புதன், 2 ஆகஸ்ட், 2017

டில்லி to சென்னை சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் .. பறந்து வந்து பறிக்கும் கும்பல்

மாலைமலர் : விமானத்தில் பறந்து வந்து, சென்னையில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்த டெல்லி கொள்ளையர்கள் 2 பேர் வாகன சோதனையின் போது சிக்கினர். சென்னையில் கைவரிசை: விமானத்தில் பறந்து வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட டெல்லி கொள்ளையர்கள் சிக்கினர் சென்னை: சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் செயின் பறிப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. புதிது புதிதாக உருவாகும் கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபடுவதால் அவர்களை அடையாளம் காண்பதும் போலீசுக்கு சவாலாகவே உள்ளது.
வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து அவ்வப்போது குற்றவாளிகள் கைவரிசை காட்டுவது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. அந்த வகையில் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்து வந்து ஒரு கும்பல் செயின் பறிப்பில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. வடமாநில வாலிபர்கள் போன்ற தோற்றத்தில் தொடர்ந்து இளைஞர்கள் சிலர் ஒரே மோட்டார் சைக்கிளில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது போலீசுக்கு தெரிய வந்தது.
அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்தனர். இது தொடர்பாக பெரியமேட்டில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் டெல்லியைச் சேர்ந்த சஞ்சய், சந்தீப் ஆகிய 2 பேர் சிக்கினர். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்த இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இவர்களிடமிருநது விமான டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சஞ்சய், சந்தீப் ஆகிய இருவரின் கூட்டாளிகள் 2 பேர் தாங்கள் பறித்த செயினுடன் விமானத்தில் டெல்லிக்கு தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களோடு மேலும் 6 பேரும் சென்னை வந்து ஷிப்டு முறையில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட இந்த கும்பலை கூண்டோடு கைது செய்ய அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: