திங்கள், 21 நவம்பர், 2016

மீண்டும் வெள்ளம் ? கோமாவில் தமிழக அரசு! பேரழிவுக்கு தயாரா?


அரைமணி நேரம் விடாது மழை பெய்தால் அரை அடிக்கு  மழைநீர் தேங்கிவிடுகிறது. இதுதான் இன்றைய சென்னையின் உண்மை நிலை. வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக வானிலை மையம் அறிவிப்பதற்கு முன்னரே, “பருவமழையை சந்திக்கத் தயாராக இருப்பதாக’ அறிவித்தது சென்னை மாநகராட்சி.
100 ஆண்டுகள் பெய்யாத பேய் மழை, தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மூன்றே நாட்களில்  பெய்ததால்தான் யாரும் எதிர்பார்க்காத வெள்ளத்தில் மக்கள் சிக்கித்தவித்ததாக ஜெ. அரசு கடந்த ஆண்டு காரணம் கூறியது.
வானிலை மையம் அறிவுறுத்தியும் எந்தவித மான முன்ஏற்பாடுகளும் செய்யாமல் இருந்ததாலும், செம்பரம்பாக்கம் ஏரியை எந்தவிதமான முன்னறி விப்பும் இன்றி இரவு நேரத்தில் திறந்துவிட்ட தாலும்தான் பலநூறு பேர் மரணமடைந்தனர், லட்சக்கணக்கான மக்கள் ரொம்பவே நொந்து போயினர்.
அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வெள்ளப் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வர தன்னார்வலர்கள் உதவினர். வெள்ளத்திற்கு பிறகு அரசின் செயல்பாடுகள் குறித்தும், வெள்ளம் ஏற்பட்டதற்கான முக்கிய காரணங்கள் குறித்தும் பல அறிஞர்கள், பேராசிரியர்கள், நிபுணர்கள்  மீண்டும்  இத்தகைய வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, அரசுக்கும் மக்களுக்கும் எடுத்துரைத்தனர். அத்தகைய பேரழிவை  சென்னை எதிர்கொண்டு  ஒரு வருடம் நிறைவடையப் போகிறது. பருவமழை யும் தொடங்கிவிட்டது. மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் அ.தி.மு.க. அரசு, மீண்டும் வெள் ளம் வந்தால் அதனைச் சந்திக்கத் தயாராக இருப்ப தாகவும் சொல்லியிருக்கிறது. பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்ப தாகவும் சொல்லியிருக்கிறது.
கடந்த மழை வெள்ளத்திற்குப் பிறகு மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர்  தாக்கல் செய் திருந்த மனுவில் “செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் நிரம்பியதால், முன்அறிவிப்பு எதுவும் வெளியிடாமல், அரசு அதிகாரிகள் தண்ணீரை திறந்துவிட்ட னர். குடியிருப் புப் பகுதிக்குள் மழைநீர் புகுந்து பலர் மூழ்கிப் பலியானார்கள். பலரது வீட்டு உபயோகப் பொருட் கள், மோட்டார் வாகனங்கள் தண்ணீ ரில் மூழ்கி நாசமாயின. முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல்  தண்ணீரைத் திறந்த அதிகாரிகள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருந்தார். வழக்குப் பதிவு செய்ய போலீஸ் மறுத்ததையடுத்து நீதிமன்றம் சென்றார் ஆறுமுகம். நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரே விசாரணை தொடங்கியிருக்கிறது. இதைப்போன்று பலர் தொடர்ந்த வழக்குகளின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி அப்போதைய மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  மாநக ராட்சி ஆணையர் உட்பட 38 அரசுத்துறைகள்/சேவைத்துறை, நிறு வனங்களின்  அலுவலர்கள் அந்த கூட்டத்தில் பங்கெடுத்து இருக்கிறார் கள். உள்ளாட்சி அமைப்புகளின்  பணிக்காலம் முடிந்துவிட்டதால் சிறப்பு அதிகாரிகளின் கையில்தான் தற்போது சென்னை மாநகராட்சி இருக்கிறது. வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்தான பல்வேறு  நடவடிக்கைகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள் அதிகாரிகள். வெள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக நிதிகள் ஒதுக்கப்பட்டு, பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக சொல்கிறார்கள் அதிகாரிகள்.
சென்னையில் மீண்டும் ஒரு வெள்ள அபாயம் வருவதைத் தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள்  தேவை என்று பேராசிரியர் ஜனகராஜனிடம் கேட்டோம். “”சென்னையும் இதனை ஒட்டிய மாவட்டங்களும் அற்புதமான நீர்வளம் மிக்கவை. காஞ்சிபுரத் தில் 1942 ஏரிகளும், திருவள்ளூரில் 1646 ஏரிகளும் உண்டு. இவற்றில் சில மிகப்பெரியவை. நதிகளையொட்டி, பருவமழைக் காலங்களில் வரும் கடும் வெள்ளத்தை தேக்கும் நோக்கில் தொடர் வரிசையாக பிரம்மாண்டமான ஏரிகளும் உருவாக்கப் பட்டுள்ளன.
இந்த ஏரிகள் நீரைத் தேக்க பெரிதும் உதவியுள்ளன. இந்த ஏரிகள் நிறைந்ததும், அதன் உபரி நீர் வழிந் தோடி அதன் தாழ்வுப் பகுதியிலுள்ள அடுத்த ஏரியை நிறைக்கும்வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏரியும் நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்கும், அப்பகுதி உயிர்ச்சூழல் வளமுறுவதற்கும் காரணமாகும்.
நகரமும் கிராமமும் அல்லாத நகரை ஒட்டியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டதற்கு தாழ்வான பகுதிகளும், கழிவு நீரோடை அமைப்புகளும் கடுமையாக ஆக்கிரமிக்கப்பட்டதே காரணம். துரதிர்ஷ்டவசமாக வெள்ளத்தின்போது கட்டுப்படுத்தும் அமைப்புகள் சீர்கேடடைந்து அந்த ஏரிகள் முழுமையாக கைவிடப் பட்டும், தூர்வாராமலும் இருந்தன. அதோடு பெரும் பான்மையான நீர்ப்பிடிப்பு பகுதிகளும், வெள்ளச் சமவெளிகளும், நீரைக்கொண்டுவரும் கால்வாய்களும் பெரிதும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.
நகரம் மற்றும் நகரை ஒட்டிய  நக ரங்களின் நீரியல் நிலைகளை ஆய்வு செய்தல் அவசியம். காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின்  80 சதவிகிதத்துக்கும் மேலான பகுதிகள் நகர்மயமாகி வருவதால், இங்குள்ள  நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளிலிருந்து காக்கவேண் டிய அவசரத் தேவை இருக்கிறது. ஏரிகள், குளங்கள் மட்டுமல்ல… நீர்ப்பிடிப்பு பகுதிகள், நீர் நுழைவுப் பகுதிகள், மிகுதி நீரை வெளியேற்றும் கால்வாய்கள், வெள்ளம் வெளியேறும் கடற்கரையோரப் பகுதிகளும் அதேயளவு முக்கியமானவை. இவற் றையும் ஆக்கிரமிப்பிலிருந்து காக்கவேண்டும். இவற்றைக் காக்க குறுகியகால, நீண்டகால செயல் திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். அவற்றைப் பாதுகாத்து, பராமரிக்க சட்டப்பூர்வமான வரைமுறைகளை உருவாக்குவது மிக முக்கியம். குடிமை சமூக குழுக்களை ஏற்படுத்தி நீர்நிலைகளை கண்காணிப்பதற்கான அமைப்புகளாக  அவற்றை நியமிக்கவேண்டும்” என்கிறார் சமுதாய அக்கறையுடன்.
“”கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பின்போது மக்களால்  தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதி நிதிகளின் செயல்பாடுகளை இந்த தமிழகமே பார்த் தது. ஆனால் இந்தமுறை சிறப்பு  அதிகாரிகள் கையில்தான் உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின் றன. உள்ளாட்சி பிரதிநிதிகளை தொடர்பு கொள் வதே மிகுந்த சிரமமாக இருக்கும் நிலையில்  சிறப்பு அதிகாரிகளை தொடர்பு கொள்வது அதைவிட சிரமமாக இருக்கும். வேறு ஒரு பணியில் இருப்பவர் களுக்கு கூடுதல் சுமையாகவே இந்த சிறப்பு அதி காரிகள் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது.  ஒருவேளை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால்  இந்தமுறை சிறப்பு அதிகாரிகள்தான் முழுவேகத்தில் செயல்பட வேண்டும்” என்கிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தமுறை மழை அளவு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சமூக வலைத்தளங்களில் வானிலை குறித்து துல்லியமாக முன்அறிவுப்புகளை வெளியிட்டு வரும் பிரதீப்ஜானிடம் பேசினோம். “”ஒவ்வொரு பருவமழை காலத்திலும் கனமழை பெய்யும். ஆனால் எல்லா கனமழையும் வெள்ளமாக மாறாது. இந்தமுறை டெல்டா பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. வட தமிழகத்தைப் பொறுத்தவரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. டிசம்பர் மாதத்திலும் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது” என்றார் அவர்.
கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பிற்குப் பின்னர் பி.பட்டசார்யா தலைமையிலான நாடாளுமன்றத் தின் உள்துறை விவகாரங்களுக்கான கூட்டுக்குழு சமர்ப்பித்த அறிக்கையில் வெள்ள பாதிப்பிற்கான காரணத்தையும், அரசு அதனை எந்த அளவிற்கு கையாண்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருக் கிறது. அதில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ள பகுதிகளில் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய் யப்பட்டிருப்பதாகவும் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டி டத்தை அகற்ற மாநில அரசை வலியுறுத்தியிருக்கிறது. மேலும் சென்னை மாநகருக்குள் கழிவுநீர் தேங்காமல் இருப்பதற்கு தொடர்ச்சியாக சுத்தம்செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும். 100 ஆண்டுக்கு ஒருமுறை பெய்யும் மழை காரணமாக அதிக அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லு வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் விஷயங் களை கருத்தில்கொண்டு மாநில அரசு எந்த மாதிரி யான நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பாதிக்கப் பட்ட மக்களுக்கு மத்திய அரசால் கொடுக்கப்பட்ட 5000 ரூபாய் நிவாரணத் தொகையே இன்னும் பல்லாயிரம் பேருக்குச் சென்று சேராமல் இருக்கிறது. அடுத்த சோதனையைச் சந்திக்கக் காத்திருக் கிறார்கள் சென்னைவாசிகள். எத்தகைய பேரழிவை ஏற்படுத்தப் போகிறதோ அது?
-சி. ஜீவாபாரதி nakkeeran

கருத்துகள் இல்லை: