செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

விஜயகாந்த்: கலைஞர் ஆக்டிவ் ஆக இருந்திருந்தால் நிச்சயம் மாற்றம் காட்டியிருப்பார்.


கருணாநிதி ஆக்டிவாக இருந்திருந்தால்...

திமுக தலைவர் கருணாநிதி இந்நேரம் தீவிர அரசியலில் இருந்திருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டின் அரசியலே வேறாக இருந்திருக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இன்று ஆகஸ்டு 1 ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு விஜயகாந்த் அளித்துள்ள பேட்டியில்,
‘’திமுகவும், அதிமுகவும் ஒரு காலத்தில் எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களையும், நிர்வாகிகளையும் விலைக்கு வாங்கிக் கொண்டிருந்தார்கள். இப்போது உண்மையான உறுதியான நிர்வாகிகளும், தொண்டர்களும் என்னுடன் இருக்கிறார்கள். நான் தினமும் சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு செல்கிறேன். நிர்வாகிகளை சந்திக்கிறேன். அரசியல் நிலைமை பற்றி ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறேன். எங்கள் கட்சியை சில சேனல்கள் ஒரு சதவிகித கட்சி என்று கேலி பேசுகின்றன. நான் சில நாட்களுக்கு முன் கதிராமங்கலத்துக்கும், நெடுவாசலுக்கும் சென்றபோது மக்கள் எனக்கு அளித்த ரெஸ்பான்ஸ் என்னை நெகிழச் செய்தது. தேமுதிக மீது மக்கள் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

நாங்கள் இப்போது எங்கள் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலைகளை செய்து வருகிறோம். எங்கள் வியூகத்தை இப்போது தெரிவிக்கமாட்டோம்’’ என்று கூறியிருக்கிறார் விஜயகாந்த்.
’இப்போதிய எதிர்க்கட்சியான திமுகவின் செயல்பாடு எப்படி இருக்கிறது?” என்ற கேள்விக்குக் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
‘’இந்த அதிமுக அரசு தானாகவே கவிழும். தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ளும் ஒரே நோக்கத்தோடு ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். அதனால் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சியான திமுக 89 எம்..எல்.ஏ.க்களை வைத்திருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்தால் சுமார் 100 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பலத்தை வைத்துக் கொண்டு திமுக எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் சரியில்லாததால் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். திமுகவின் பின்னடைவுக்கு அவர் ஓய்வு பெற்றதும் ஒரு காரணம். இத்தனை வலுவான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் திமுக இருக்கும் நிலையில்... கருணாநிதி ஆக்டிவ் ஆக இருந்திருந்தால் நிச்சயம் ஏதேனும் ஒன்றை நடத்திக் காட்டியிருப்பார். ஆனால் இப்போது திமுகவின் செயல் தலைவராக இருக்கும் ஸ்டாலின் செயல் படாத தலைவராகவே இருக்கிறார். தினமும் எங்காவது சென்று கொண்டே இருக்கிறார். தன்னைச் சுற்றி கூட்டம் இருக்க வேண்டும் என்பதிலேயே அவர் குறியாக இருக்கிறார். ஸ்டாலின் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், ‘கூட்டமெல்லாம் இங்கே வருகிறது. ஆனால் ஓட்டுகள் எல்லாம் எம்.ஜி.ஆருக்கு போகிறது’ என்று ஒரு காலத்தில் கருணாநிதி சொன்னதை ஸ்டாலினுக்கு நினைவுபடுத்துகிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார் விஜயகாந்த்.
ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிய கேள்விக்கு பலமாக சிரித்துவிட்டு... ’’அவர் இப்படித்தான் சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரே நேரத்தில் சினிமா, அரசியல் என்ற இரட்டை குதிரைசவாரி மிகவும் கடினமானது’’ என்று பதிலளித்திருக்கிறார் விஜயகாந்த். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: