற்படும் என்பதையும் நான் அறிவேன். ஒருவேளை நான் கைது செய்யப்பட்டு சிறைக்கும் கூட அனுப்பப் படலாம். ஆனால் நான் அதற்கும் தயாராக இருக்கிறேன்”
ஒரு நீதிபதியே இந்த நீதித்துறையின் மீது நம்பிக்கையின்றி வீதிக்கு வந்த பிறகு இன்னமும் இந்தக் கட்டமைப்பின் மீது நாம் ஒரு நம்பிக்கை வைக்க முடியும் என்றால் அது மூடநம்பிக்கையைத் தவிர வேறென்ன?
செய்தி ஆதாரம்:  வினவு

கருத்துகள் இல்லை: