வியாழன், 24 நவம்பர், 2016

கறுப்புப் பணம் பொருளாதாரத்தை காப்பாற்றியது ?- உலக வங்கி ஆலோசகரின் லாஜிக்!

கறுப்புப் பணம்ழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்றதும், கூடவே புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் தாள்களை புழக்கத்தில் விட்டதும் என கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டு  ஒரே இரவில்  இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்த திட்டமிட்டு பல அதிரடி நடவடிக்கைகளை நரேந்திரமோடி அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் எதுவும் அரசின் தற்போதைய பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியத்திடம் விவாதிக்கப்படாமலே முடிவெடுக்கப்பட்டது இங்கே கவனிக்கவேண்டியது. ஆனால், 2015-ம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் எடுக்கப்பட்ட கணக்கின் படி பொருளாதாரம் 7.4% அதிகரித்து  ஏறுமுகத்தில்தான் இருந்திருக்கிறது என்கிறார் உலக வங்கியின் பொருளாதார ஆலோசகர் கௌசிக் பாசு. இவர், இந்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகரும் கூட.

கறுப்பு பணம்தான் மறைமுகமாக நம் பொருளாதாரத்தைக் காப்பாற்றி வருகிறது என்பதுதான் அவரது அதிரடி விளக்கமாக இருக்கிறது. அதன் அடிப்படையில், இப்போது அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைகள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களை இன்னும் பாதிக்குமே தவிர கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களாகத்தான் இருப்பார்கள் என்பது கௌசிக் பாசுவின் வாதம். முக்கியப் பதவியில் இருக்கும் ஒருவர் இப்படியான கருத்துகளை முன்வைப்பது ஆச்சரியமளிக்கிறது.
“உலகின் பெரிய வல்லரசுகளின் வங்கிகள் கூட பெரும் சரிவுகளைச் சந்தித்த நிலையில் கூட எந்த விதப் பிரச்னைகளையும் சந்திக்காமல்  இந்திய வங்கிகள் இன்றளவும் இயங்கிக் கொண்டிருப்பதற்குக் காரணம் ஆங்காங்கே நடக்கும் சின்னச் சின்ன லஞ்ச ஊழல்கள்தான். இந்தியா ஒன்றும் பொருளாதார வலுமிக்க நாடு இல்லை. பொருளாதாரம் பற்றி அதிகம் பேசத் தொடங்கியது கூட 2008-ம் ஆண்டுதான். அப்போது 9% பொருளாதார வளர்ச்சியை நாடு எட்டிய பிறகுதான் இது பற்றிப் பேச ஆரம்பித்தோம்.  2002 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில்தான் சொத்துகள் 16% விலை உயர்வை எட்டியது, இது அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் அதிகம்.  இத்தனைக்கும் அந்த காலகட்டத்தில் மக்களின் சராசரி வருவாய் கூட அப்படியேதான் இருந்தது, மேலும் இந்தியாவில் மட்டும்தான் பத்திரத்தில் ஒரு விலையும் பரஸ்பரம் தனிநபர்கள் பேரத்தில் ஒரு விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் விற்பவருக்கு வரி குறைந்து பணம் மிச்சமாகிறது. வாங்குபவருக்கும் சொத்துவரியில் பணம் மிச்சப்படுகிறது. இந்த மிச்சப்படும் பணம்தான் இந்தியாவில் கறுப்புப் பணம். இதனால் மறைமுகமாக, சொத்துகளின் மீது வங்கிகள் தரும் அடமானக் கடனும்  ஒரு வகையில் குறையும். மற்ற நாடுகளில் இதே சொத்துக்கு 100% அல்லது 110% அடமான கடன் நிர்ணயித்த வங்கிகளும் உண்டு. அதனால் சரிவுகள் ஏற்பட்ட காலங்களில் சொத்து மதிப்புடன் சேர்ந்து வங்கிகளின் பேலன்ஸ் ஷீட்டுகளும் சரிந்தன. ஆனால் இந்தியாவில் 2008-2009-ம் ஆண்டில் விலைச் சரிவு ஏற்பட்ட நிலையில் கூட வங்கிகளால் ஆரோக்கியமான சூழலில் செயல்பட முடிந்தது”
“இந்தியா சந்தித்த பெரும் பொருளாதார இழப்புகள் கூட உலகளாவிய பொருளாதாரச் சரிவால் ஏற்பட்டதே ஒழிய இப்போது ஏற்பட்டிருப்பது போல இந்தியாவே ஏற்படுத்திக் கொண்டதல்ல. இருந்தும் 2009- 2011 காலகட்டத்தில் 8% வளர்ச்சியை அடைந்ததன் மூலம் நிலைமையிலிருந்து மீண்டு வர முடிந்தது. அதற்காக நான் லஞ்சத்தையும் ஊழலையும் ஆதரிக்கின்றேன் என்றில்லை. அம்மை நோய் வந்தால் நம் உடலுக்கான எதிர்ப்பு சக்தியை  அது அதிகரித்துவிட்டுச் செல்வது போலதான் இந்த ஊழல் பிரச்னையும். ஆனால் ஊழலை ஒழிக்க என்ன வழி? தந்திரமான வாதமாக இருந்தாலும், அதிர்ச்சி அளிக்கும் விதமாக லஞ்சத்தையே சட்ட ரீதியாக ஆக்கலாம்” என்கிறார்.
ரோமானியா போன்ற பொருளாதார வலுவிழந்த நாடுகள் பண சுழற்சிக்காகச் செய்யத் திட்டமிட்டிருப்பது இதனைதான். பணமுடக்கத்தால் நாட்டின் பண சுழற்சி நின்றுபோகும் நிலையில், நாமே கூட அப்படியான சூழலுக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்கிறார் நெத்தியடியாக.
அவர் கூறுவதில் நியாயதர்மம் பார்க்கவேண்டாம். பொருளாதாரம் ஒன்றும் ஒழுக்கக்கல்வி இல்லையே!  vikatan.com

கருத்துகள் இல்லை: