வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

BBC :ஆழ்கடல் மீன்பிடி சாத்தியமா? மீனவர்கள் தயக்கம்?

இலங்கை கடற்படையினரால் அடிக்கடி சிறைப்பிடிக்கப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு முறை நிரந்தரத் தீர்வு தரும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநிலங்களவையில் நேற்று அறிவித்தார்.
Image caption நடுக்கடலில் மீனவர்கள் இந்த நிலையில் ஆழ்கடல் மீன்பிடி முறை என்றால் என்ன? அந்த திட்டத்துக்கு தமிழக மீனவர்கள் தயாராக உள்ளனரா , என்பது பற்றி பிபிசி தமிழிடம் மீன் வளத் துறை நிபுணர்கள், மீனவர்களின் பிரதிநிதிகள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.ஃபெலிக்ஸ் கூறுகையில், "டிராலர்" எனப்படும் இழுவலை மோட்டார் படகுகள் மூலம் மீன்பிடிக்கும் முறை, தமிழகத்தில் நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமாக உள்ளது" என்றார். ஆனால், "கடல்வளம் அழிவதாகக் கூறப்படுவதால், இழுவலை டிராலர் படகுகள், இரட்டை மடிவலைகள் மூலம் மீன் பிடிக்க பல நாடுகள் தடை விதித்துள்ளன" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.


"ஆழ்கடல் மீன்பிடி முறைக்கும் அது தொடர்புடைய தொழில்நுட்பத்துக்கும் மாறுவதற்கு முதலீடு செய்ய மத்திய, மாநில அரசுகள் தயாராக உள்ளன. ஆனால், மீனவர்கள் இன்னும் அதற்கு மனதளவில் தயாராகவில்லை என்பதே உண்மை" என்கிறார் ஃபெலிக்ஸ். கன்னியாகுமரியின் தூத்தூரில் பல ஆண்டு காலமாகவே, ஆழ்கடலுக்குச் சென்று சுமார் ஒரு மாதம் படகில் தங்கியிருந்து மீன்பிடிக்கும் அளவுக்கு அங்குள்ள மீனவர்கள் மீன்பிடி சாதனங்களைக் கொண்டுள்ளதாக ஃபெலிக்ஸ் தெரிவித்தார். இதனால், தமிழ்நாடு மீன் வள பல்கலைக்கழகத்தின் பயிற்சி மையங்களை கன்னியாகுமரியிலும் தூத்துக்குடியிலும் நிறுவ மீன் வள பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

ஆழ்கடல் மீன்பிடிக்கும் முறையில் அந்த பகுதி மீனவர்களின் அனுபவம், பயிற்சி ஆகியவற்றை அறிந்து கொள்வோம். அதன் பிறகு மற்ற மாவட்டங்கலில் உள்ள மீனவர்களுக்கு அறிவுசார் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சியை வழங்குவோம்" என்கிறார் ஃபெலிக்ஸ். ஆழ்கடல் மீன்பிடிப்பு முறை தொடர்பாக வேறு சில அமைப்புகளும், விஞ்ஞானிகள் இடம்பெற்ற குழுக்களும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளன. தூத்துக்குடி துறைமுகத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சுமார் 500 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை கட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் இலக்கு நிர்ணயித்துள்ளன. ஆனால், "தமிழகத்தில் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை" என்கிறார் ஃபெலிக்ஸ். இது பற்றி அண்மையில் தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், படகுகள் கட்ட சர்வதேச ஒப்பந்தம் கோரப்படும் நடைமுறையை அரசு மேற்கொண்டுள்ளதாகவும் தமிழக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போதுள்ள கப்பல் கட்டும் துறைமுகத்தில், படகுகளைக் கட்டும் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

படகு வாங்க நிபந்தனை ஆழ்கடல் மீன்பிடிப்பு முறைக்கு மாற மீனவர்களுக்கான தகுதியை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயித்துள்ளன. அதன்படி, ஒரு மீனவரிடம் டிராலர் படகு இருந்தால் அதை முதலில் அவர் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்; குறிப்பாக, மீனவருக்கு ஒதுக்கப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகின் கட்டுமானத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட 12 மாதங்களில் 9 மாதங்களுக்கு முன்பாக, தனது டிராலர் படகை சம்பந்தப்பட்ட மீனவர் ஒப்படைக்க வேண்டும்; மீதமுள்ள மூன்று மாதங்களில் மீனவர்களுக்கு நிதியுதவிகளை அரசு செய்யும்; இந்த திட்டத்தின்கீழ் சேரும் மீனவர், சுமார் ரூ. 8 லட்சம் முதல் ரூ. 9 லட்சம்வரை முதலீடு செய்ய வேண்டும்;மீதமுள்ள தொகை வங்கிக்கடன்கள், அரசு மானியம் வடிவில் வழங்கப்படும்.

 நடைமுறை சிக்கல் ஆனால், வங்கிகள் கடன் வழங்க உத்தரவாதமாக சொத்துகளை அடகு வைப்பது போன்ற நடைமுறை கையாளப்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர். இது பற்றி மீன் வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "தமிழ்நாட்டைச் சேர்ந்த பாக் நீரிணையை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு சுமார் 500 படகுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது`` என்றனர். ``அங்குள்ள மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி படகு வாங்க வங்கிகளை அணுகினால், அவர்களுக்கு அதிக நிபந்தனைகள், அடமானம் கோராமல் விதிகளில் சலுகை காட்டி கடன் வழங்குமாறு தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்ட்) மூலம் கேட்டுக் கொள்ள அரசு தீர்மானித்துள்ளது" என்றும் அதிகாரிகள் கூறினர். யாருக்கு பலன்?


இலங்கை கடல் பகுதிக்குச் சென்று மீன்பிடிப்பதன் மூலம் கிடைக்கும் மீன் வளத்தை விட, தெற்கே உள்ள ஆழ் கடலில் ஏராளமான மீன் வளங்கள் உள்ளதாக மீன் வளத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், "ஆழ்கடல் மீன்பிடி மண்டலம்" என்ற புதிய சிந்தனைக்கு மீனவர்கள் மாறினால் அத்திட்டம் நிச்சயம் சாத்தியமாகும்" என வலியுறுத்துகிறார் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் ஃபெலிக்ஸ். வங்காள விரிகுடா கடலில் ஆழமாக செல்லச் செல்ல மீன் வளங்கள் அதிகமாக உள்ளது என்றும் இதை உணர்ந்தே தங்கள் பல்கலைக்கழகத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு என தனி துறை அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார். இந்த துறையில் சேரும் மாணவர்களுக்கும் எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்புகளும் உண்டு என்கிறார் ஃபெலிக்ஸ்.

 ராமேஸ்வரம்  மீனவர்களின் தயக்கம் :
பிபிசி தமிழிடம் , தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ கூறுகையில், ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தின் மூலம் ஒரு படகின் விலை ரூ. 80 லட்சம். அவ்வளவு நிதி வசதி மீனவர்களுக்கு கிடையாது என்கிறார். மேலும், "ஆழ்கடல் மீன் பிடிப்பு ஒப்பந்தங்கள் வெளிநாட்டு கப்பல்களுக்கு வழங்கப்படுகின்றன. அந்த கப்பல்களுக்கு தடை விதித்து, இந்திய மீனவர்களுக்கு மட்டுமே ஆழ்கடல் மீன்பிடி உரிமையை வழங்க வேண்டும்" என்கிறார் இளங்கோ. "படிப்படியாக மட்டுமே ஆழ் கடல் மீன்பிடி முறைக்கு இந்திய மீனவர்களால் மாற முடியும் என்பதால், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்காவது, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க இந்திய மீனவர்கள் சென்றுவர அனுமதிக்க வேண்டும்" என்று இளங்கோ கூறுகிறார். அதே சமயம், ராமேஸ்வரம் மீனவர் சங்க நிர்வாகி எமிரேட் "மாற்றத்தை மீனவர்கள் விரும்புகின்றனர்; அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் தர அரசு தயாரா?" என்று கேள்வி எழுப்புகிறார்.

கருத்துகள் இல்லை: